ஸ்ரீரமணார்ப்பணம்-2

பயம் பெரிதாயிற்று. விலக்க விலக்க வேகமாய்ப் பற்றிக் கொண்டது. உட்கார முடியவில்லை. வேண்டாம் என்று உதறி எழுந்துவிடலாமா? மனம் பின்னடைந்தது. இல்லை; விடமாட்டேன். என்ன என்று தெரியாமல் விலகமாட்டேன்.
இறந்து போவது என்றால் என்ன? இறந்து போவது என்றால், நீட்டிப் படுக்க வேண்டும்.
அவன் சட்டென்று கால் நீட்டிப் படுத்துக்கொண்டான். உடம்பை விறைப்பாக்கினான். இப்போது உடம்பு செத்துவிட்டது. இந்த உடம்புக்கு மரணம் வந்துவிட்டது. நான் இறந்துவிட்டேன். கொண்டுபோய் தகனம் செய்யப் போகிறார்கள். அண்ணாதான் மறுபடியும் நெருப்புச்சட்டி தூக்கிக்கொண்டு போகவேண்டும்.
ஆடி ஆடித் தூக்கிக்கொண்டுபோய், சுடுகாட்டில் வைத்து விறகு அடுக்கி, கொளுத்திவிடுவார்கள். இந்த உடம்பு மெள்ள மெள்ள நெருப்புப் பட்டு சாம்பலாகிவிடும். ஒன்றுமே இருக்காது. உடம்பு காணாமல் போய்விடும். எது இருப்பதால் நான் இருக்கிறேன்? எது இருப்பதால் நான் படுத்திருக்கிறேன்? எது இல்லாது போனால் நான் இறந்து விடுவேன்?
வேங்கடரமணன் உற்று ஆழ்ந்து, எது இருக்கிறது என்று பார்த்தான். அவனது மூச்சில் மாறுதல் ஏற்பட்டது. மனம் அடங்க, மூச்சும் அடங்கும். மூக்கில் இருந்து ஓரடி தூரம் வெளிவருகின்ற காற்று மெள்ளச் சுருங்கிற்று. உள்ளுக்குள் ஆழ்ந்து எது இருக்கிறது என்று பார்க்க, மூச்சு விடுவது மூக்கின் எல்லைவரை இருந்தது. இன்னும் ஆழ்ந்து எது இருக்கிறது, எது இழந்தால் மரணம் என்று உற்றுப் பார்க்க, மூச்சானது மேல்மூக்கு வரை நின்றது.
அட, இதோ... இந்த இடத்தில்தான், இந்த இடத்தில்தான் ஏதோ இருக்கிறது. அதனுடைய இருப்பால்தான் உடம்பின் எல்லா விஷயங்களும் ஆடுகின்றன. இன்னும் உற்றுப் பார்க்க, மூச்சானது வெளியே போகாமல் தொண்டைக் குழியில் இருந்து நுரையீரலுக்குப் போயிற்று; நுரையீரலில் இருந்து தொண்டைக்குழிக்கு வந்தது; தொண்டைக்குழியில் இருந்து நுரையீரலுக்குப் போயிற்று. இன்னும் உற்று ஆழ்ந்து பார்க்க, வேங்கடரமணன் உடம்பு வேகமாக விறைத்தது. உடம்பில் உள்ள மற்ற புலன்களின் ஆதிக்கங்கள் தாமாய் இழந்தன. ரத்த ஓட்டம் வேறு மாதிரியான கதிக்குப் போயிற்று. இறந்தபோது ஏற்படும் விறைப்புத்தன்மை உடம்பில் சட்டென்று ஏற்பட்டது.
அவன் அந்நியமாக நின்று வேடிக்கை பார்த்தான். மூச்சானது, இப்போது மெள்ள நுரையீரலில் இருந்து சிறிது தூரம் வெளிப்பட்டு, மறுபடியும் நுரையீரலுக்குப் போயிற்று. மூக்குக்கு அருகே, தொண்டைக்கு அருகே வராமல், மூச்சுக் குழாய் அருகே சிறிது தூரம் போய்விட்டு மறுபடியும் பின்திரும்பியது. மூச்சு இருந்தது; ஆனால் முழுவதுமாக இல்லாது, ஒரு காளையின் கொம்புபோல அதே அளவுடன், சிறிது வளைவுடன் மூச்சு சில அங்குலங்கள் எகிறி, மறுபடியும் நுரையீரலுக்கு வந்தது.
மனம் அடங்க, மூச்சும் அடங்கும். மூச்சு அடங்க, மனமும் அடங்கும். இரண்டு காளைக் கொம்புகளாய் மூச்சு அசைந்துகொண்டிருந்த போது, சட்டென்று உள்ளுக்குள்ளே பேரொளி ஒன்று தோன்றியது. தாங்கமுடியாத அதிர்ச்சி வந்தது. இரண்டு மூச்சுக்கு நடுவேயும், இரண்டு காளைக் கொம்புகளுக்கு நடுவேயும் ஏதோ ஒன்று பிரகாசமாக ஆடியும் ஆடாமலும், அசைந்தும் அசை யாமலும் மிகப் பொலிவோடு நின்றுகொண்டு இருந்தது. எண்ண ஓட்டங்கள் சில்லென்று நின்றன. அது... அந்தப் பேரொளி எண்ணத்தை விழுங்கியது.
எண்ணம் விழுங்கப்பட, 'நான்' என்ற அகந்தையும் உள்ளே விழுங்கப் பட்டது. 'நான்' என்கிற எண்ணம் காணாமற்போக... பேரொளியே தானாகி, வேங்கடரமணன் கிடந்தான்.
இதுவே நிரந்தரம்; இதுவே முழுமை; இதுவே இங்கே இருப்பு; இதுவே இங்கு எல்லாமும். இதுவே முதன்மை; இதுவே சுதந்திரம்; இதுவே பரமானந்தம்; இதுவே பூமி; இதுவே பிரபஞ்சம்; இதுவே அன்பு; இதுவே கருணை; இதுவே அறிவு; இதுவே ஆரோக்கியம்; அனைத்து இடங் களிலும் நீக்கமற நிறைகின்ற அற்புதம். இதுவே எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.
மூடிய கண்களில் பெரிய வெளிச்சம், மூடாத காதுகளில் ரீங்காரம், உடம்பு முழுவதும் புல்லரிக்க வைக்கும் தகதகப்பு, புத்தியில் ஒரு திகைப்பு, உள்ளங்காலில் ஒரு சுகவேதனை; ஆசனவாய் இழுத்துச் சுருங்கிக் கொண்டு, கழுத்துவரை ஒரு சக்தியைத் தள்ளி அனுப்புகிறது.
முதுகுத் தண்டில் ஒரு குடையல், நெஞ்சுத் துடிப்பில் நிதானம், இருதயத்தில் அழுத்திய கனம், தொண்டையில் ஒரு சுழல், நெற்றியில் ஒரு குறுகுறுப்பு, உச்சிமண்டையில் ஒரு அக்னி, ஆஹா ஆஹா... எல்லா இடமும், எல்லா உயிரிலும் நீக்கமற நிறைந்திருக்கிறதே! அதுவே அதுவே.. வேங்கடரமணனின் மனம் மெள்ள விழித்துக்கொண்டு அலறியது.
உணர்வு திரும்பி எழுந்திருக்க, அரைமணி நேரம் ஆயிற்று. வேங்கடரமணன் எழுந்து சப்பணமிட்டு உட்கார்ந்துகொண்டான். எதிரே இருந்த சுவர் பார்த்து வெறுமே அழுதான். பிறகு, காரணமின்றிச் சிரித்தான். மீண்டும் அழுதான். எழுந்து நின்று சுவர் மூலையில் சாய்ந்துகொண்டான்.
தள்ளாடி, வாசல் நோக்கி நகர்ந்தான். வேகமாகத் தாவி ஏறும் மாடிப்படி, அன்று பார்க்க பயமாக இருந்தது. உருண்டு விழுந்து விடுவோமோ என்று தோன்றியது.
'என்ன நடந்தது எனக்கு, என்ன நடந்தது எனக்கு...' ஒவ்வொரு படியாய் மெள்ள இறங்கி வந்தான். உள்ளே இருப்பது நான். அதுதான் நான். ஒரு படி இறங்கினான். இந்த உடம்பு நான் அல்ல. இந்த புத்தி நானல்ல. என் சக்தி நானல்ல. என் மனம் நானல்ல. ஒவ்வொரு படி இறங்கும்போதும், அவனுக்குள் தெள்ளத் தெளிவாய் விஷயம் புரிந்தது. உள்ளே பேரொளியாய், சுடராய் இருக்கிற அதுவே நான். அதுவே எல்லார் உள்ளும்... எனக்குள் இருப்பதே எல்லா இடத்திலும் இருக்கிறது. நான்தான் அது. நான்தான் சித்தி, நான்தான் சித்தப்பா, நான்தான் அண்ணா, நான்தான் தெரு நாய், நான்தான் வண்டு, நான்தான் பசு மாடு, நான்தான் மாடப்புறா, நான்தான் எல்லாமும்.
ஒருமை எப்படிப் பன்மையாகும்? இது மிகப் பெரிய தவறு. நான் என்பது எல்லாவிதமாகவும் விளங்கியிருக்கிறபோது, எல்லாமுமாய்ப் பிறந்து இருக்கிறபோது, எனக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்? என்ன வேறுபாடு? ஒருமை எப்படிப் பன்மையாகும்?
பத்தாவது படியில் இறங்கி நின்றான். மாடிப்படி திரும்பினான். சிரித்தான். இதை யாரிடம் போய்ச் சொல்வது? இப்படி நடந்தால் என்ன அர்த்தம் என்று எவரிடம் விளக்கம் கேட்பது? நான் சரியாகப் புரிந்துகொண்டு இருக்கிறேனா? எனக்கு ஏதோ நடந்தது... அது சரியாக நிகழ்ந்ததா? தூக்கமா, பிரமையா அல்லது உள்ளுக்குள் இருப்பதுதான் வெளிப்பட்டதா? அவன் இறங்கி நடந்து கோயிலுக்குள் போனான். மதுரை சுந்தரேஸ்வரரைப் பார்த்துக் கைகூப்பினான். அந்தக் கைகூப்பலில் நன்றி இருந்தது; நெகிழ்வு இருந்தது; சந்தோஷம் இருந்தது; அமைதி இருந்தது; அன்பு இருந்தது; ஒரு ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடிற்று.
எல்லாம் கரைந்து மனம் முழுவதும் ஒன்றாகி, அவன் மறுபடியும் ஸ்வாமியை நமஸ்கரித்தான். மறுபடியும் போய் அவ்விதமே ஆழ்ந்து உட்கார்ந்துகொள்ள வேண்டும்; அல்லது, படுத்து அந்த அனுபவத்தை மறுபடியும் அனுபவிக்க வேண்டும் என்று தோன்றியது.
'மீண்டும் நீங்க வரணும்' என்று மதுரை சுந்தரேஸ்வரரை கைகூப்பி இறைஞ்சினான். ஊர் முழுவதும் சுற்றிவிட்டு வீடு திரும்பும்போது, ஒரு காலியான பாத்திரம்போல வேங்கடரமணன் நடந்தான்.
அந்தப் பாத்திரம் நிரம்ப... இறையருள் காத்திருந்தது.
தன்னைச் சுத்தம் செய்துகொள்வது என்பது எல்லோருக்கும் நடப்பது இல்லை. வெகு சிலருக்கே நிகழ்கிறது. அப்படி நடந்தவருக்குத்தான் ஞானி என்றும் மகான் என்றும் பெயர்.
வேங்கடரமணன் என்கிற அந்த பதினாறு வயது இளைஞன் பிறகு ஸ்ரீரமண மகரிஷி என்று அழைக்கப்பட்டார். பகவான் என்று கோடிக்கணக்கானோர் அவரை வணங்கினார்கள்.
வேங்கடரமணன் பிறந்த ஊர் திருச்சுழி. ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு அடங்கிய சிறிய ஊர். சுற்றிலும் பொட்டல் காடு. வானம் பார்த்த பூமி. ஆனால், அங்கே அழகான சிவன் கோயில் ஒன்று இருந்தது.
உலகில் பிரளயம் ஏற்பட்டபோது, சிவன் சூலத்தால் ஒரு பள்ளம் ஏற்படுத்த, பிரளயம் சுழித்துக்கொண்டு அந்தப் பள்ளத்தில் மறைந்தது. பிரளயம் சுழித்து மறைந்ததால், அது திருச்சுழி.
வெகு காலத்துக்குப் பிறகு, அதே சுழியில் இருந்து பிரளயம் ஒன்று வெளிப்பட்டது. அது அன்புப் பிரளயம். ரமணானுபவம். அது பொங்கி எழுந்து உலகையெல்லாம் நனைத்தது.

Comments

  1. பல மாதங்களாக படிக்க வேண்டும், உணர வேண்டும் என நினைத்திருந்தேன். இறை தங்கள் மூலம் படிக்க வைத்தது. மிக்க நன்றி.

    ReplyDelete

Post a Comment