மனைவியுடன் மலை ஏறி

''சின்ன வயசிலேருந்தே ஐயப்ப ஸ்வாமி மேல அளவு கடந்த பக்தி எனக்கு! ஸ்வாமியின் காலடியிலேயே என் மொத்த வாழ்க்கையையும் அர்ப்பணிச்சுட்டேன். இந்த என் வாழ்க்கைக்கு ஸ்வாமி ஐயப்பனே காரணம்!'' என்று சொல்லும் தியாகராஜ சுவாமி, தஞ்சாவூரைச் சேர்ந்தவர். கடந்த 37 வருடங்களாக சபரிமலை யாத்திரை சென்று வரும் இவருக்கு வயது 68.

''அந்தக் காலத்துல மலைக்கு வந்த கூட்டம் இன்னிக்கு வர்ற அளவுக்கு அதிகமில்லை. அஞ்சு அஞ்சு பேரா... சின்னச் சின்ன குழுவாதான் போவோம்.
ஒரு தடவை, ராத்திரி நேரம்... அச்சங்கோவில் காட்டுப்பகுதியில நடந்துகிட்டிருக்கோம். ஒரு இடத்துல திக்குன்னு தூக்கிவாரிப் போட்டுச்சு... எதிரே வழியை மறிச்சாப்ல புலி ஒண்ணு, தன் குட்டியோட உட்கார்ந்திருந்தது. எங்களைப் பார்த்ததும் சட்டுன்னு எழுந்திரிச்சு நின்னுச்சு புலி. பளபளக்கிற அதன் பச்சைக் கண்கள்ல ஆக்ரோஷம் கொஞ்சம் கொஞ்சமா அதிகரிக்க... நாங்க, கண்ணை மூடிக்கிட்டு, 'ஐயப்பா... காப்பாத்து!’ன்னு கத்தினோம். அப்புறம் மெள்ளக் கண் திறந்து பார்த்தா, புலி, தன் குட்டியோட கிளம்பி மெதுவா நடந்து போயிட்டிருந்துச்சு. இன்னிக்கு நினைச்சாலும் உடம்பு பதறுது!'' என்று சிலிர்ப்புடன் சொல்லும் தியாகராஜ சுவாமி, வேறொரு அனுபவத்தையும் விவரித்தார்.
ஒருமுறை மலையில் நடந்து கொண்டிருந்தபோது, கால் வழுக்கி, சுமார் 30 அடி பள்ளத்தில் விழுந்துவிட்டாராம். பொதுவாக ஆள் அரவம் இல்லாத அந்த இடத்தில், இவரது சத்தத்தைக் கேட்டு, நான்கைந்து பேர் ஓடி வந்து, இவரைக் காப்பாற்றி மேலே ஏற்றிவிட்டார்களாம். கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு, நன்றி சொல்லத் திரும்பியபோது, அவர்களை எங்கு தேடியும் கிடைக்கவில்லையாம்.
''என் மனைவி சரஸ்வதியும் ஐயப்ப பக்தை. ஒருமுறை, 'சபரிமலைக்கு நானும் வரேன்’னு சொன்னா. ஆனா, அவளுக்கு இதயத்துல பிரச்னை. அதனால, ரிஸ்க் எடுக்க வேண்டாமேனு மறுத்தேன். கடைசியில அவங்க பிடிவாதம்தான் ஜெயிச்சுது. கடவுள் மேல பாரத்தைப் போட்டுட்டு, மலையேறினோம். என்ன ஆச்சரியம்..! ஏதோ பழகின இடத்துக்குப் போறது மாதிரி, எனக்கு முன்னால கிடுகிடுன்னு ஏறிப் போயிட்டா. இதோ... 19 வருஷமா சபரிமலைக்கு வந்து, ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டிருக்கா!'' என்று சொல்லிவிட்டு, மனைவியைப் பெருமிதத் துடன் பார்த்தார் தியாகராஜ சுவாமி.  
 
''இன்னிக்கு வசதிகளும், வழிகளும் ரொம்ப ஈஸியா இருக்கு. அந்தக் காலத்துல அப்படியெல்லாம் இல்லை. 'கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை’ன்னு பாடினது முழுக்க முழுக்க உண்மை. கல்லும் முள்ளுமா, குண்டும் குழியுமா நிறைஞ்சிருக்கிற பாதையில, தட்டுத் தடுமாறி ஏறி, சபரிகிரி வாசனைத் தரிசனம் பண்ணணும்.
இன்னிக்கி... கடுமையா விரதம் இருக்கிறது, கட்டுப்பாடா பூஜைகள் செய்யறது எல்லாமே குறைஞ்சு, சபரிமலை போறதே ஒரு ஃபேஷனா போயிடுச்சோனு தோணுது. ஆத்மார்த்தமான பக்தி சிந்தனையோடு போய் ஐயப்பனைத் தரிசிச்சா, அவன் அருள் நிச்சயம் உண்டு!'' என்று நெக்குருகிச் சொன்ன 62 வயது சரஸ்வதியம்மாள், 'கன்னிமூல ஸ்ரீகணபதி பகவானே...’ என்று  குரலெழுப்ப, தியாகராஜ சுவாமியும் கரம் குவித்துச் சொல்கிறார்... 'சரணம் ஐயப்பா!’
 சரண கோஷத்துடன் துவங்குகிறது அந்தத் தம்பதியின் ஐயப்ப பூஜை!

Comments