மதுரை - விளாச்சேரி ஐயப்பன் கோயில்

பாண்டிய தேசத்தின்மீது எதிரி நாட்டு மன்னன் போர் தொடுத்தான்; இதனால், பாண்டிய தேசத்து மக்கள் நிலைகுலைந்து தவித்துக் கதறிய வேளையில், பாண்டிய மன்னனின் போர் வீரனாகக் களமிறங்கி, எதிரிகளைப் பந்தாடினார், பந்தளத்து ராஜாவான ஸ்ரீஐயப்ப ஸ்வாமி! இப்படியரு நம்பிக்கை, பாண்டிய தேசத்தில் உண்டு.

 
'ஸ்ரீஐயப்ப ஸ்வாமிக்குச் சந்நிதி அமைத்துக் கோயில் எழுப்பி வழிபட்டால், பாண்டிய தேசம் இன்னும் செழிக்கும், சிறக்கும்’ என்ற எண்ணத்தில், மதுரையை அடுத்துள்ள விளாச்சேரியில் அழகிய ஆலயம் அமைத்து, இன்றைக்கும் வழிபட்டு வருகின்றனர் மதுரை மக்கள்.
மதுரை, பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது விளாச்சேரி- முனியாண்டிபுரம். இங்கே, சிருங்கேரி ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்த சுவாமிகளின் ஆசியுடன், மதுரை ஐயப்ப சேவா சங்கத்தால் கட்டப்பட்ட கோயிலுக்கு வந்து ஸ்ரீஐயப்பனைத் தரிசித்தால், மனதுள் நிம்மதியும் வாழ்வில் சந்தோஷமும் நிலைக்கும் என்கின்றனர் ஐயப்பமார்கள்.
ஸ்ரீபார்வதிதேவி, ஸ்ரீதுர்காதேவி, ஸ்ரீகணபதி, ஸ்ரீமுருகப் பெருமான் ஆகியோர் தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கும் இந்தக் கோயிலில், ஸ்ரீகுருவாயூரப்பனுக்கும் தனிச் சந்நிதி உண்டு. நவக்கிரக சந்நிதியும் உள்ளது. மூலவரான ஸ்ரீஐயப்ப ஸ்வாமி, யோகப் பட்டயம் அணிந்து, சின்முத்திரையுடன் யோகாசனத்தில் அமர்ந்து, சபரிமலை தலத்தை நோக்கியபடி காட்சி தருகிறார்.
ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் சனிக்கிழமையன்று ஸ்வாமிக்கு நெய் அபிஷேகமும், முதல் வியாழக்கிழமையன்று ஸ்ரீகுருவாயூரப்பனுக்கு பால் பாயச நைவேத்தியமும் செய்து வழிபடுவது இங்கு விசேஷம். இந்த நாட்களில், மதுரை மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் இருந்து எண்ணற்ற பக்தர்கள் திரளாக வந்து, ஸ்வாமி தரிசனம் செய்கின்றனர். தமிழ் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையன்று ஸ்ரீதுர்கைக்கு விளக்கேற்றி வழிபட்டால், நல்ல கணவன் அமைவது உறுதி என்கின்றனர், பெண்கள்.
திருமணத் தடை, தொழில் முன்னேற்றத்தில் பிரச்னை என வருந்துவோர், ஸ்ரீகணபதிக்குச் சிறப்பு ஹோமம் நடத்தி வழிபட்டால், விரைவில் திருமணம் நடைபெறும்; தொழிலில் முன்னேற்றம் காணலாம் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை.
மேலும், இங்கு நடைபெறும் உமாமகேஸ்வர பூஜை, பகவதி சேவை, மகா சுதர்ஸன ஹோமம் ஆகியவற்றில் ஏராளமான அன்பர்கள் கலந்துகொள்கின்றனர். இவற்றில் பங்கேற்று, ஸ்வாமி தரிசனம் செய்தால், மாங்கல்ய பலம் பெருகும்; தீய சக்திகள் அண்டாது என்று சொல்லிப் பூரிக்கின்றனர் பக்தர்கள்.    
இந்த ஆலயத்தில், நைவேத்தியத்துக்கு பக்தர்கள் வழங்கும் ஒரு பறை (ஓர் அளவு) நெல்லினை, ஸ்ரீஐயப்ப ஸ்வாமியே வந்து பெற்றுக் கொள்வதாக ஐதீகம்!
ஜனவரி முதல் நாளன்று ஆராட்டு விழா, தை முதல் தேதி விழா, பங்குனி உத்திரம், சித்திரை விஷ§, பிரதிஷ்டை தினமான ஆனி உத்திரம், ஸ்ரீவிநாயக சதுர்த்தி, நவராத்திரிப் பெருவிழா ஆகியன விமரிசையாக நடைபெறுகின்றன!
விளாச்சேரி ஸ்ரீஐயப்பனைத் தரிசியுங்கள்; வினைகளைத் தீர்த்து அருளுவான் ஆனந்தசித்தன் ஐயன் ஐயப்பன்!

Comments