ஆளுக்கொரு அறிவுரை

ஒருமுறை ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடரான பிரும் மானந்தர் படகுப் பயணம் மேற்கொண்டார். படகிலிருந்த ஒருவன் அவரது தோற்றத்தையும், நடத்தையையும் கண்டு அவரைக் கேலி செய்தான். பிரும்மானந்தர் வருத்தமடைந்தாலும், அவனைத் தட்டிக் கேட்கவில்லை. மடத்துக்குத் திரும்பிய அவர், குருநாதரிடம் நடந்ததைக் கூறினார்.
ராமகிருஷ்ண பரமஹம்சர் அவரிடம் நீ ஏன் அவனைக் கண்டிக்கவில்லை? தவறு செய்பவனைக் கண்டிப்பாகத் தட்டிக் கேட்க வேண்டும், கண்டிக்கவும் வேண்டும்" என்றார்.
சிறிது நாளில், ஸ்ரீராமகிருஷ்ணரின் மற்றொரு சீடரான விவேகானந்தருக்கும் அதே படகில் பயணம் செய்ய நேர்ந்தது. முன்பொரு நாள் பிரும்மானந்தரை கேலி செய்த அதே ஆசாமி இப்போது விவேகானந்தரையும் கேலி செய்தான். விவேகானந்தர் மாவீரர் அல்லவா? கை முட்டியை மடக்கி அவனை ஓங்கிக் குத்துவதுபோல் பாவனை செய்தார். இதைக்கண்ட அவன் பயத்தில் ஒடுங்கிப் போனான்.
இந்தச் சம்பவத்தை விவேகானந்தரும் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரிடம் சென்னபோது அவர், துறவிகளுக்குப் பொறுமை வேண்டும். நீ இப்படி செய்யலாமா?" என அவரைக் கடிந்து கொண்டார்.
இந்த இரண்டு சம்பவங்களையும் உடனிருந்து கவனித்த மற்ற சீடர்களுக்கு ஒரே குழப்பம். பொறுமை தாளாமல் விவேகானந்தர் சென்ற பிறகு, குருவே, அன்று நீங்கள் பிரும்மானந்தரிடம் அப்படிச் சொன்னீர்கள். இன்றோ, இவரிடம் இப்படிச் சொல்கிறீர்கள். இதன் சூட்சுமத்தை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை?" என்றனர்.
ஸ்ரீராமகிருஷ்ண பரம ஹம்சர் சொல்ல ஆரம்பித்தார், பிரும்மானந்தர் ஒரு அப்பாவி. அவருக்கு கொஞ்சமாவது உணர்ச்சி ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் அன்று அப்படிச் சொன்னேன். விவேகானந்தரோ எளிதில் மிக உணர்ச்சிவசப்படுபவர். அவருக்கு இன்னும் உணர்ச்சியை ஊட்டி மேலும் கோபக்காரனாக்கக் கூடாது அல்லவா? அதனாலேயே அப்படிச் சொன்னேன். அதுமட்டுமின்றி, அவரவர் குணத்துக்கேற்பவே நமது புத்திமதியும் அமைய வேண்டும்" என்றார்.

 

Comments