ஆனந்த தாண்டவம்

திருவாரூரில் பிறந்தால் முக்தி, அண்ணாமலையை நினைத்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி’ எனச் சொல்லப்படும் வரிசையில் சிதம்பரம் நடராஜ தரிசனமே முக்தி. சிதம்பரம் என்றதும் சேந்தனாரே நினைவுக்கு வருகிறார். விறகு வெட்டியான சேந்தனார் சிறந்த சிவபக்தர். சிவனடியார்களுக்குத் தினமும் உணவளித்துப் பின்னர் தாம் சாப்பிடுவார்.
ஒரு மழை நாளில் அடியார் வேடம் தரித்து சிவனே சேந்தனார் இல்லத்துக்கு வர, வீட்டில் சிறிது மாவைத் தவிர வேறொன்றுமில்லாத சேந்தனாரும் அவரது மனைவியும் அதைக் களியாக்கி அடியாருக்கு அளிக்கின்றனர்.
மறுநாள் காலையில் வழக்கம்போல் சிதம்பரம் கோயில் அந்தணர்கள் கருவறையைத் திறந்தனர். அவர்கள் கண்ட காட்சி, நடராஜப் பெருமனைச் சுற்றி எங்கும் களிச் சிதறல்கள். உடனே மன்னருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏற்கெனவே மன்னரின் கனவில் சிவபெருமான் இவ்விஷயத்தைத் தெரிவித்திருந்தார். அதன்படி சேந்தனாரைக் கண்டுபிடிக்கும் படி தன் அமைச்சருக்கு ஆணையிட்டார்.
சேந்தனார் சிதம்பரம் நடராஜப்பெருமானின் தேர்த்திருவிழாவுக்குச் சென்றிருந்தார். தேரில் பெருமான் எழுந்தருளியாயிற்று. அரசர் உட்பட அனைவரும் தேரை இழுத்தார்கள். மழையின் காரணமாக சேற்றில் தேர் அழுந்திச் சிறிதும் அசையாது நின்றது. எவ்வளவு வலிமை கூட்டியும் தேர் அசையவில்லை. அப்போது அசரீரி ஒலித்தது; ‘சேந்தா நீ பல்லாண்டு பாடு.’ இதைக்கேட்ட சேந்தனார் திகைத்துவிட்டார். ஆனால், இறை அருளால் ‘மன்னுக தில்லை வளர்க நம் பக்தர்கள்...’ என்று தொடங்கி பதின்மூன்று பாடல்கள் பாடினார். தேர் நகர்ந்தது. சேந்தனாரின் காலில் அனைவரும் விழுந்து வணங்கினார்கள். அரசர் தாம் கண்ட கனவைச் சேந்தனாருக்குத் தெரிவித்தார். சேந்தனார் அவர் வீட்டுக்குக் களியுண்ண நடராஜப் பெருமானே வந்தார் என்பதை அறிந்து மனமுருகினார். அன்றைய தினம் திருவாதிரை நாள். இன்றும் ஆதிரை நாளில் நடராஜப் பெருமானுக்குக் களி நைவேத்யமாகப் படைக்கப்படுகின்றது.
சிவ வடிவங்களில், இந்த நடராஜர் உருவம் முக்கியமானது. இங்கே பெருமான் நிகழ்த்தும் ஆனத்தக் கூத்தை ஐந்து வகையாய்ப் பிரித்துள்ளார் திருமூலர். அவற்றில் சிவானந்தக் கூத்து அறிவையும், சுந்தரக் கூத்து ஆற்றலையும், பொற்பதிக் கூத்து அன்பையும், பொற்றில்லைக் கூத்து ஆற்றல் கூடுதலையும், அற்புதக் கூத்து அறிவு கூடுதலையும் குறிப்பதாச் சொல்லுகிறார். சரி; இந்தத் திருவுருவை எப்படி வடித்தார்கள்?
சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவம் பற்றி கேள்விப்பட்ட சோழ மன்னன், அதை சிலையாக வடிக்க ஆசைப்பட்டான். சிறந்த சிற்பிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் நடராஜர் சிலையைச் செய்யும்படி வேண்டினான். அவர்களும், ஒரு நல்ல நாளில் தம் பணியைத் துவங்கினர். சிலைக்கான அச்சை வார்த்து, உலோகக் கலவையை அதில் கொட்டினர். ஆனால், சிலை சரியாக வரவில்லை. பலமுறை முயற்சி செய்தும், இதே நிலைதான். அவர்கள், மன்னனிடம் தங்கள் இயலாமையைச் சொல்லி மன்னிப்புக் கேட்டனர். மன்னனுக்குக் கோபம் வந்துவிட்டது.
என்ன செய்வீர்களோ தெரியாது; இன்று மாலைக்குள் சிலை செய்தாக வேண்டும். இல்லா விட்டால், உங்கள் அனைவரையும் கொன்று விடுவேன்" என எச்சரித்து விட்டுப் போய் விட்டான். தங்கள் வாழ்வு இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டது என்று அவர்கள் பயந்த நிலையில், ஒரு முதியவரும், மூதாட்டியும் அங்கு வந்தனர். அப்போது, சிற்பிகள் ஐந்து வகை உலோகங்களைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தனர்.
அதைக் கஞ்சி என நினைத்து, தங்களுக்கு பசிப்பதாகவும், சிறிது கஞ்சியை ஊற்றும்படியும் கேட்டனர் அந்தப் பெரியவர்கள். எரிச்சலில் இருந்த சிற்பிகள், குடியுங்கள்; நன்றாகக் குடியுங்கள். நாங்கள் சாகப் போகிறோம்; போகும்போது, உங்களுக்கு தானம் செய்த புண்ணியத்தைச் சேர்த்துக் கொண்டு போகிறோம்" என்று சொல்லி, ஒரு செம்பில் நாலு அகப்பை உலோகக் கலவையை ஊற்றிக் கொடுத்தனர்.
முதியவர்கள் அதைக் குடித்தனர். சிற்பிகளுக்கு ஆச்சர்யம். ‘கொதிக்கிற உலோகக் கலவையைக் குடிக்க முடியுமா? எப்படி இவர்கள் இதைக் குடிக்கிறார்கள்’ என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, அவர்கள் நடராஜ மூர்த்தியும், சிவகாமி அம்மையுமாக மாறி, சிலை வடிவில் காட்சியளித்தனர். தங்கள் உயிரைக் காக்க வந்த முதியவர்கள் சிவனும், பார்வதியும் என்றறிந்த சிற்பிகள், ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். இந்தச் செய்தியை அறிந்த மன்னன், ஈசனின் திருவருளை வியந்து, சிதம்பரத்தில் கோயில் எழுப்பி வழிபட்டான்.
சிவபெருமானின் இந்த ஆனந்தத் தாண்டவத்தைக் காண சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதரும் தவமிருந்தனர். அவர்களின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆட இசைந்தார். புலித்தோல் உடுத்தி, உடுக்கை, அனல், மான், மழு, நாகாபரணம் தரித்தும், வலக்கையால் டமருகத்தை அடித்தும், இடக்கையில் அக்னி ஏந்தியும், ஒரு கையால் அபயம் அளித்தும், மறுகையால் பாதத்தைக் காட்டியும் நடனமாடினார்.
இந்த தினத்தை ஆதிரை திருநாள் அல்லது ஆருத்ரா தரிசனம் என்றும் அழைப்பார்கள். தமிழ் நாட்டில் சிதம்பரமாகிய ஆகாச பூத ஸ்தலத்தில் இந்த நிகழ்வு வருடா வருடம் நடைபெறுகின்றது.விஞ்ஞான பூர்வமாக ஆராந்தால் இன்றைய தினம் நம் வான வெளியில் திருவாதிரை நட்சத்திர மண்டல விண்மீன்கள், பூமி மற்றும் நிலவு ஒரு கோட்டில் தன் சஞ்சாரத்தின்போது நிற்கும், இது வடகிழக்கு திசையில் நிகழும். புராண ரீதியாகப் பார்த்தால் வடகிழக்கு திசையில்தான் சத்தியலோகம் இருப்பதாகக் கூறுகின்றார்கள். அன்று மிக அதீதமான அருட்காந்த சக்தி நமது பூமியை நோக்கி வரத்தொடங்குகின்றது. அன்றைய தினம் நாம் தியானம் மற்றும் மந்திர ஜபங்களைச் செய்ய ஆரம்பித்தால் நமது முன் வினைகள் நீங்கும் என்கிறார்கள் சித்தர் பெருமக்கள்.
பன்னிரு தாண்டவத்தில் முதன்மை பெற்ற தாண்டவம் இது என்கின்றன புராணக் குறிப்புகள்.
சிதம்பர ரகசியம் என்பது என்ன? அனைவரும் அறிய விரும்பும் விஷயம் இது. எளிமையாக இருந்தும் எளிதில் புரிந்துகொள்ள முடியாத ஆதி ரகசியம். உலகை விராட் புருஷனாக வைத்துக் கொண்டால், அதன் இதயப் பகுதி சிதம்பரம். அங்கேயும், சற்றே வலப்புறமாக, அமைந்த சன்னிதியில் பொன்னம் பலத்தில் அருள்பாலிக்கிறான் ஆடலரசன். நம் இதயம் எவ்வாறு சற்றே வலப்புறம் ஒதுங்கி இருக்கிறதோ அப்படி இருக்கிறது. நம் இதயத்தை ஒரு தாமரை மலராக உருவகப் படுத்தினால் அதனுள் உறையும் ஜோதிதான் இறைவன்.
பூசலார் நாயனார் தம் இதயத்திலேயே சிவனுக்குக் கோயில் கட்டினார். யோகக் கலை வல்லுனர்கள் தங்கள் இதயத்தில் இறையை நிறுத்தி தியான முறையில் வழிபடும் திறமை பெற்றவர்கள். அந்த முறைப்படியும் இது ‘அனாஹதம்‘ எனப்படுகிறது.
சாதாரண மனிதர்களால் முடியாத ஒன்றை மறைமுக வாகவேனும் அவனுக்கு உணர்த்தும் வண்ணம் ஏற்பட்டதுதான் இந்தச் சிதம்பர ரகசியம். ஆகாயத்தின் தன்மையுடன், உருவம் ஏதும் இல்லாமல் நிர்மலமாக இருப்பதால்தான் சிதம்பரத்தை ‘ஆகாயத் தலம்’ என்கிறார்கள்.
இது மட்டுமல்ல; நம் உடலிலும் பஞ்ச பூதங்களில் ஒவ்வொரு தேவதைக்கு ஒவ்வொரு இடம் உரியது. அப்படிப் பார்த்தால் ஆகாயத்துக்கு உரியது இதயம். இதயம் துடிக்கவில்லை என்றால் நாம் இல்லை. அந்த இதயம் துடிப்பது இந்த இறைவனால்தான். ஆகவே தான், ‘சிந்தையில் சிவனை நிறுத்திக் கொள்ள‘ச் சொன்னார்கள் நம் பெரியோர்கள்.
சித்சபையில் நடராஜரின் வலப்பக்கம் ஒரு நீலத்திரை தொங்கவிடப்பட்டிருக்கும். தரிசனம் செய்யவும் தனியாக சாளரம் போன்ற அமைப்பு உண்டு. அதன் வழியாகத்தான் தரிசனம் செய்ய முடியும். அந்தத் திரையை நீக்கி கற்பூர ஆரத்தி காட்டும்போது தங்கத்தால் ஆன வில்வ மாலை மட்டும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதைக் காணலாம்.
முதலில் உருவத்தை வழிபடும் மனிதன், பின்னர் தெளிந்து அருவுருவத்தை வழிபட ஆரம்பித்து விட வேண்டும். உண்மையான ஞானம் என்பது, இறைவனே அனைத்தும் என உணர்வது! இறைவன் எங்கும் நீக்க மற நிறைந்தவன்; எல்லா உயிர்களிடமும் காணப்படுவது சிவனே என்பதை உணர்த்துவதுதான் சிதம்பர ரகசியம்.

Comments