அறிந்த ஆன்மிகம்; அறியாத அறிவியல்

சீடன் ஒருவன் தனது குருநாதரிடம் கேட்கிறான், இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறார் எனில், நம் கண்களால் ஏன் காண முடியவில்லை. இறைவனை ஏன் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும்" என்று.
தன் கையிலிருந்த ஊசியால் சுருக்கென சீடனின் கையில் குத்தினார் குருநாதர். அம்மா! வலிக்கிறதே" எனக் கத்தினான் சீடன். வலியைக்காட்டு" என்றார் குரு. வலியை எப்படிக் காட்ட முடியும்? உணரத்தான் முடியும்" என்றான் சீடன். இறைவனின் அருளையும் நாம் பக்தி சிரத்தையுடன் வழிபட்டால்தான் உணரலாம். இவ்வளவு நீண்ட ஊசியாக இருப்பினும் அதன் கூர்மையே குத்தும் சக்தியுடையதாகிறது. அதைப்போல இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்திருந்தாலும், அவரது சான்னித்யம் கோயில்களில் நிறைந்துள்ளது"என்று விளக்க மளித்தார் குருநாதர். ஐயம் தெளிந்தது சீடனுக்கு! ஏன் நமக்கும் கூடத்தானே! நம் மனம் பக்தியால் ஒருமைப்பட்டு பக்குவமடையவே ஆலய தரிசனம் அவசியமாகிறது.
கோபுரத்தை தரிசித்தாலே கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டதற்குச் சமம் என்று கூறி உயர்ந்த கோபுரங்களைக் கட்டினர் முன்னோர். கோயிலுக்கு வர முடியாதவர்கள், வய தானவர்கள் கோபுரத்தை தரிசித்தாலே கடவுள் அருள் பரிபூர்ணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அறிவியல் உண்மைகள்: மழை, வெயில் போன்ற இயற்கைச் சீற்றங்களில் இருந்து விக்கிரகங்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். அதற்காக அழகிய விமானங்களை கலசங்களுடன் அமைத்தனர். இவை இடிதாங்கியாகச் செயல்பட்டு ஊரையே காக்கின்றன. கும்பங்களும், கோபுரங்களும் முக்கோண (பிரமிடு) வடிவம். முக்கோண வடிவில் அதிர்வுகள் வெளியே போகாது. அவற்றுக்கு மின்காந்த ஆற்றல்களை முழுமையாக ஈர்க்கும் சக்தி உண்டு. இவை தெய்வீக ஆற்றலை முழு அளவில் ஈர்க்கும் சக்தி வடிவம் எனப் போற்றப்படுகின்றன. எனவேதான் கும்பம், கோபுரம், தியான மண்டபம் அனைத்தும் முக்கோண வடிவில் அமையப் பெற்றுள்ளன.
எகிப்து பிரமிடு உலகப் புகழ்பெற முக்கோண வடிவமே காரணம். பிரமிடு வடிவங்களுக்குள் வைக்கப்படும் நீரிலுள்ள கிருமிகள் தானாகவே அழிகின்றன. பிளேடு, கத்தி போன்றவற்றை இதனுள் வைத்தால் துருப்பிடிக்காமல் இருப்பது மட்டுமின்றி; தாமாகவே கூர்மையடைகின்றன. பிரமிடு உள்ளே வைக்கப்படும் மருந்தின் வீரியம் அதிகரிக்கிறது. பிரமிடு வடிவ அறை மற்றும் கூரையின் கீழ் இருந்தால் மன அமைதி கிடைக்கிறது. அறிவியல் கண்டுபிடிப்பு என இன்று விவரிக்கப்படும் விஷயம், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆன்மிகம் என்ற பெயரில், வழிபாடு என்ற வழியில் நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது என்பது அபூர்வ நிஜம். இனி, எப்போது ஆலயம் சென்றாலும் கோபுரத்தின் அடியில் சிறிது நேரம் நின்று சக்தியை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

Comments