துணை வந்த ஐயப்பன்

சுவாமி ஐயப்பனிடம் எனக்கும், என் கணவருக்கும் ரொம்ப பக்தி. என்னுடைய இரண்டாவது பிரசவத்துக்காக அம்மா வீட்டுக்குச் சென்றிருந்தேன். குழந்தை பிறந்தவுடன் மூன்று மாதம் கழித்து என்னை அம்மா, அப்பா இருவரும் என் மாமியார் வீட்டுக்கு (நெய்வேலி பக்கத்தில் உள்ள பிள்ளைப்பாளையம் என்ற ஊருக்கு) காரில் அழைத்து வந்தனர். திடீரென்று கார் நடுவழியில் ரிப்பேர் ஆகிவிட்டது. டிரைவர் முடிந்த மட்டும் காரை சரி செய்ய முயற்சி செய்து பார்த்தார். வண்டி கொஞ்சம் கூட அசையவில்லை. மழை வேறு கொட்டோ கொட்டென கொட்டியது. நாங்கள் இருந்த இடம் விழுப்புரம் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத நடுவழி. ஒரு சிறிய கடை கூட அங்கே இல்லை.
காரை சரிசெய்ய மெக்கானிக்கை அங்கே எப்படித்தேடுவது? ஒரே குழப்பம். உடல் நிலை சரியில்லாத வயதான அப்பா, விவரமில்லாத அம்மா, மூன்று வயதில் ஒரு சுட்டிப் பையன், கைக்குழந்தை வேறு. பசியோ வயிற்றைக் கிள்ளியது. நான் கண்ணை மூடிக்கொண்டு ஐயப்பா இது என்ன சோதனை? இந்த இக்கட்டிலிருந்து நீதான் எங்களைக் காக்க வேண்டும்" என்று மனதுக்குள்ளே சொல்லிக் கொண்டேயிருந்தேன்.
சில நிமிடங்கள் கழித்து நான் கண்ணைத் திறக்கும்போது, சற்றும் எதிர்பாராமல் ஒரு வேன் பக்கத்தில் வந்து நின்றது. அதில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம். ஒரு பக்தர் மட்டும் இறங்கி, என்னாச்சு...? வண்டி ஸ்டார்ட் ஆகலையா?" என்று கேட்டு ஏதோ ஒரு ஒயரை வைத்து சரி செய்தார். பிறகு ஒண்ணுமில்லை... சின்ன பிரச்னைதான். இப்ப காரை ஸ்டார்ட் பண்ணுங்க" என்று சொல்லிவிட்டு வேனில் ஏறி வேகமாகச் சென்று விட்டார். அதன் பின்னர் நாங்கள் நிம்மதியாக எங்கள் ஊரைச் சென்றடைந்தோம்.
வீட்டுக்குச் சென்றதும் என் மாமியார் - மாமனாரிடம் இந்தச் சம்பவத்தை சொல்லியபோது அவர்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இதை இப்போது சொல்லும்போதும் எனக்கு உடம்பெல்லாம் சிலிர்க்கிறது.

 

Comments