தாயுமானவன்

தாயுமானவன்’ என்றவுடனே நமது நினைவுக்கு வருவது, திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்துக்கருகில் அருள்பாலிக்கும் தாயுமானவர் சுவாமி திருக்கோயிலே. இதனைப் போன்றே சிறப்புமிக்க சிவஸ்தலம் மடவார் வளாகம், வைத்தியநாதசுவாமி திருக்கோயில். கருவறையில் வைத்திய நாதப்பெருமான் லிங்க ரூபத்தில் அருள்பாலிக்கிறார். அம்பாள் சிவகாமி அம்மை.
முற்காலத்தில் புனல்வேலி என்னுமிடத்தில் வாழ்ந்த ஏழை சிவபக்தன் ஒருவனின் மனைவிக்கு பேறுகாலம் நேரம் வந்தது. அதனால் அவள், தமக்குப் பிரசவம் பார்க்க அவளது தாக்குச் சொல்லி அனுப்பினாள். அவளது தாய் வருவதற்குத் தாமதமாகவே, தாமே தனது தாய் வீடுக்குச் சென்றாள்.
சிறிது தூரம் சென்றதும் அவளுக்குப் பிரசவ வலி ஏற்பட்டுவிட, வலி தாங்க முடியாமல் அவள், ஈசனே! என்னைக் காப்பாற்று" என அழுது புலம்பினாள். அப்போது சிவபெருமானே அவளது தாய்யாகத் தோன்றி அப்பெண்ணுக்குப் பிரசவம் பார்த்து முடித்தார். பிரசவம் முடிந்த பிறகே அப்பெண்ணின் தாய் அங்கு வந்து சேர்ந்தாள். பிரசவம் முடிந்து விட்டதைக் கண்ட அத்தா, அதுபற்றி விசாரித்தபோது, வைத்தியநாதப்பெருமான் அன்னை சிவகாமியுடன் ரிஷப வாகனத்தில் காட்சி தந்து, தாமே பிரசவம் பார்த்ததாகக் கூறி அருள்பாலித்தார்.
பிரசவ சமயத்தில் அப்பெண்ணின் தாகம் தீர்க்க, ஈசன் தன் விரலால் பூமியைக் கீற, அதிலிருந்து பீறிட்டு வந்த நீரையே அப்பெண்ணுக்கு மருந்தாகவும் தந்தார். இதனால் இத்தீர்த்தம் ‘காயக்குடி ஆறு’ என அழைக்கப்பட்டது.
மன்னர் திருமலை நாயக்கரின் தீராத வயிற்று வலியைப் போக்கிய பெருமையையும் கொண்டவர் இத்தல ஈசன். இதனால், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள திருமண மண்டபம் போலவே, வைத்தியநாத பெருமானுக்கும் பெரிய ‘நாடகசாலை’ எனப்படும் மண்டபம் அமைத்துத் தந்தார். உட்பிராகார மண்டபத்தில் திருமலை நாயக்கருக்குச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
ஆடல், பாடல்களில் வல்லவரான இரு பெண்கள் ஆடிப்பாடி இறைவனை மகிழ்வித்ததால், அவர்களுக்குப் பொன், பொருள் தந்து, வீடு கட்டித்தர ஆணையிட்டார் இறைவன். அன்று முதல் இத்தலம் ‘மடவார் வளாகம்’ என அழைக்கப்பட்டது.
பக்தர்கள், வயிற்று நோய்களுக்காகவும், கர்ப்ப சம்பந்தமான பிரச்னைகளுக்காகவும் மற்றும் சுகப் பிரசவத்துக்காகவும் வேண்டிக் கொள்கிறார்கள். கோரிக்கை நிறைவேறியவுடன் சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக் கடனைச் செலுத்துகின்றனர். சிவராத்திரி, பிரதோஷம் மற்றும் செவ்வாய், வெள்ளிக் கிழமை ஆகியவை விசேஷ நாட்கள்.

செல்லும் வழி
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ராஜபாளையம் செல்லும் சாலையில் 2 கி.மீ. நகரப் பேருந்து வசதி உள்ளது.
தரிசன நேரம் : காலை 6 மணி முதல் 12 வரை. மாலை 4 மணி முதல் 8 வரை.
தொடர்புக்கு : +91-4563-261 262

Comments