ஓதுவார்கள்

கலையழகு மிக்க திருக்கோயில்களால் சிறப்புடையது தமிழ்நாடு. தேவாரமூவரான திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் பலகோயில்களுக்குச் சென்று, இறைவனை வழிபட்டு போற்றினர். அவர்கள் பாடிய பாடல்கள் திருப்பதிகங்கள் எனப்பட்டன. இதனை, ‘தேவாரம்’ எனவும் அழைப்பர். தேவாரம் என்றால் தெய்வத்தைக் குறித்த இசைப்பாட்டு’, ‘வழிபாடு செய்யும் இடம்’ என்பதும் பொருளாகும். தேவாரம் இசைத்தமிழைச் சேர்ந்த ‘வாரம்’ என்ற பாடல் வகையைச் சேர்ந்தது. திருஞான சம்பந்தர் அருளிய பாடல்களை ‘திருக்கடைக்காப்பு’ என்றும், திருநாவுக்கரசர் அருளிய பாடல்களை ‘தேவாரம்’ என்றும், சுந்தரர் பெருமான் அருளிய பாடல்களை ‘திருப்பாட்டு’ என்றும் அழைக்கின்றனர்.
திருமறைப்பாடல்களில் தமிழின் சிறப்பு எடுத்துக் கூறப்படுகிறது. ‘நற்றமிழ்’ என்றும் ‘திருநெறி தமிழ்’ என்றெல்லாம் போற்றப்படுகின்றது.
மூவர் அருளிய திருப்பதிகங்கள் அனைத்தும் தமிழ்ப் பண்முறையில் அமைந்தவை ஆகும். இசை வரலாற்றில் ராக தாளத்துடன் நமக்கு கிடைக்கப் பெற்ற மிகத் தொன்மையான இசைவடிவம் தேவாரத்தில்தான் உள்ளது என இசை ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இவற்றை திருக்கோயில்களில் விண்ணப்பம் செய்ய தானம் அளித்ததாகவும், அவை பாடப்படும் பொழுது உடுக்கை, தாளம், கொட்டி மத்தளம், வீணை போன்ற இசைக் கருவிகள் உடன் வாசிக்கப்பட்டன எனவும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் இறைவன் முன்பு நாள்தோறும் திருப்பதிகங்களை விண்ணப்பம் செய்ய 48 ஓதுவார் மூர்த்திகள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களின் பெயர்களையும் கல்வெட்டு குறிப்பிடுகிறது. நியமனம் செய்யப்பட்ட பிடாரர்கள் அனை வரும் சிவதீட்சை பெற்று தீட்சா நாமமும் உடையவர்கள் ஆவர். ஒவ்வொருவரின் பெயரின் இறுதியில் ‘சிவன்’ என முடிவடைகிறது (ராஜராஜ பிச்சனான சதாசிவன், ஆரூரான் தர்மசிவன்... இப்படி) இவர்களுடன் உடுக்கை வாசிக்க ‘ஆலால விடங்க உடுக்கை விச்சாதிரனான சோமசிவன்’ என்பவரும், கொட்டி மத்தளம் வாசிக்க ‘குணப்புகழ் மருதனான சிகாசிவன்’ என்பவரும் ஆக மொத்தம் 50 பேர் இராஜராஜ சோழனால் நியமிக்கப்பட்டனர். இதனால் திருமுறைகளின் மீது கொண்டிருந்த பக்தியை நம்மால் அறிய முடிகிறது. நாள்தோறும் 48 பேர் திருமுறைகளை இசையுடன் விண்ணப்பம் செய்யும் காட்சியை நம் மனக்கண்ணால் பார்த்து மகிழ்ச்சி அடைகிறோம்.
இதேபோன்று கும்பகோணம் அருகில் உள்ள தாராசுரம் ஐராவதீசுவரர் கோயிலில் வடப்புறத் திருச்சுற்று மாளிகை சுவரில் 108 ஓதுவா மூர்த்திகளின் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு சிற்பத்துக்கு மேல் அவரது ஊர், பெயர், தீட்சா நாமம் ஆகியவை கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம், இவர்கள் அனைவரும் திருப்பதிகங்களை இக்கோயிலில் விண்ணப்பம் செய்ய நியமிக்கப் பட்டிருக்க வேண்டும் எனக் கருத முடிகிறது . மேலும் திருக்கோயில்களில் ‘திருக்கைக் கோட்டி’ என்ற பெயருடன் மண்டபங்கள் இருந்ததாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. ஓதுவா மூர்த்திகளின் சிற்பங்கள் காணப்படும் மண்டபத்தில் நாள்தோறும் அவர்கள் திருமுறைகளை விண்ணப்பித்திருக்க வேண்டும் என்றும் ஊகிக்க முடிகிறது.
திருமுறைகளை, பொதுவாக ஆண்கள்தான் பாடுவார்கள். ஆனால், திருப்பதிகங்களை ஓதுவதற்கு மூன்று பெண்கள் நியமிக்கப்பட்டனர் என்று திருச்சிக்கு அருகே உள்ள குமாரவயலூர் அக்னீசுவர சுவாமி கோயிலில் காணப்படும் பராந்தக சோழன் கல்வெட்டால் அறியமுடிகிறது.
இன்று பாடப்படும் பல ராகங்களுக்கு தேவாரப் பண்ணே முன்னோடியாகத் திகழ்கிறது என்றும் இசை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இவை அனைத்தையும்விட முக்கியமான விஷயம், தமிழின் அழகை புரிய வைக்கவும், மொழிவளம் குன்றாது பயன்பாட்டில் நிலைபெறவும், நாள்தோறும் பக்தர்கள் குழுமிய மாலை வேளையில் இசையுடன் இப்பதிகங்களை ஓதுவார்கள் பாடுவர். அதனால், அந்தந்த தலத்துக்குரிய பதிகம், அதில் பயன்படும் வார்த்தைகள், இசை, மொழிச்சுவை, பக்தியாவும் மக்கள் மனத்தில் பதியும். வழிபாடு என்கிற ஒற்றை முறையில், மொழிவளம் பேணப்பட்ட சூட்சுமம் இது.
வெகுஜனப் பயன்பாட்டுக்கு வராத எதுவும் வழக்கொழிந்து போய்விடும் என அறிந்தே, தேவாரம் பாட, மொழி வளம் காக்க, இசை நலம் பேண ஓதுவார்களை அக்காலத்தில் நியமித் திருந்தார்கள் என்பதை உணர முடிகிறது. அதே புரிதல் இன்றும் வசப்பட்டால், தேவாரமும், திருவாசகமும், திருப்புகழும் அமிர்தமாக தமிழ் ஆலயங்கள்தோறும் மணக்கும்; இல்லங்கள் தோறும் வெளிச்சமிடும். புரிந்து கொள்ள வேண்டியது நாம்தான்!

Comments