சண்டிகா பரமேஸ்வரி

மஹிஷாஸுர மர்த்தினீம் நமாமி
மஹனீய கபர்த்தினீம்
மஹிஷ மஸ்தக நடன பேத விநோதினீம் மோதினீம்
மாலினீம் மானினீம் ப்ரணத ஜன ஸௌபாக்ய தாயினீம்
- முத்துஸ்வாமி தீக்ஷிதர்
தமோ குண வடிவினளான மஹாகாளியாகத் தோன்றிய அம்பிகையின் அடுத்த அவதாரம் மஹாலக்ஷ்மி. விஷ்ணுவின் நாயகியான மஹாலக்ஷ்மி அல்ல; அனைத்துக்கும் ஆதியான சண்டிகா மஹாலக்ஷ்மி. இவள் பதினெட்டு ஆயுதங்களை பதினெண் கரங்களில் ஏந்தி தாமரைப்பூவின் மேல் மலர்ந்த முகத்துடன் வீற்றிருக்கிறாள்.
முன்பொரு காலத்தில் ரம்பன்-கரம்பன் எனும் இரு அசுர சகோதரர்கள் இருந்தார்கள். இருவரும் போட்டி போட்டுக்கொண்டு உலகை வாட்டி வதைத்தனர். தங்கள் பலத்தை பெருக்கிக்கொள்ள வேண்டி இருவரும் தவம் செய்து வரங்கள் பெற தீர்மானித்தார்கள். அதனால் அஞ்சிய இந்திரன் முதலையாக உருவெடுத்து கரம்பனின் காலைக் கவ்வி நீரில் மூழ்கடித்து அவனைக் கொன்று விட்டான்.
தவத்தால் வரம் பெற்ற ரம்பன் தம்பியின் மரணத்தை அறிந்து, தன் உயிரையும் மாத்துக்கொள்ள முடிவு கட்டினான். அதற்குமுன் ஒரு புதல்வனைப் பெற்று, தன் வாழ்வை முடித்துக் கொள்ள எண்ணினான். அப்போது ஒரு பெண்ணெருமை எதிர்ப்பட்டது. வரம் பெற்ற மமதையில் சக்தியை உடனே செயல்படுத்திட எண்ணி, தானுமொரு எருமையாக உருமாறி அந்த பெண்ணெருமை மீது மையல் கொண்டான். அந்த எருமையும் கருவுற்றது.
அந்த நேரத்தில் மற்றொரு எருமை, (ரம்ப) எருமை மீது ஆவேசம் கொண்டு அவனை தன் கொம்புகளால் குத்திக் கொன்று விட்டது. சுய உருவுடன் இறந்து வீழ்ந்த அவனை, அவனது சுற்றத்தார் கண்டு, அவன் உடலை சிதையில் அடுக்கி நெருப்பும் மூட்டினர். யாரும் சற்றும் எதிர்பாராத வகையில், அந்தப் பெண் எருமை தன் நாயகனின் சிதையில் தீப்பாந்தது. கூடியிருந்தோர் திகைத்து நிற்க, மற்றொரு அதிசயமா கருவுற்றிருந்த எருமையின் கருப்பிண்டம் வெளியே விழுந்து ஒரு குழந்தையாக எழுந்தது.
பூர்வ ஜன்மத்தில் அகத்திய முனிவரின் சாபத்தை பெற்ற வரமுனி எனும் சிவயோகியே அந்த குழந்தையாகப் பிறந்தான். மஹிஷத்தினின்று தோன்றியதால் ‘மஹிஷாஸுரன்‘ என்றழைக்கப்பட்டான்.
வரபலம் பெற்ற மஹிஷனின் கொடுமைகள் எல்லை மீறத் துவங்கின. அனைவரும் அவன் அருகிலேயே வர அஞ்சினர். தோற்று ஓடிய தேவர்கள், சக்திகளை இழந்து சாதாரண மானிடரைப் போல் திரியலானார்கள். வேறு கதி ஏதும் இல்லாமல் செய்வதறியாது ப்ரம்மா தலைமையில் பரந்தாமனை நாடிச் சென்றார்கள்.
‘ஒரு பெண்ணால்தான் மஹிஷனுக்கு முடிவு’ என்பது அவன் வர பலம். இனி நாம் செய்வது ஏதுமில்லை. ஆதிசக்தியால் தான் அவனை அழிக்க முடியும்.’ விஷ்ணு கூறி முடிக்குமுன்பு சிவனும் அங்கே தோன்றினார். தேவியைக் குறித்து அனைவரும் தியானித்தார்கள். அவர்கள் முகத்திலிருந்து ஒரு ஜோதி கிளம்பியது. அனைத்து சக்திகளின் சங்கமமாக அந்த ஜோதி ஒளிர்ந்து கொண்டிருந்தது. கண்களைக் கூச வைத்த அந்த ஜோதி இறுதியில் ஒரு பெண் வடிவம் கொண்டது. அவளே சண்டிகா மஹாலக்ஷ்மி. அதாவது, மஹாலக்ஷ்மி சண்டிகை புதிதாக தோன்றவில்லை. அனைவருக்குள்ளேயும் இருக்கும் ஆதார சக்தியே அவள்தான். மறைவாக இருக்கும் அந்த சக்தி தத்துவமே இங்கே வெளிப்பட தோன்றியுள்ளது. உடனே அத்தனை தேவர்களும் சேர்ந்து அவளுக்கு ஒவ்வொரு ஆயுதமாக பதினெட்டு கைகளுக்கும் வழங்குகிறார்கள்.
போருக்கே உரிய ராஜஸ குணம் மேலோங்க, செந்நிறம் கொண்டு பதினெட்டு கரத்துடன் விளங்கும் அஷ்டாதச புஜ மஹாலக்ஷ்மி துர்கை. காருண்யமும் தீரமும் ஒருங்கே கொண்டு தீவிரமாக செயல்படுபவளாக இருப்பதால் இவளே சண்டி, சண்டிகை எனப்படுகிறாள்.
கண நேரம் கூட தாமதிக்காமல் யுத்த களத்துக்கு புறப்பட்டுவிட்டாள் அம்பிகை. அதர்மத்தை அழிக்க த் தோன்றிய அம்பிகை தர்மத்தின் வடிவமான சிங்கத்தின் மீதேறி போர்க்கோலம் பூண்டாள்.
சகல தேவர்களிடமிருந்தும் தோன்றியது போல காட்சி தந்தாலும், ஒருவரின் துணை கூட இல்லாமல் தன்னந்தனியளாக போர்க்களம் வந்தாள். அம்பிகையின் போர் முழக்கம் கேட்ட மஹிஷாஸுரன் படை பரிவாரங்களுடன் யுத்த களத்துக்கு வந்து சேர்ந்தான். அம்பிகை தன்னந்தனியாக விச்வரூபமெடுத்து நின்றிருந்தாள்.
சற்றே ஆராந்து பார்த்தால் இந்த மஹிஷாஸுரன் யார் என்று புரிந்து விடும். வேறு யார்? நம்முள் இருக்கும் அக்ஞானமேதான். அஹங்காரமே அவனுக்கு துணையாக நிற்கும் படைபலம்.
இவள் என்னை ஜெயித்து விடுவாளா என்ன? என்று எண்ணியபடி மஹிஷன் தானே தலைமையேற்று படைகளை அழைத்துக் கொண்டு களம் புகுந்தான். கோடிக்கணக்கான ரதப்படையுடன், பலகோடி அஸுரர்களும் கணக்கற்ற தேர், யானை, குதிரைப் படைகள் சூழத் தேவியுடன் போர் செய்தனர்.
தேவியோ தன்னந்தனியள்... இவர்களோ கோடிக் கணக்கானவர்... பலகோடி துயர் சூழ தவித்து நிற்கும் பக்தனை கண்மூடித் திறக்கும் அரைக்கணத்தில் காத்து விடுவிப்பவளுக்கு இதெல்லாம் எம்மாத்திரம்?
ஆக்ரோஷமாக களத்தில் முன்னேறிய அசுரர்கள் அனைவரும் அன்னையை நோக்கி முதல் அடியை எடுத்து வைத்து நெருங்கியதும், அடுத்த அடியை நேராக யமலோக வாயிலில் வைத்தார்கள். நெருப்பு எப்படி வைக்கோலை எரிக்குமோ அப்படி சில நொடிப் பொழுதுகளிலேயே தேவி தனி ஒருத்தியாக, அசுரப்படைகள் அனைத்தையும் அடியோடு சாத்து விட்டாள். படைகளனைத்தும் நிர்மூலமாகிவிட்டதை அறிந்த மஹிஷன் ஒருகணம் திக்பிரமை பிடித்தது போலவே நின்றுவிட்டான்.
அகங்காரம் முழுதும் நீங்கி விட்டாலும் நம் அக்ஞானம் தீர்ந்து விடுகிறதா? அப்போதுதானே நம் மனத்தின் உண்மை வடிவம் வெளிப்படுகிறது? மஹிஷனும் எருமை வடிவெடுத்து ஓடி வந்தான்.
கடைசி வரை அவனுக்கு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்ப்போம் என்றே அம்பிகை எண்ணியது போல அவனை கயிற்றால் கட்டினாள். ஆனால், அவன் தன் எருமை வடிவினை நீக்கி சிங்க வடிவு கொண்டான். உடனே தேவி சிங்கத்தின் தலையை வெட்டினாள். மறுகணம் அவன் வாளேந்திய போர் வீரனாக வடிவு கொண்டான். பதிலுக்கு அன்னை தன் அம்புகளால் அவன் வாளையும் கேடயங்களையும் உடைத்தாள். மீண்டும் அவன் யானை உருவெடுத்து வந்தான். தேவி யானையின் துதிக்கையை வெட்டி வீழ்த்தினாள். மீண்டும் அவன் பழையபடி தன் எருமை வடிவமெடுத்து எதிரில் நின்றான்.
நம் மனத்தின் அக்ஞானம் வெவ்வேறு சந்தர்ப் பங்களில், வெவ்வேறு வடிவங்கள் கொள்கிறதே? அதுதான் இந்த நாடகம்.
மஹேச்வரி அவனை வீழ்த்தி, தன் திருவடிகளால் அவன் கழுத்தில் அழுத்தி மிதித்துக்கொண்டு கம்பீரமாக நின்றுவிட்டாள்; தன் வாளினை உயர்த்தி அவனை தலைவேறு உடல் வேறாக்கி வீழ்த்தினாள். மஹிஷாஸுரமர்த்தினியான இவளே அம்பிகையின் அவதாரமான மஹாலக்ஷ்மி எனப்படுகிறாள்.
இவளே முற்றிய ஞானத்தின் வடிவமாக விளங்கிடும் ‘சித்’ ஸ்வரூபிணி.
ஓம் அக்ஷஸ்ரக்பரசும் கதேஷுகுலிசம் பத்மம் தனு:
குண்டிகாம்
தண்டம் சக்திமஸிம் ச சர்ம ஜலஜம் கண்டாம்
ஸுராபாஜனம் |
சூலம் பாசஸுதர்சனே ச தததீம் ஹஸ்தை:
ப்ரவாலப்ரபாம்
ஸேவே ஸௌரிபமர்தினீமிஹ மஹாலக்ஷ்மீம்
ஸரோஜஸ்திதாம் ||
அக்ஷமாலை, பரசு, கதை, பாணம், குலிசம், தாமரைப்பூ, வில், கமண்டலம், தண்டம், வேல், வாள், கத்தி, சங்கு, மணி, மதுபாத்திரம், சூலம், பாசம், சக்கரம் முதலிய ஆயுதங்களை ஏந்தி, கமலாஸனத்தில் வீற்றிருப்பவளும், பிரசன்னமான முகத்தைக் கொண்டவளும், மஹிஷாஸுரனை வதைத்தவளுமான மஹாலக்ஷ்மியை சேவிக்கிறேன்.
- தேவி மாஹாத்மியம் மஹாலக்ஷ்மி சண்டிகா த்யானம்.

Comments