ஆண்டாள் மாலை!

''மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் அருளியிருக்கிறான் கண்ணன். மார்கழி மாதத்தின் சிறப்பை இந்த உலகுக்கு உணர்த்தியவள் ஆண்டாள். இறைவனிடம் சரணாகதி அடைய வழி தேடிய ஆழ்வார் பெருமக்களில், மக்களையும் கடைத்தேற்றம் செய்யவேண்டும் என்பதற்காக அவதரித்தவள் ஆண்டாள். அவள் அருளிய திருப்பாவையின் நோக்கமே, 'வாயினால் பாடி மனதினால் சிந்தித்தல்’ என்பர். அவள் காட்டிய வழியில் மார்கழி நோன்பிருந்து இறைவனை வழிபடுவதால் கிடைக்கும் அனுகூலங்கள் அளப்பரியன'' என்கிறார், வேதபிரான் பட்டர் சுதர்சன் பட்டாச்சார்யார். இவர், பெரியாழ்வாரின் வம்சத்தில் வந்தவர். 
ஸ்ரீஆண்டாளின் அர்ப்பண பாவனை, பக்தி முதிர்வு, கவித்துவப்பேறு அனைத்தும் வைணவத்துக்குக் கிடைத்த மகா பெருமை'' என்றவர், தொடர்ந்து ஆண்டாளின் மகிமை, திருப்பாவை நோன்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் மார்கழி வைபவங்கள் முதலான தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார். அதில் குறிப்பிடத்தக்கது, ஆண்டாள் மாலை பற்றிய விவரம்.

நாள்தோறும் ஒரே ஒரு மாலை மட்டும் ஆண்டாளுக்கு (மூலவர்) அணிவிக்கப்படுகிறது. அந்த மாலை, மறுநாள் விஸ்வரூப தரிசனத்தின்போது ஸ்ரீவடபத்ரசாயி சந்நிதிக்கு மேளதாளங்களுடன் எடுத்துச் செல்லப்பட்டு, ஸ்வாமிக்குச் சாற்றப்படும். பிறகு, உஷத் கால பூஜையின்போது பெரியாழ்வாருக்குச் சாற்றப்படும். இந்த மாலையை, பல தலைமுறைகளாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களே தொடுத்து வருகின்றனர்.
தினமும் இவர்கள் தங்கள் வீட்டு நந்தவனத்தில் இருந்தே ஆண்டாள் மாலைக்கான மலர்களைப் பறிக்கிறார்கள். குறுக்கத்திப்பூ, சாமந்தி, சிவப்பு விருட்சி, தாழம்பூ, செங்கழுநீர்ப்பூ, இருவாட்சி, பாதிரி ஆகிய ஏழு மலர்கள் ஆண்டாள் மாலையில் இடம்பெறும். மனிதர்களின் மூச்சுக்காற்றோ, எச்சிலோ மாலையின்மீது படாதவாறு மூக்கையும் வாயையும் கட்டிக்கொண்டு, மிக ஆசாரத்துடன் மாலை தொடுப்பார்கள். ஸ்ரீஆண்டாளுக்கு அணிவித்த மாலையை கோயிலில் பிரசாதமாகப் பெற்று, ஏதேனும் தோஷத்தாலோ தடையாலோ திருமணம் தள்ளிப்போகிறவர்கள் அணிந்துகொண்டால், விரைவில் அவர்களுக்கு திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம்!
இந்த மார்கழியில், சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளை நாமும் வழிபட்டு, நலம்பெறுவோம்.

Comments