அனைத்து பேரும் அருளும் அசலாத்தம்மன்!





உஸ் அப்பா.. மழை பெய்ய வேண்டிய காலத்துல வெயில் சுள்ளுன்னு அடிக்குது! வெளியில தலைகாட்டவே முடியலை...
சும்மா புலம்பாதே.. இதைவிட அதீதமான உஷ்ணத்தை எல்லாம் அந்தக் காலத்து மக்கள் தாங்கிக்கிட்டிருக்காங்க.
சிவனை திருமணம் செய்துக்கறதுக்காக அம்பிகை தவம் இருந்த சமயத்துல அந்தப் பகுதியே வெப்பத்தால சகிச்சதாம் தெரியுமா?
தெரியுமே... மாங்காடு திருத்தலத்துல அம்மன் தவம் இருந்தப்போ அங்கே நிலவின உஷ்ணத்தைப் போக்க ஆதிசங்கர மகான் சக்கரம் பிரதிஷ்டை பண்ணி, அம்பாளைக் குளிவிச்ச தலபுராண வரலாறுதானே அது!
கரெக்டா சொன்னே அதேமாதிரி இன்னொரு தலத்துலயும் வெம்மையுடன் இருந்த அம்மையை சித்தர் ஒருத்தர் சாந்தப்படுத்தியிருக்கார்.
அட இன்னொரு அம்பாள் கோயில் புராணமா? சொல்லு சொல்லு...
சென்னையில் இன்னிக்கு ரொம்பவே பரபரப்பா இருக்கற ஒரு பகுதி பலகாலம் முன்னால மரம், செடி, கொடிகள், பயிர்கள் நிறைஞ்சு பசுமையா இருந்துச்சு. சூரியனே நுழைய சிரமப்படற அளவுக்கு மரங்கள் அடர்ந்து இருந்ததால் எப்பவும் அங்கே குளுமை நிலவி"சு. மக்கள் நிம்மதியா இருந்தாங்க.
அதுக்கு சோதனை மாதிரி திடீர்னு ஒரு நாள். அங்கே இருந்த ஒரு தோட்டத்திலிருந்து கடுமையான வெம்மை பரவிச்சு. நாளாவட்டத்தில் அந்தப் பகுதியே உஷ்ணத்துல தகிக்கத் தொடங்கறதை உணர்ந்தாங்க மக்கள். அதை ஊர்க்காரங்க கிட்டேயும் சொன்னாங்க. எல்லாரும் வந்து மாயம், மந்திரீகம், ஜோசியம்னு பார்த்தும் என்ன காரணம்னு கண்டுபிடிக்க முடியலை.
ஊரோ திகைச்சுப் போயிருந்த சமயத்துல சடாமுடி, அழுக்கு உடையோட இருந்த ஒருத்தர் அந்தப் பகுதிக்கு வந்தார். எல்லாரும் அவரை ஏளனமா பார்க்க, அவர் எதையுமோ லட்சியம் பண்ணாம வெம்மையை வெளியிடற தோட்டத்துப் பக்கமா போனார். அங்கே ஒரு இடத்துல மௌனமா உட்கார்ந்து தியானம் பண்ண ஆரம்பிச்சார். உஷ்ணம் தாங்காம ஓடிடுவார்னு எல்லாரும் நினைச்சதுக்கு மாறா, அங்கேயே ஆடாம அசையாம உட்கார்ந்திருந்தார் அவர். அப்போதான், ஏதோ ஒரு சக்தி அவர்கிட்டே இருக்குங்கறதை உணர்ந்தாங்க மக்கள்.
தாங்கமுடியாத அந்த வெப்பத்தை தாங்கிக்கிட்ட அவர்கிட்டேயே அந்த உஷ்ணத்தைப் போக்க வழி என்னன்னு கேட்டாங்க.
இங்கே அம்மன் சுயம்பு வடிவா குடி கொண்டு தவக் கோலத்துல இருக்கா. அவளோட தவத்தின் உஷ்ணம்தான் இந்த வெப்பம். அது தணிஞ்சாதான் இந்த இடத்தோட வெப்பம் நீங்கும் அவர் வாய் திறக்காமலே அசரீரியா சொல்ல வந்திருக்கிறவர் சாதாரண ஆள் இல்லை; சித்தர்னு அப்போதான் புரிஞ்சது எல்லோருக்கும்.
அய்யா, அம்பாளோட உக்ரம் தணிய நாங்க என்ன செய்யணும் சொல்லுங்க? பணிவா கேட்டாங்க.
இந்தத் தாயோட உடல்ல இருக்கற உஷ்ணம் எல்லாத்தையும் வேற யாராவது தன்னோட உடல்ல வாங்கிக்கிட்டா, இந்த வெப்பம் தணிஞ்சிடம்? பதிலைக் கேட்டு பதறிப்போனாங்க ஊர்மக்கள். பக்கத்துலயே போக முடியாத தகிப்பை தாங்கிக்கறதா? எப்படி முடியும்னு எல்லாரும் யோசிச்சாங்க.
அப்போ, உங்க யாராலும் இதைத் தாங்க முடியாது. அதை என் உடல்ல நானே வாங்கிக்கிறேன். அந்த வெப்பத்தை வாங்கிகிட்டதும் நான் இந்தத் தோட்டத்துல இருக்கற பெரிய கிணற்றுல இறங்கிடுவேன். என்னை உள்ளேயே இறுத்தி, கிணற்றை மூடிடுங்க! உஷ்ணம் தணிஞ்சு இங்கே இருக்கற சுயம்பு அம்மனுக்கு கோயில் கட்டி கும்பிடுங்க. எல்லாமே நல்லதா நடக்கும்! சித்தர் குரல் கேட்டுச்சு.
மறுநாள் எல்லாம் அப்படியே நடந்துச்சு. சுயம்பாகக் காட்சிதந்த அம்மனை இருத்தி கோயில் அமைச்ச மக்கள் அம்பாளை என்ன பெயர்ல அழைக்கறதுன்னு யோசிச்சாங்க. அவங்க ஊருக்குத் தேடி வந்த அசையாம - அசலனமா உட்கார்ந்து பிரச்னையைத் தீர்த்துவைச்சு அம்மனையும் அடையாளம் காட்டின சித்தரோட நினைவா அசலாத்தம்மன்னு அழைக்கத் தீர்மானிச்சாங்க.
அம்மன் அன்னிக்கு கோயில்கொண்ட இடத்துக்குப் பக்கத்துல நுங்கு மரம் அதாவது பனைமரங்கள் நிறைஞ்சிருந்த பகுதியானதால நுங்கம்பாக்கம்னு அழைக்கப்பட்டுச்சு. இன்னிக்கு அந்தப் பகுதி, பசுமைமாறி பரபரப்பான இடமாயிடுச்சு. இன்னிக்கு அந்தப் பகுதி, பசுமைமாறி பரபரப்பான இடமாயிடுச்சு. குடிசையா இருந்த கோயில் கோபுரத்தோட பிரமாண்டமாயிடுச்சு. சுயம்பு அம்மனுக்கு மேலோ அம்மன் உத்தரவுப்படி திருமேனி வடிவம் அமைக்கப்பட்டிருக்கு.
எல்லாமே இப்படி மாறிட்டாலும் இன்னிக்கும் தன் அருள்ல எந்த மாற்றமும் இல்லாம கோயில் கொண்டிருக்கா அசலாத்தம்மன்.
கிழக்குப் பார்த்த ராஜகோபுரம் கடந்தா, வலது பக்கம் சப்த வீரர்கள் இருபுறமும் நாகர்களோட காவல் இருக்கற சன்னதியை தரிசிக்கலாம். அடுத்து துவாரசக்திகள் காவலிருக்கற முன் மண்டபம். மண்டபத் தூண்கள்ல தச ஆயுத தேவதைகள் இருக்கறது வித்தியாசமான அமைப்பு. இந்த தேவதைகள் பொதுவா முனிவர்கள் தவம் இருக்கற இடத்துலயும், யாகங்கள் நடக்கற இடத்துலயும் காவலா இருப்பாங்க. இது அம்மன் தவம் இருந்த இடம்கறதால இங்கேயும் இப்படி அமைச்சிருக்காங்க.
கருவறை வாயில்ல ஒருபுறம் கணபதியும் இன்னொரு பக்கம் முனிவர் வடிவத்துல அசலன சித்தரும் இருக்காங்க. மூலஸ்தானத்துல முகத்துல குளுமையோட அருள்மழை வழங்கும் அன்னையா காட்சிதர்றா, அசலாத்தம்மன். வெள்ளிக்கிழமை, பௌர்ணமி, நவராத்திரி, ஆடி மாசத்துல விசேஷ பூஜைகள் இவளுக்கு நடக்குது.
அசையாத தன்மை உடைய அம்மன் என்பதால் அசையாத சொத்துக்கள் வாங்க, அதுசம்பந்தமான வழக்குகள் தீர, நிலையான செல்வம் பெற அசையாத மாங்கல்ய பாக்யம் பெற, வம்சம் தழைக்கன்னு ஏராளமான வேண்டுதல்களோட வர்றாங்க பக்தர்கள். தன்மேல அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கிற பக்தர்களுக்கு அனைத்தப் பேறுகளும் தந்து ஆசியளிக்கிறா அசலாத்தம்மன்!

எங்கே இருக்கு: சென்னை, நுங்கம்பாக்கத்தில், ஸ்டெர்லிங் சாலை பேருந்த நிறுத்தத்திலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில், வடக்கு மாடவீதியில் இருக்கிறது அசலாத்தம்மன் கோயில்.

தரிசன நேரம்: காலை 6 முதல் 11 வரை: மாலை 5 முதல் 8 வரை.

Comments