அகத்தியர் ஏரி; பூதானந்தா கோயில்!

கர்நாடகாவின் பகல்காட் ஜில்லாவில் உள்ளது பதாமி நகரம். பெங்களூரிலிருந்து இதற்கு நேரடியாக பஸ் உண்டு. ஹூப்ளி, பீஜாப்பூர் பஸ்களிலும் பதாமிக்குச் செல்லலாம்.
பதாமியின் பெயர் முன்பு வாதாபி. இப்போது வாதாபியும் பிள்ளையாரும் நினைவுக்கு வந்திருக்குமே. சாளுக்கிய மன்னரை தோற்கடித்த சிறுத்தொண்டர், இங்கிருந்த அழகிய பிள்ளையாரை எடுத்து வந்து, தஞ்சை ஜில்லாவின் திருச்சொங்கட்டங்குடியில் பிரதிஷ்டை செய்தார். இதுதான் தமிழ்நாட்டின் முதல் பிள்ளையார் என முன்பு நம்பப்பட்டது. ஆனால், தற்போது ஆய்வில், அதற்கு முன்பே தமிழ்நாட்டில் பிள்ளையார் வழிபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
படத்தில் காண்பது அகத்திய ஏரி. ஒரு காலத்தில் இந்தப் பகுதியில் இரு அரக்கர்கள் அட்டூழியம் செய்து வந்தனர். அவர்கள்தான் வாதாபி, இல்வலன்.
வாதாபியை ஆடாக மாற்றி, விருந்து சமைத்து உபசரிப்பவன் இல்வலன். சாப்பிட்டதும் ‘வாதாபி வா’ என்பான். அவனும், சாப்பிட்டவரின் வயிற்றைக் கிழித்து வெளிப்படுவான். இதேபோல், அகத்தியரிடம் முயன்ற போது, அவர், வாதாபியை ஜீரணம் செய்து விட்டார். அதையடுத்து, இல்வலனும் அழிந்தான். இந்தச் சம்பவம் நடந்தது பதாமியில்தான் என நம்பப்படுகிறது.
இந்த ஏரியின் கரையில்தான், பூதனார் கோயில் கட்டப்பட்டுள்ளது. உள் கர்ப்பகிரகமும் மண்டமும் சாளுக்கிய மன்னரால் கட்டப்பட்டது. இந்தக் கோயிலின் வடிவமைப்பு தென்னிந்திய, வட இந்திய, சாளுக்கிய கட்டடக்கலையை பின்பற்றிக் கட்டப்பட்டுள்ளது. மண்டபத்தின் இருபுறமும் நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளதால், உள்ளே வெளிச்சம் விழுகிறது. நுழைவாயில் கதவருகே ஒருபுறம் மகர வாகனத்தில் கங்காதேவியும், மறுபுறம் ஆமையின்மீது, யமுனா தேவியும் அமர்ந்துள்ளனர். லிங்கம் தான் பூதானந்தராக காட்சி தருகிறார். கோயில் வித்தியாசமாய் அமைந்திருப்பதுதான் சிறப்பு!

ஸ்ரீ சாந்த துர்கா!

துக்கம் என்னும் கோட்டையை தகர்ப்பவள்; துர்க்கமன் எனும் அசுரனை மாயத்தவள்... ஸ்ரீதுர்கா. அந்த அம்பிகையை, சாந்த துர்கா எனும் பெயரில் நாம் தரிசிப்பது கோவாவில்.
இந்த பெயர் எப்படி வந்தது அன்னைக்கு? ஒருமுறை ஈசனுக்கும், நாராயணனுக்கும் ஒரு வாக்குவாதம் ஏற்பட்டது. அது யுத்தமாகி ஈரேழு உலகங்களும் நடுநடுங்கியது. இவர்களை சமாதானம் செய்ய முயன்றார் பிரம்மா! ம்ஹூம்... சண்டை நின்றபாடில்லை! உடன் ஓடினார், அன்னை ஆதிபராசக்தியை நோக்கி. அடைக்கலம் தந்த தேவியும், தன் கருணைக் கண்களை ஏறிட்டு, சிவா - விஷ்ணுவை இரு உள்ளங்கைகளில் ஏந்தினாள். சமாதானம் செய்தாள். அன்னையிடம் அமைதி அடையாதவர் எவரும் உண்டோ? இவ்வாறு சிவ, நாராயணரை சாந்தப்படுத்திய தேவி ‘சாந்த துர்கா’ ஆனாள் என்பது புராண வரலாறு.
சரஸ்வத் பிராம்மணர்கள் என்ற அந்தணர்களின் குல தேவதையே ஸ்ரீசாந்த துர்கா. கோவாவின் மிக முக்கியமான, பெரிய ஆலயங்களுள் இதுவும் ஒன்று. கண்ணைக் கவரும் விதமாக அழகுற அமைந்துள்ள கோபுரங்களும், ஆறு நிலைகள் கொண்ட தீபத்தம்பமும் நம்மை ஈர்த்து நிறுத்துகின்றன. விழா நாட்களில் தீபங்கள் ஏற்றப்பட்டு தீபத் தம்பம் ஜெகஜோதியாகக் காட்சி அளிக்கும். கிழக்கு பார்த்த கோபுரத்தின் இருபுறமும் ‘நகர் கானா’ எனப்படும் இசைக் கருவிகள் உள்ளன. இவை விசேஷ நாட்களிலும், தினமும் மூன்றுவேளை ஆரத்தி நடைபெறும்போதும் இசைக்கப்படும். பக்தர்கள் தங்க, ஆலயத்தில் அறைகள் அமைந்துள்ளன.
தீபத் தம்பத்துக்கு முன்பாக ஷேத்திர பாலகர் சன்னதி அமைந்துள்ளது. கணபதி மற்றும் நாராயணருக்கு தனி சன்னதிகள் உள்ளன. இவர்களை வணங்கியபின் நீண்ட நடை தாண்டிச் சென்றால் கருவறையில் காட்சி தருகிறாள் அன்னை. பெயருக்கேற்ற கருணை ததும்பும் விழிகள்; நான்கு கரங்கள்; நின்ற திருக்கோலம். மேலிரு கைகளில் நாகங்களும், கீழ் வலக்கை அபய ஹஸ்தமாகவும், இடக்கை வர ஹஸ்தமாகவும் கொண்டு, அன்பே உருவாய் அருள்காட்சி தருகிறாள். அன்னையைக் காணக் கண்ணிரண்டு போதாது. ‘என்னிடம் உன் பாரங்களை, துன்பங்களை இறக்கி வைத்துவிடு. நான் உன்னை பார்த்துக் கொள்கிறேன்’ என்று புன்னகை புரியும் வதனம். சமாதானமாகிய சிவனும், விஷ்ணுவும் இருபுறமும் காட்சி தருகின்றனர். தேவிக்கு முன்னால் ஆறு அங்குல உயரத்தில் ஒரு சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அபிஷேகங்கள் அன்னைக்கும், சிவலிங்கத்துக்கும் சேர்ந்தே நடப்பது இங்கு விசேஷமானது. சக்தியும், சிவனும் இணைபிரியாதவர் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.
தேவிக்கு முன்பாக ஒரு சிங்க உருவம் வரைந்த பெல்ட் போன்ற ஒரு பட்டை உள்ளது. இதற்கு ‘சிம்மபட்டா’ என்று பெயர். திருமணம், பிள்ளைப்பேறு, வியாபார ஒப்பந்தங்களுக்கு உத்தரவு பெற பக்தர்கள் இப்பட்டைக்கு பூஜை செய்கின்றனர். அந்தப்பட்டையில் 58 இடங்களில் முழு மலர்கள், மொட்டுக்கள், இதழ்களை குறிப்பிட்ட கிரமமாக வைத்து உத்தரவு கேட்கும் பழக்கம் இன்றும் தொடர்கிறது.
ஆதியில் இவ்வாலயம் கெலோஷி என்ற இடத்தில் இருந்தது. பின்னர் 1566ல் போர்த்துகீசியர் படையெடுப்பின்போது தேவியின் திருவுருவம் போன்டா (ponda) தாலுகாவிலுள்ள காவேலம் (kavelam) என்ற இடத்தில் ஒளித்து வைக்கப்பட்டது. அச்சமயம், அங்கிருந்த தாழ்த்தப்பட்ட மக்களே அதைப் பாதுகாத்து வந்தனர். அதற்கு நன்றி கூறும் விதமாக இன்றும் அவர்களை, ஆலய கருவறை வரையில் அனுமதிக்கிறார்கள். நாம் தரிசிக்கும் ஸ்ரீசாந்ததுர்கா தேவியின் சிலாரூபம் 1902ல் உருவாக்கப்பட்டது. பழைய விக்கிரகம் இன்றும் கருவறையில் தேவியின் பின் புறம் நிறுவப்பட்டு தினப்படி ஆராதனைகள் செய்யப்படுகிறது.
நவராத்திரி உற்சவம் இங்கு மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தினம் ஒரு அலங்காரத்தில் அம்மனின் திருவுலா அமர்க்களமாக இருக்கும். யாகங்கள் விமரிசையாக நடைபெறும். சிவன், விஷ்ணு, அம்பாள் என மூவரும் ஒரே சன்னிதியில் காட்சி தந்து, நம் ஊழ்வினைகளைக் காணாமல் போகச் செய்யும் இந்த உன்னத ஆலயம், கோவா செல்வோர் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒன்று.
இருப்பிடம்: கோவாவில் ‘போன்டா’ (ponda) தாலுகாவில் ‘காவேலம்’ (Kavalem) என்ற இடத்தில் அமைந்துள்ளது. Panajiயிலிருந்து 33 கி.மீ.
தொடர்புக்கு: 0832-2312557, 2319900

Comments