கோ ஜாகிரி

வட இந்தியப் பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 22 வரையிலான ஆஸ்வின் (ஐப்பசி) மாத முழு நிலவு நாள், சரத்பூர்ணிமா. இந்நாளில், முழு மதியும், பூமியும் ஒன்றுக்கொன்று வெகு அருகில் அமையப்பெற்றிருப்பதால், நம் மீது படியும் சந்திர கிரணங்களால் நம் உடலும், உள்ளமும் ஊட்டம் பெறுகின்றன. இது, மகாராஷ்டிராவில் (கோ ஜாகிரி), ஒடிஷாவில் (குமார நிலவு), குஜராத்தில் (சரத் பூணம்), மே.வங்கத்தில் (லொக்கி பூஜோ), பீகார் மிதிலா பிரதேசங்களில் (கோஜாக்ரகா) கொண்டாடப்படுகிறது.
கோ - யார், ஜாக்ரதி - விழித்திருப்பது. அன்றிரவு, மகாலட்சுமி ஒவ்வொரு வீட்டுக்கும் எழுந்தருளி யார் தன் மீது உண்மையாகப் பக்தி செலுத்துகின்றனர் என்பதைக் கண்டறிய, ‘கோ ஜாக்ரதி?’ எனக் கேட்டவாறு நோட்டம் விட்டுக் கொண்டு போவாள் என்பது ஐதீகம். நியதிப்படி விரதம் அனுசரிப்பவர்களுக்கு அளவில்லா செல்வத்தையும், நல்வாழ்வையும் அளிப்பாளாம். அதனால்தான் இப்பூரண நிலவு ‘கோ ஜாக்ரதி பௌர்ணமி’ எனப் பெயர் பெற்று பின் ‘கோ ஜாகிரி’ என மருவிவிட்டது.
இதை விளக்குகிறது அன்று மனனம் செய்ய வேண்டிய கீழ்காணும் ஸ்லோகம்:
நிஷிதே வரதே லக்ஷ்மி, கோ ஜாக்ரதி இதி
பாஷிணி
ஜகதி பிரம்மதே தஸ்யம் லோக சேஷ்டாவலோகினி
தஸ்மே விரதம் ப்ரயச்சாமி யோ ஜாகர்த்தி
மஹீதலே"
அன்று பகலில் பசும்பால் மட்டும் அருந்தி பட்டினி இருப்பார்கள். இரவு சந்திரன் உதயமானதும், குறிப்பிட்ட முகூர்த்த வேளையில் வெண்ணிற ஐராவத யானை மேல் காட்சி தரும் இந்திரனையும், முதலை வாகனத்தில், தாமரைப் பூவில் அமர்ந்து அருள்பாலிக்கும் லக்ஷ்மியையும், சந்திரனுடன் ஒருசேரப் பூஜித்துவிட்டு, இளநீர் மற்றும் அவல் நிவேதனம் செய்து அதையே உட்கொண்டு விரதம் முடிப்பர். இவ்வாண்டு பூஜை நேரம் அக்டோபர் 7 ஆம் தேதி இரவு 11.44 முதல் 00-33 வரை.
சுண்டக் காய்ச்சிய பாலில் உலர்ந்த பழங்கள், குங்குமப் பூ கலந்து மசாலா பால் தயாரிப்பார்கள். அதை நிலவொளியில் வைத்து மறுநாள் காலையில் அருந்துவார்கள். சந்திர கிரணங்களிலிருக்கும் மருத்துவக் குணங்கள் அடங்கிய துகள்கள் அதில் படிந்து உடலுக்கு வலுவூட்டும் என்பது நம்பிக்கை. மேலும், இரவில் குளிர்ந்த பாலுடன் அவல் சேர்த்துச் சாப்பிட்டால் இப்பருவக் காலத்துக்கே உரிய பித்த நோய் அண்டாது என்பது ஆயுர்வேத உண்மை.
இந்நாளில் தேவியை வரவேற்க வீடு, தெரு, கோயில்கள் நன்கு அலங்கரிக்கப்பட்டு, தீப விளக்கொளியில் ஜொலிக்கும். வீட்டில் யாருமில்லை என நினைத்து மகாலட்சுமி முன்னேறிப் போய்விடாமலிருக்க, வெளி வாயிலில் விளக்கு ஏற்றி வைப்பர்.
கோ ஜாகிரி விழா, கோவா மர்டோலி நகரில் மோகினி அவதார வடிவில், லக்ஷ்மி மகாலஸா நாராயணியாக அருள்பாலிக்கும் ஆலயத்தில் மிகக் கோலாகலமாக நடந்தேறும். ஆலய முகப்பில், 40 அடி உயரமுடைய, 150 சிறு அகல் விளக்குகளைக் கொண்ட, 21 வட்டத் தட்டுகளுடன் கம்பீரமாய் உயர்ந்து நிற்கும் பித்தளை தீபஸ்தம்பம், 75 லிட்டர் எண்ணெய் கொண்டு ஏற்றப்பட்டு ஜெகஜ்ஜோதியாக மகாலஸா (லக்ஷ்மி) தேவியை வரவேற்பது காணக் கிடைக்காத காட்சி.

Comments