கர்ணி மாதா

ராஜஸ்தான் மாநிலம், பிகானேர் மாவட்டத்தில் ‘தேஷ்நோக்’ கிராமத்தில் உள்ளது துர்கையின் அம்சமான கர்ணி மாதா கோயில். இது கோட்டை அரண்போல் மதில் சுவர்களால் சூழப்பட்டு காட்சியளிக்கிறது. நுழைவாயில் பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்டு, ரஜபுத்திர - முகமதிய கட்டட அமைப்பில், நுண்ணிய வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. உள்ளே நுழைந்தவுடன் இருபக்கமும் உள்ள சுவர்களில் பிறைச் சந்திரனைபோல் கூரை அமைக்கப்பட்ட சிறுசிறு மண்டபங்கள். முழுவதும் சலவைக் கற்கள். ஜாக்கிரதை! மிதித்து விடாதீர்கள்" என்கிறார் வழிகாட்டி. கீழே சாம்பல் மற்றும் கருப்பு நிறத்தில் ‘சர சர’வென்று கால்களின் மேல் ஏறி ஓடுகின்றன எலிகள். பெரிய பிராகாரம். நடுவில் கருவறை.
சிறிய குகை போல் உள்ள அறையில் கர்ணி மாதா வீற்றிருக்கிறாள். வாயிற் கதவுகள் வெள்ளியினாலானவை. அதில் கர்ணியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றில் தேவி கையில் சூலத்துடனும், சுற்றிலும் எலிகளுடனும் காட்சி தருகிறாள்.
மூலவர் சிலை ஜெசல்மர் மற்றும் ஜோத்பூர் சிவப்பு கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. அம்பாள் தலையில் மகுடத்துடனும், வலது கையில் சூலம், இடது கையில் கபாலத்துடனும், சிம்ம வாஹினியாகக் காட்சி தருகிறாள். விக்ரஹம் முழுவதும் குங்குமத்தால் (சிந்தூர்) மூடப்பட்டிருக்கிறது. அம்பாளின் முன்னால் உள்ள பெரிய தட்டில் லட்டுகள். அதை எலிகள் கொரித்துக் கொண்டிருக்கின்றன. இன்னொரு தட்டில் பால். அதை இன்னொரு எலி பட்டாளம் ருசி பார்த்துக் கொண்டிருக்கிறது.
இக்கோயிலில் 20,000க்கும் மேற்பட்ட எலிகள் உள்ளனவாம். எலிகள் எல்லாம் ஒரே அளவில் உள்ளன. எலி குட்டிகளை யாரும் கண்டதில்லை. இவை எப்படி இனப்பெருக்கம் ஆகின்றன என்றோ, எப்படித் தோன்றுகின்றன என்றோ எவருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. சுற்றியுள்ள மனிதர்களைப் பற்றி அவை கவலைப்படுவதே இல்லை. பறவைகளிடமிருந்து காப்பற்றுவதற்காக மேலே பெரிய வலை போட்டிருக்கிறார்கள். இவையும் கோயிலைவிட்டு வெளியே செல்வதில்லை. இவற்றை யாராவது அறியாமல் மிதித்துக் கொன்று விட்டால், பரிகாரமாக வெள்ளியிலோ அல்லது தங்கத்திலோ எலி செய்து கோயிலுக்கு அளித்துவிட வேண்டும் என்கிறார்கள்.
இங்கு வெள்ளை எலிகளும் சில உண்டு. அவை கண்ணில்பட்டால் பாக்கியம் என்கிறார்கள். பக்தர்கள் கொடுக்கும் தின்பண்டங்கள் எல்லாம் எலிகளுக்குப் படைக்கப்பட்ட பிறகே மற்றவர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இந்த எலிகளை ‘காபாக்கள்’(kabas) என அழைக்கிறார்கள். எலிகளால் வரும் தொற்றுநோய்கள் எதுவும் எவருக்கும் இந்தப் பகுதியில் வந்ததாகத் தகவல் இல்லை.
கோயிலுக்கு வெளியே ஊர் தெரிகிறது. மிகச்சிறிய ஊர்தான். ‘சரண்’ வம்சத்தவர் இங்கேயே வீடு கட்டிக் கொண்டு பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறார்கள். இங்கு எலிகள் தெய்வங்களாக வணங்கப்படுகின்றன. இவை அம்பாளின் சந்ததியினர்" என்கிறார் கோயில் பூசாரி. இதென்ன கதை?
கர்ணி, ‘சரண்’ என்னும் பழங்குடி இனத்தைச் சார்ந்தவர். இவர் 1387-ம் ஆண்டு ஜோத்பூர் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் ஒரு தம்பதியர் ஆறாவது குழந்தையாகப் பிறந்தார். இவர் பிறப்பதற்கு முன் தினம் அவரது தந்தையின் கனவில் துர்கை தோன்றி, ‘என்னுடைய அம்சமான குழந்தை ஒன்று உனக்குப் பிறக்கும்’ என்றாராம். ஆண் வாரிசே வேண்டும் என்று நினைத்திருந்த குடும்பத்தினருக்கு இக்குழந்தையின் வரவு அவ்வளவு திருப்தியாக இல்லை. ஆனால், சிறு பிராயத்திலிருந்தே பல அற்புதங்களைச் செய்ததனால் பெற்றோர் அவருக்கு ‘கர்ணி’ என்று பெயரிட்டனர்.
இவர் ஐந்து வயது சிறுமியாக இருந்தபோது இவரது தந்தையை நாகம் தீண்ட, கைகளால் தடவியே விஷத்தை எடுத்துவிட்டாராம் கர்ணி. பல இடங்களில் தரிசாகக் கிடந்த நிலங்களை வனப்புடையதாக்கினார். ஒரு கிராமத்தில் கொள்ளையர்கள் அட்டகாசம் செய்த போது அங்கு சிம்மத்துடன் தோன்றி அவர்களை அழித்தார். இவருக்கு 29 வயதில் திருமணமும் நடந்தது. மணமகனை இவரே அடையாளம் காட்டினார். கணவர் பெயர் தேபா. திருமண ஊர்வலத்தின் போது மாப்பிள்ளை, பல்லக்கின் திரையை நீக்கிப் பார்க்க, அங்கே சிம்ம ஸ்வரூபிணியாக துர்கை காட்சியளித்தாள். பின் அந்த உருவம் மறைந்து கர்ணி தோன்றினாளாம். கணவரிடம் தன் அவதார நோக்கத்தைக் கூறி, தன்னுடைய தங்கையை அவருக்கு வாழ்க்கைத் துணையாக்கினாராம்.
அதிசயங்கள் பல நிகழ்த்தி, கடைசியில் ‘தேஷ் நோக்’ என்ற வனப்பகுதியில், ஒரு குகையில் இருந்து கொண்டு மக்களுக்கு அருள்புரிந்தார் கர்ணி. ஜோத்பூரை ஆண்ட மூன்று மன்னர்கள் இவரது ஆசியுடன் ஆட்சி அமைத்தனர் என்கிறார்கள்.
கர்ணியின் வளர்ப்பு மகன் ஒரு சமயம் ‘கொலயட்’ என்ற ஊரில் நடந்த திருவிழாவில் கலந்து கொண்டு குளத்தில் நீராடியபோது துரதிருஷ்டவசமாக நீரில் மூழ்கி இறந்தான். கர்ணி யமனை அழைத்து மகனின் உயிரைத் திருப்பி தரக் கோரினார். யமன் மறுக்கவே, தமது சக்தியால் அவனை உயிர்ப்பித்தார். பின்னர், தனது சந்ததியினர் எவர் இறந்தாலும் அவரது உயிர் யமனிடம் போகாது என்றும், அது தற்காலிகமாக எலியாக உருப்பெற்று பின் ‘சரண்’ இனத்தில் புனர் ஜென்மம் பெறுவார்கள் என்றும் அறிவித்தார். அதைப் போலவே, இங்கு ஒரு எலி இறந்தால் ‘சரண்’ இனத்தில் ஒரு உயிர் ஜனிக்கிறது. இது இங்கு நடக்கும் அதிசயம்" என்று முடித்தார் பூசாரி.
செல்லும் வழி
பிகானேர் (Bikaner)லிருந்து 30.கி.மீ. பேருந்து வசதி உண்டு.

 

Comments