திருமலை மகிமை

மந்திரம் என்றால் என்ன? எது உச்சரிக்கிறவனை காப்பாற்றுகிறதோ அதற்குப் பெயர்தான் மந்திரம். எம்பெருமானின் நாமத்தை நாம் சொன்னாலே போதுமே! திருமலையே கோவிந்தனாக, எம்பெருமானாக அல்லவா இருக்கிறது? திருமலையை நினைத்துக்கொண்டு, அவன் பெயரை உச்சரித்தாலே, இந்த லோகத்திலும், பரலோகத்திலும் பரம சௌக்கியமாக நாம் இருக்கலாம்" என்றார் தம் சொற்பொழிவில் உருப்பட்டூர் ராஜகோபாலாச்சாரியார் ஸ்வாமிகள்.
நமக்கு இருக்கும் பெரிய வினை எது? பிறவி எனும் வியாதிதான். இந்நோய்க்கு மருந்து ஏதுமில்லை. அந்த மருந்தை திருவேங்கடவன் ஒருத்தன்தான் நமக்குக் கொடுக்கணும். திருமலையை நாம் பார்க்கணும்; திருமலையில் இருக்கக்கூடிய வேங்கடவன் நம்மைப் பார்க்கணும். அப்போதான் பிறவி மேல பிறவிகள் எடுத்து வேதனைப்பட்டுக்கொண்டு இருக்கோமே, அது போகும். பிறவி எனும் நோயைத் தீர்ப்பதற்கான அருமருந்துதான் ‘ப்ரபத்தி’ என்று சொல்லப்படுகிற சரணாகதி. திருமலையில் வாசம் செய்யும் திருவேங்கடமுடையானின் சரணத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், எந்த வியாதியும் நம்மைப் பிடிக்காது.
நம்மை நரகத்தில் தள்ளுவது இரண்டே இரண்டு வார்த்தைகள்தான். ‘நான்’ என்கிற ஒரு வார்த்தை; ‘என்னுது’ என்கிற அடுத்த வார்த்தை. ‘நான் நான்’னு சொல்வதற்கு பதில் ‘அடியேன்’னு மாத்திக்கலாம். ‘அடியேன்’ என்கிற பதத்தைப் போட்டுக் கொண்டாலே பாதி பாவம் போயிடும். அடுத்து, நமது துர்குணங்களுக்கு அடிப்படையாக இருப்பது மமகாரமான ‘என்னுது’ங்கற பதம். ‘பகவானே எல்லாம் நீ தான்’னு சொல்ற பக்தியை, புத்தியை பகவான் இல்ல; அந்தத் திருமலையே அருளட்டும்.
உபநிஷத்துல ஒரு கதை உண்டு. உடம்புல இருக்கற பாகங்கள் எல்லாம் ஒண்ணுக்கொண்ணு ‘நான்தான் பெரியவன், நான்தான் பெரியவன்’னு சொல்லிக் கொண்டு இருந்ததாம். அப்படியே பிரம்மாக்கிட்டேயும் போய் சொன்னதும், பிரம்மா ‘ஒவ்வொருத்தராய் கொஞ்ச நேரம் சரீரத்தை விட்டுட்டு வாங்கோ’ன்னார். வாக்கு போச்சு; அதனால் பேச்சுதான் போச்சு. ஒண்ணும் ஆகல. அப்புறம் அது திரும்ப வந்துடுத்து. இதேமாதிரி கண், காது, மனசு எல்லாம் போச்சு, ஒண்ணும் பெரிசா ஆகல. கடைசில, பிராணன் மெல்லக் கிளம்ப, எல்லாத்துக்கும் சக்தி போக ஆரம்பிச்சுடுத்து. எல்லா பாகங்களும், ‘நீ தான் பெரியவன்’னு பிராணனைப் பார்த்துக் கைகூப்பி நின்னுது.
உலகத்தில் இருக்கக்கூடிய அத்தனை புண்ணியங்களும் திருமலையின்தான் வாசம் செய்கின்றன. இந்த லோகத்தில் இருக்கக்கூடிய போகத்தைத் (இனிமையான அனுபவம்) திருமலையே கொடுக்கிறது.
ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்கக்கூடிய நித்யசூரிகள், வைகுண்ட வாசிகள், எல்லாம் திருமலையில் இருக்கணும்னு ஆசைப்பட்டு வருகிறார்களாம். அப்படி நம் பாவத்தை எல்லாம் தீர்க்கும் மலை திருமலை.
எத்தனை எத்தனையோ வாகனங்களில் பகவான் வந்தாலும் கருட சேவைதான் மிக உயர்ந்தது. எம்பெருமானின் திருவடி சேவை என்பது வேறு எந்த வாகனத்திலும் ஆகாது. சிறிய திருவடி (ஹனுமந்த வாகனம்) மற்றும் பெரிய திருவடி( கருட வாகனம்) வாகனத்தில் மட்டும் தான் இந்த திருவடி சேவை ஆகும். இந்தத் திருவடி சேவை என்ன சொல்றது தெரியுமா? ‘இந்தத் திருவடியை பிடிச்சிக்கோங்கோ; மோட்சம் கட்டாயம் கிடைக்கும்’னு சொல்றது. கருட சேவையை சேவிச்சாலே பாவங்கள் எல்லாம் போயிடும். கருடன் எப்படி ‘திருவடியைப் பிடிச்சிக்கோங்கோ’ன்னு காட்றானோ, அதேபோலத்தான் இந்தத் திருமலையும் எம்பெருமானைக் காட்டுகிறது. ஆச்சாரியன் (குரு) ஸ்தானத்தில் நின்று, ‘பெருமாளை, மலையப்பனைப் பிடிச்சிங்கோங்கோ. அவன் திருப்பாதம் இதுதான்’னு நமக்குக் காட்டிக் கொடுக்கிறது.
அதனால்தான், குருகூர்ச் சடகோபரான நம்மாழ்வார் சொன்னார்:
குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே!
அதாவது, திருமலை திருப்பதிக்குப் போ, அங்கே மலைமேல, ‘பகையாங்கு ஆழியும் பால்வெண் சங்கமும் தகைபெறு தாமரைக் கைகளில் ஏந்தி’ வேங்கடவன் நிற்கிறான். அவனை வழிபடுன்னு ஆழ்வார் சொல்லலை. அந்தத் திருமலையை வழிபடு, அது போதும்னார். ஏன்? பகவானை நோக்கி சீடர்களை ஆற்றுப்படுத்துவார்கள் ஆசார்யர்கள். திருமலையும், இப்படி பகவானிடம் கொண்டு சேர்ப்பதனாலே, ஆசார்யனாகவே வழிபடத் தகுந்ததுதானே!"

 

Comments