திருமஞ்சனம்

ஸ்ரீபுரத்தில் குடி கொண்டிருக்கிறாள் ஸ்ரீராஜராஜேஸ்வரி. அம்பிகையைப் போற்றி மக்கள் பூஜை செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறாள் என்ற செய்தி இந்திரனுக்குத் தெரிய வந்தது. ‘மானிடப் பூச்சிகள் பூஜிப்பதை அம்பிகை ஏற்றாளா? அப்படியானால் நாமும் பூஜை செய்து அவளைச் சந்தோஷப்படுத்த வேண்டும்’ என்றெண்ணினான் அவன்.
தாயே, நாளை என் பூஜையை ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று வேண்டினான். மறுநாள் இந்திரன் அம்பிகைக்கு அபிஷேக, ஆராதனைகளைச் செய்தான். அச்சமயம் துர்வாசர் பூவுலகம் வந்திருந்தார். மறுநாள் அவர் தேவர் உலகம் சென்றபோது கூடை, கூடையாகப் பூக்களைக் அகற்றிக் கொண்டிருந்தனர். இங்கே என்ன பூஜை நடந்தது?" என்று துர்வாசர் கேட்க, அம்பிகைக்கு இந்திரன் செய்த விமரிசையான பூஜையைப் பற்றிச் சொன்னார்கள்.
எதற்காக திடீரென்று இந்திரன் பூஜித்தான்?" எனக் கேட்ட துர்வாசர், காரணம் ஒன்றுமில்லை என்று அறிந்து ஆச்சரியப்பட்டார்.
எப்போதும் உல்லாச வாழ்வை விரும்பும் இந்திரன் உள்ளத்திலே, நிஷ்காம்ய பூஜை - எந்த வேண்டுகோளும் இல்லாத பூஜையைச் செய்ய வேண்டும் என்று உதிக்கச் செய்த தேவியின் அருளை எண்ணி வியந்தார். ஸ்ரீபுரம் சென்று அம்பிகையிடம், கொஞ்சம் செல்வம் சேர்ந்ததும் கடவுளை மறக்கும் இக்காலத்தில், எல்லா ஐஸ்வர்யங்களையும் உடைய இந்திரனை, எந்த பலனும் வேண்டாமல் பூஜை செய்ய வைத்த உன் அருளைப் போற்றுகிறேன்" என்றார்.
சிம்மாசனத்தில் வீற்றிருந்த அம்பிகை, என் பக்கம் வந்து பார்" என்றாள். அவள் உடலெல்லாம் கொப்புளமாக இருந்தது. முனிவர் திடுக்கிட்டு, தாயே, இது என்ன அலங்கோலம்? என்ன விளையாட்டு?" என்று கேட்டார். நேற்று இந்திரன் செய்த பூஜையைப் பற்றிச் சொன்னாயே! இமயத்திலிருந்து மிக, மிகக் குளிர்ந்த நீரால்தான் அவன் எனக்கு அபிஷேகம் செய்தான். ஆனால், ‘இதைப் போல் யார் பூஜை செய்வர்?’ என்ற அகங்காரத்தால் குளிர்ந்த நீரும் கொதித்தது. அதனால் என் உடல் முழுவதும் கொப்புளம் ஏற்பட்டது" என்றாள் அம்பிகை.
துர்வாசர் துடிதுடித்துப் போனார். தாயே, இந்தக் கோலத்தைப் பார்த்துக் கொண்டு, நான் வெறுமனே நிற்பதா? பரிகாரம் சொல்லுங்கள்" என்று வேண்டினார்.
பரிகாரம் உள்ளது. பூவுலகில் உள்ள கோயிலில் ஒரு வைத்தியர் இருக்கிறார். அவரிடம் சென்று வா" என்றாள் அம்பிக்கை.
உடனே துர்வாசர் வெகு வேகமாகப் பூலோகம் சென்றார். அம்பிகை சொன்ன கோயிலுக்குப் போனார். அங்கே எந்த வைத்தியரும் இல்லை. தர்மகர்த்தா இருந்தார், அர்ச்சகர் பூஜை செய்து கொண்டிருந்தார். தவிர, அம்பிகையின் சன்னிதானத்தில் யாரோ ஒருவர் கண்ணீர் விட்டு வழிபட்டுக் கொண்டிருந்தார். மற்றபடி, எந்த வைத்தியரையும் காணாத துர்வாசர், மீண்டும் ஸ்ரீபுரம் வந்தார்.
அம்பிகை ஜல்... ஜல்... என்று சலங்கை ஒலிக்க, சந்தோஷமாக நடனமாடிக் கொண்டிருந்தாள். அவளுடைய திருமேனி தேஜஸ் மிகுந்து ஒளி வீசிக் கொண்டிருந்தது. தாயே, இது என்ன ஆச்சர்யம்" என்று கேட்டார் துர்வாசர். ஏன், நீ அந்தக் கோயிலில் வைத்தியனைப் பார்க்கவில்லையா" என்று வினவினாள் அன்னை. அர்ச்சகர், தர்மகர்த்தாவைத் தவிர, யாரோ ஓர் ஏழை கண்களில் நீர் வழிய உன்னைத் தியானம் செய்து கொண்டிருந்தான். வேறு யாரையும் நான் காணவில்லையே" என்று கூறினார் துர்வாசர்.
சன்னிதானத்தில் என்னை நினைத்து கண்களில் நீர் வர ஒருவன் இருந்தானே, அவனே நான் சொன்ன வைத்தியன். அவன் கண்ணீரால் எனக்கு அபிஷேகம் செய்தான். உடனே என் உடலில் இருந்த கொப்புளங்கள் போய்விட்டன" என்றாள் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி.
துர்வாசரின் உள்ளம் குளிர்ந்தது. ‘உண்மை அன்பினால் உள்ளம் உருகி, மனம் கசிந்து, விடுகின்ற கண்ணீர் எம்பெருமாட்டியின் திருமஞ்சன நீராகி அவள் உடலையும், உள்ளத்தையும் குளிர்வித்ததே’ என்று நினைத்துப் போற்றினார்.
என் பாவும் ஆறுகடல்
ஏழிருந்தும் என் அம்மை
அன்பாளர் கண் அருவி
ஆடுவது திருவுள்ளம்!"
என்பது பாச வதைப் பரணி.
அன்புக்கு அடையாளம் கண்ணீர். அம்பிகையை ஆராதிப்பதில் அகங்காரம் கூடாது என்பது இதிலிருந்து தெரிய வருகிறது.
- கி.வா.ஜ. அவர்கள் எழுதிய ‘கந்தவேள் கதையமுதம்’ நூலிலிருந்து...
பூஜிக்கும் முறை!
பக்த துக்காராம் ஒரு மடாதிபதியைப் பார்க்கச் சென்றார். அப்போது மடாதிபதி பூஜையில் ஈடுபட்டிருந்தார். மூன்று மணி நேரத்துக்கும் மேலாக துக்காராம் காத்திருந்தார். பூஜை முடிந்து, மடாதிபதி எல்லோருக்கும் பிரசாதம் கொடுத்தார். துக்காராமும் அவரை நமஸ்கரித்து, பிரசாதம் வாங்கினார்.
யார் நீ?" என்று மடாதிபதி கேட்டார்.
துக்காராம், பல வருடங்களாக தங்களைத் தரிசிக்கக் காத்திருந்தேன். இப்போதுதான் காலம் கனிந்தது" என்றார்.
எப்போது வந்தாய்?"
பால்காரன் கொடுத்த பால் தண்ணீராக இருக்கிறது; அவனை விசாரிக்க வேண்டும் என்று தாங்கள் பூஜையின்போது நினைத்தீர்களே... அப்போதே நான் வந்தேன்."
இப்போது மடாதிபதி, துக்காராமின் காலில் விழுந்து வணங்கினார்.

Comments