துளசி- சகல தோஷங்களையும், துயரங்களையும் விரட்டும்

துளசி- சகல தோஷங்களையும், துயரங்களையும் விரட்டும் வல்லமை வாய்ந்தது. புராணங்களும் ஞானநூல்கள் பலவும் இதன் மகிமைகள் குறித்து விவரிக்கின்றன.
இந்த உலகில் ஓரிடத்தில் வகை வகையாக மலர்ச் செடிகள் செழித்து வளர்ந்திருந்தாலும் அங்கு துளசிச் செடி இல்லையெனில், அந்த இடத்தை நந்தவனமாக ஏற்க இயலாது. துளசி படர்ந்த இடத்தை ‘பிருந்தாவனம்’ என்பர். துளசிக்கு ‘பிருந்தா’ என்றும் ஒரு திருப்பெயர் உண்டு.
வாழ்நாளின் அந்திமத்தில் துளசி தீர்த்தம் உட்கொள்பவர், மகா விஷ்ணுவுடன் ஐக்கியமாகி விடுவார்கள் என்பது நம்பிக்கை.
பூஜைக்காக துளசியைப் பறிக்கும்போது, அதிகாலை வேளையி லும், விரல் நகம் படாமல் விஷ்ணுவின் பெயரை உச்சரித்தவாறும் துளசியைப் பறிப்பதே முறை. துளசியைப் பறித்து மூன்று நாட்கள் வரை உபயோகப்படுத்தலாம். தனித்தனி இலையாகப் பறிக்காமல் நான்கு இதழ், ஆறு இதழ்களாகப் பறிக்கலாம்.
முன்னோர் திதிநாள், விரத நாள், தெய்வப் பிரதிஷ்டை தினம், மகாவிஷ்ணுவை வழிபடும் வேளை, தானம் கொடுக்கும் நேரங்களில் துளசியை உபயோகிப்பதால், பன்மடங்கு பலன் கிடைக்கும்.
சங்கு, துளசி, சாளக்கிராமம் மூன்றையும் ஒரே இடத்தில் பூஜை செய்பவர்களுக்கு, முக்காலத்தையும் உணரும் சக்தி ஏற்படும் என்பது சாஸ்திரக் கருத்து.
ஒரு துளசி தளத்தில் 33 கோடி தேவர்களும், பன்னிரு சூரியர்களும், அஷ்ட வசுக்களும், அஸ்வினி தேவர்களும் வசிக்கின்றனர். அதன் நுனிப்பகுதியில் பிரம்மனும், நடுவில் மகாவிஷ்ணுவும், லட்சுமி, சரஸ்வதி, காயத்ரீ, பார்வதி ஆகியோரும் வசிக்கின்றனர்.
துளசியை வளர்த்து வழிபடுபவதால் ஆயுள் பலம், புகழ், செல்வம், குழந்தைப்பேறு ஆகியன கிட்டும். துளசி காஷ்டம் என்ற மணிமாலையைக் கழுத்தில் அணிபவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் விலகும்; மற்ற பாபங்களும் அகன்று விடும்.
எந்த இடத்தில் துளசிச் செடி உள்ளதோ அங்கே அகால மரணம் ஏற்படாது. துளசியை பூஜை செய்து வந்ததன் பலனாகவே சீதாதேவி ராமபிரானைக் கணவராக அடைந்ததாக துளசி ராமாயணம் கூறுகிறது. சிலர், கருந்துளசியைப் பயன்படுத்தக் கூடாது என்பார்கள். இது தவறு. கருந்துளசிக்குக் ‘கிருஷ்ண துளசி’ என்ற பெயர் உண்டு. இதை, கிருஷ்ணருக்கு மட்டுமல்ல, எல்லா தெய்வங்களுக்குமே பயன்படுத்தலாம். விநாயகர், சக்திதேவி, சிவனுக்குப் போடாமல் தவிர்க்கலாம். பச்சையும், சிறிது வெண்மையும் கலந்ததே வெண் துளசி. இதை ராமபிரானுக்கும் அனுமனுக்கும் சூட்டலாம். இவை தவிர, செந்துளசி என்றும் வகையும் அரிதாகக் கிடைக்கிறது.
அமாவாசை அன்று யாக்ஞவல்கியரின் மனையாளான காத்தியாயினி சக்தியை துளசியால் வழிபட்டால், பிரிந்த தம்பதியர் மீண்டும் இணையும் பாக்கியம் கிடைக்கும்.
துளசி பூஜை செய்யும் முறை:
முறைப்படி துளசியைப் பறித்து, சுத்த நீர் தெளித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருமகள் அருளைப் பெற வேண்டும் என்று விரும்புவோர், வெள்ளிக்கிழமை காலையிலும், பௌர்ணமி அன்றும் இதைச் செய்யலாம்.
துளசி மாடம் இல்லாதவர்கள் 12 அல்லது 16 செங்கற்களால் துளசி பீடம் அமைத்து, அதன் முன்பு பெரிய அகலில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். அடுத்து பீடத்தின் நடுவில் துளசிச் செடியை வைத்து, சுற்றிலும் 12 என்ற எண்ணிக்கையில் சந்தன குங்குமப் பொட்டுகள் வைக்கவேண்டும். தொடர்ந்து அவை ஒவ்வொன்றின் மீதும் மலர்கள் வைத்து கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு, மதுசூதனா, த்ரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ஷ்ருஷிகேசா, பத்மநாபா, தாமோதரா என்று சொல்லி, மனதார வணங்கவும். அத்துடன், ‘ஸ்வாகதம்’ என்றும் 3 முறை கூறவும்.
இனி, வெற்றிலையின் மீது சந்தனப் பிள்ளையார் பிடித்து வையுங்கள். அவருக்கு குங்குமத் திலகமிட்டு செம்மலரால் அர்ச்சனை செய்து வணங்க வேண்டும்.
அடுத்து, தேங்காய்் பழம், தாம்பூலம், பால் பாயசம் நிவேதனத்துக்கு வைத்துக்கொண்டு பூஜையைத் துவங்குங்கள்.
‘ஓம் ஸ்ரீ விஷ்வக்சேனாய நம:’ - என்று மூன்று முறை சொல்லி விநாயகருக்கு துளசி தீர்த்தம் விடவேண்டும். தொடர்ந்து... ‘ஓம் கஜானனாய நம:’ என்று துவங்கி விநாயகர் திருநாமங்கள் சொல்லி துதித்து, பழம் நிவேதித்து ஆரத்தி செய்யவும்.
அடுத்ததாக, அன்றைய நாள் குறிப்புடன் சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும். பின்னர், கணவன்- மனைவி இருவருமே துளசி பீடத்துக்கு (துளசி மாடம் இருந்தால் அதன் முன்பு) முன்பாக அமர்ந்து, கீழ்க்காணும் நாமாவளிகளைக் கூறி குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
ஓம் ஸ்ரீம் பிருந்தா தேவ்யை நம:
ஓம் விஸ்வ பூஜிதாயை நம:
ஓம் விஷ்ணுப்ரியாயை நம:
ஓம் தேவ மூலிகாயை நம:
ஓம் கிருஷ்ண ப்ரியாயை நம:
ஓம் கிருஷ்ண லீலா விநோதின்யை நம:
ஓம் ஸௌபாக்ய நிலயாயை நம:
ஓம் விஷ்ணு கேசின்யை நம:
ஓம் புஷ்பசாராயை நம:
ஓம் நந்தவன நாயகாயை நம:
ஓம் விஸ்வ பாவணாயை நம:
ஓம் யாக பூஜிதாயை நம:
ஓம் தான ப்ரதாயின்யை நம:
ஓம் மகாலக்ஷ்மி வாசாயை நம:
ஓம் சகல மாட கலாலங்கார்யை நம:
ஓம் ஸ்ரீராமப்ரியாயை நம:
ஸ்ரீ துளசீ தேவ்யை நமோ நம:


அர்ச்சனை முடிந்ததும் தூப தீப நிவேதனம் செய்து, கையில் மலர் எடுத்து, மூன்றுமுறை தன்னையே சுற்றிக்கொண்டு கீழ்க்காணும் துதியை மூன்று முறை சொல்லுங்கள்.

ஓம் ப்ருந்தா ப்ருந்தாவனீ
விஸ்வ பூஜிதா விஸ்வபாவனீ
புஷ்பஸாரா நந்தனீச
      துளசீ க்ருஷ்ண ஜீவனீ
ஏகாந்தாமாஷ்டகம் சைவ ஸ்தோத்ரம்
 நாமார்த்த ஸம்யுதம் ய:படேத் தாம்ஸ
ஸம்பூஜ்ய அஸ்வ மேத பலம் லபேத்!
இப்போது மலர்களை அர்ப்பணித்துவிட்டு, மீண்டும் கைகளில் மலர் எடுத்துக்கொண்டு, மனதில் உங்களுடைய வேண்டுதல்களை நினைத்தபடி ஒரு நிமிடம் தியானித்து,
 
ப்ரசீத துளசி தேவி ப்ரசீத ஹரிவல்லபே
க்ஷீரோத மதநோத்பூதே துளசி த்வாம் நமாம்யஹம்
என்றபடி துளசிச்செடியின் மேல் மலர்களை போட்டு ஆரத்தி செய்ய வேண்டும்.
ஓம் ஸ்ரீத்ரிபுராயை வித்மஹே துளசி பத்ராய தீமஹி
தந்நோ துளசீ ப்ரசோதயாத்
யந்மூலே சர்வதீர்த்தாநீ யந்மத்யே சர்வதேவதா
யதக்ரே சர்வ வேதாஸ்ச துளசீம் தாம் நமாம்யஹம்
கற்பூர நீராஜனம் சமர்ப்பயாமி

என்று சொல்லி நமஸ்கரித்து, பிரசாதம் எடுத்துக்கொள்ளலாம்.
பெண்கள் அர்ச்சனை குங்குமத்தை திருமாங்கல்யத்திலும், நெற்றி வகிட்டிலும் இட்டுக்கொள்ளலாம். மேலும், குடும்பத்தோடு சேர்ந்து துளசி ஆராதனை துதிப் பாடலைப் பாடி வழிபடுவதால், மேலான பலன்கள் கைகூடும். சர்வ மங்கலங்களும் ஸித்திக்கும்.

Comments