கோட்டை பத்ரகாளி

தென் தமிழகத்தின் ஜீவநதியான தாமிரபரணி கரையோரம் உரோம மகரிஷியால் உருவாக்கப்பெற்ற நவகயிலாய ஆலயங்கள் அமைந்துள்ளன. அதற்கு முன்பே ஸ்ரீ வைகுண்டத்தில் உரோம மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டவள் ஸ்ரீ பத்ரகாளி அம்மன். விண்ணைத்தொடும் உயரத்தில் வளர்ந்துள்ள அடர்ந்த மருத மரத்தின் அடியில் லிங்க வடிவில் எழுந்தருளிய பத்ரகாளி அம்மனுக்கு உரோம மகரிஷி அற்புதமான மூலிகைகளால் ஆன கற்சிலையை அமைத்துள்ளார்.
சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக உரோம மகரிஷி, தாமிரபரணியின் கரையோரமாக நடந்து வந்தபோது, ஒரு மருத மரத்தின் அடியில் (தற்போது கோயில் அமைந்துள்ள இடத்தில்) தெய்வீக ஒளி தெரிவதைக் கண்டார். அருகில் வந்து பார்த்தபோது அங்கு பத்ரகாளி அம்மன் லிங்க வடிவில் எழுந்தருளி இருப்பதை அறிந்தார். அதைத்தொடர்ந்து அம்மருத மரத்தின் அருகிலேயே அம்மனுக்கு ஆலயத்தினை அமைத்து, அங்கு பத்ரகாளி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்தார் என்பது தல புராணம்.
கருவறையில் பத்ரகாளியம்மன் அழகுருவில், கண்களில் கருணை பொங்க, சாய்ந்த சொரூபியாய், கையில் சூலாயுதம் ஏந்தி காட்சியளிக்கிறாள். என்றாலும், மகரிஷிக்குக் காட்சி கொடுத்த மருத மரத்தின் அடியில் இன்றும் லிங்க உருவில் எழுந்தருளிய அன்னையையும் பக்தர்கள் வழிபடுகிறார்கள்.
பராக்கிரம பாண்டிய மன்னரின் ஆட்சிக்காலத்தில் கோட்டையில் வாழ்ந்த பிள்ளைமார் சமூகத்தினரிடம் இது ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் வாழ்வதற்கென தனியாக ஸ்ரீவைகுண்டத்தில் கோட்டை அமைத்து கொடுத்ததுடன், நில புலன்களையும் பரிசாகக் கொடுத்தார் மன்னர். கோட்டை பிள்ளைமார் சமூகத்தினரின் நிர்வாகத்தில் இருந்து வருவதால் இவள் ‘கோட்டை பத்ரகாளி’ அம்மன் என்று பெயர் பெற்றாள்.
இரண்டு கோபுரங்களுடன் அமைந்துள்ள ஆலயத்தின் உள்ளே ஸ்ரீ உலகம்மன் தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ளாள். இந்த உலகம்மன் ராமநாதபுரம் மன்னர் மூலமாக ஒட்டப்பிடாரம் கொண்டு வரப்பட்டதாகவும், பின்பு அங்கிருந்து இங்கு வந்ததாகவும் வரலாறு.
கல் தூண்களுடன் கட்டப்பட்டுள்ள கோயிலின் உள்ளே விநாயகப் பெருமானும், கால பைரவரும் எழுந்தருளியுள்ளனர். அதுவும் பத்ரகாளியம்மன் சன்னிதியிலும், உலகம்மன் சன்னிதியிலும் என இரண்டு கால பைரவர்கள் எழுந்தருளியுள்ளனர்.
உரோம மகரிஷி காலத்தில் தாமிரபரணி கரையோரத்தில் இருந்த ஆலயம், தற்போது நான்கு புறமும் பசுமை வனம் போர்த்திய வயல்வெளிகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. கால மாற்றத்தில் தாமிரபரணியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் சென்று விட்டது.
ஆலயத்தின் உள்ளே பத்ரகாளியம்மன், உலகம்மன் வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ளனர். ஒரே ஆலயத்தில் இரண்டு கருவறைகளுடன் கோயில் கொண்டுள்ள பத்ரகாளியம்மன், உலகம்மனுக்கு ஒரே நேரத்தில் தனித்தனியாக வழிபாடுகள் நடத்துவது இன்றும் வழக்கத்தில் உள்ளது. இதேபோன்று இரு அம்மன்களுக்கும் ஆலய வளாகத்திலுள்ள இரண்டு கிணறுகளில் இருந்து தீர்த்தம் எடுக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது.
இக்கோயிலுடன் இணைந்த நல்லாம்பிள்ளை பெற்ற அம்மன் கோயில் ஊருக்குள் அமைந்துள்ளது. இந்த மூன்று கோயில்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவை. மூன்று அம்மன்களுக்கும் ஆடி மாதம் கடைசி செவ்வாயில் திருவிழா நடக்கிறது. இது ‘காளி திருநாள்’ என்ற பெயரில் பக்தர்களால் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது பத்ரகாளி அம்மன், உலகம்மனுக்கான தீர்த்தம், நல்லாம்பிள்ளை பெற்ற அம்மன் கோயிலில் இருந்து மூன்று வெள்ளிக்குடத்தில் எடுத்து வரப்படுகிறது. வெள்ளிக்குடத்தினை சுமந்து வருபவர்கள் கையில் ஆயுதமாக பிரம்பு எடுத்து வருவார்கள்.
கோட்டையின் வாசல் பகுதிகளில் குடங்களுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் முடிந்த பின்பு வெண்பொங்கல், சர்க்கரைப்பொங்கல் படைத்து வழிபாடுகள் நடக்கின்றன. அதையடுத்து, ‘கணியான் கைவெட்டு பலி’யுடன் பூஜைகள் நிறைவடைகின்றன. பத்ரகாளி அம்மனுக்கு சைவப் படையலுடன் வழிபாடுகள் நடத்தியபோதும் ‘கணியான் கைவெட்டு பலி’ நடப்பது வேறு எங்கும் இல்லாத அதிசயமாகும். மூன்று நாட்கள் நடைபெறும் திருவிழாவின்போது பத்ரகாளி அம்மன் அருளால் திருமண வரம், குழந்தை வரம் பெற்றவர்கள் அம்மனுக்கு பொட்டுத்தாலி, பட்டு, திருமாங்கல்யம், செவ்வரளி மாலை, வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம் வைத்து தங்களின் வேண்டுதல்களை பூர்த்தி செய்கின்றனர். கோட்டை பத்ரகாளி அம்மனுக்கு முதல் மரியாதையுடன்கூடிய வழிபாடுகள் நடத்திய பின்பே ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், கைலாசநாதர் ஆலய திருவிழாக்கள் துவங்கப்படுகின்றன.
ஆலயத்தைச் சுற்றி நான்கு புறமும் வயல்வெளிகள் உள்ள நிலையில் அறுவடைக்குப் பின்பு விவசாயிகள் ஒருபகுதி நெல்மணிகளை பத்ரகாளி அம்மனுக்கு காணிக்கையாகச் செலுத்துவது இன்றும் வழக்கத்தில் உள்ளது.
தை மாத பிறப்பு, சித்திரை முதல் நாள், தீபாவளி, பொங்கல், நவராத்திரி விழா, ஆடி செவ்வாய்களில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
சித்திரை மாதம் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
ஆலயத் துளிகள்
* பக்தர்களுக்கு குங்குமம், சந்தனம், திருநீறு, தாழம்பூ பிரசாதமாக வழங்கப்படுகிறது.
* நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
* குழந்தை வரம் வேண்டும் பெண்கள் அங்கப்பிரதட்சனம் செய்து வழிபடுகின்றனர்.
* மருத மரத்தில் இருந்து சுயம்புவாக தோன்றியதால் ‘மருதவல்லி அம்மன்’ என்ற பெயரும் பத்ர காளியம்மனுக்கு உண்டு.
செல்லும் வழி
ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் கோயில் அமைந்துள்ளது.
தரிசன நேரம்: செவ்வாய்கிழமை காலை 7.30 மணி முதல் 12 வரை. மாலை 5 மணி முதல் 7.30 வரை. இதர நாட்களில் காலை 7.30 மணி முதல் 9.30 வரை. மாலை 5 மணி முதல் 6.30 வரை.
தொடர்புக்கு: 9943203700

Comments

  1. கோட்டை பிள்ளைமார் என்ற சாதி வரலாறுகளில் குறிக்கப்பட்டாலும் தமிழ்நாடு தேர்வானையம் வெளியிட்ட சாதிப் பட்டியலில் இவர்கள் பெயரில்லை.

    இப்போதும் இதைக் கோட்டைப் பிள்ளைமார்தான் பராமறிக்கிறார்களா?

    ReplyDelete

Post a Comment