தெகு முருகன்

செவ்வேள், சேயோன், குமரன், கந்தன், கடம்பன் என்று நாமம் பல கொண்ட தண்டமிழ்க் கடவுளான முருகன், மகாராஷ்டிர மாநிலத்திலும் கோயில் கொண்டிருக்கிறான். இங்கும் வழக்கம் போல, மலைமேல்தான் ஆலயம் - ‘சேயோன் மேய மைவரை உலகம்’ என்ற தொல்காப்பிய வரியை நினைவூட்கிற மாதிரி.
புனே நகரத்திலிருந்து மும்பை செல்லும் வழியில் உள்ளது தெகு ரோடு. மிலிட்டரி குடியிருப்புகள் நிறைந்த பகுதி இது. இந்தப் புண்ணிய பூமியில்தான் துகாராம் மகராஜ் 400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து, நெஞ்சை நெகிழ வைக்கும் பக்திப் பாடல்களைப் (அபங்)பாடி, சரீரத்துடன் வைகுண்டத்தைச் சென்றடைந்தார். அன்றிலிருந்து தெகு புனிதத் தலமாகப் பூஜிக்கப்படுகிறது. இங்குதான் மலைமேல் தமிழ் கடவுள் திருக்குமரனுக்கு அற்புதமான ஆலயம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
1974ல் ரத்னகிரி சுவாமிகள் அளித்த ஸ்ரீவள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் விக்ரகம் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இக்கோயில் படிப்படியாக வளர்ச்சி பெற்று இன்று ஸ்ரீவிநாயகப் பெருமான், ஸ்ரீவெங்கடேசப் பெருமாள், ஸ்ரீ பத்மாவதி தாயார், ஸ்ரீ சாயிபாபா, சிவகணங்களுடன் அருள்பாலிக்கும் பார்வதி சமேத சிவபெருமான் என பல்வேறு சன்னிதிகள் பாங்குடன் அமைக்கப்பட்டு, 20.2.2011 அன்று மகாகும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
தேவர்களின் சேனாதிபதி, செவ்வாய் கிரகத்தின் அதிபதி, வீரம் நிறைந்த பார்வதி பாலன், சிவனாரின் நெற்றிக்கண்ணிலிருந்து உதித்த சிவமைந்தன், வெற்றிகள் குவித்திடும் வேலவன், அழகிய மயில் மீதமர்ந்த ஆறுமுகன், தனது மனைவியர் வள்ளி, தேவசேனா சகித சுப்பிரமணியராக அழகுறக் காட்சி தருகிறான்.
பிரதி மாதம் கிருத்திகைதோறும் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. ஆடிக்கிருத்திகை, வைகாசி விசாகம், கந்தசஷ்டி, தை கிருத்திகை, பங்குனி உத்திரம் போன்ற விழாக்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனருள் பெறுகிறார்கள். தற்போது தங்கத்தேர் நிர்மாணிக்கும் திருப்பணி நடைபெற்று வருகிறது.
தொடர்புக்கு: 093 71133091 /099 22051669

Comments