வெற்றி தருவார் விஜய கணபதி

சென்னை நங்கநல்லூருக்கு அருகில் உள்ள உள்ளகரத்தில் அமைந்து உள்ளது ஸ்ரீவிஜய கணபதி ஆலயம். காஞ்சி மகா பெரியவாளின் அறிவுரைப்படி, சிறு குடிசையில் இருந்த கிழக்குப் பார்த்த விநாயகர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு தெற்குப் பார்த்த ஸ்ரீவிஜய கணபதியாக அருள்பாலிக்கத் துவங்கினார் என்கிறார்கள், பக்தர்கள்.
94-ம் வருடம் சாந்தானந்த சுவாமிகள் சொன்னதற்கு இணங்க, அன்று முதல் இன்றளவும் தினமும் கணபதி ஹோமம் செய்யப்படுகிறது, இங்கே! ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீதுர்கை, ஸ்ரீஐயப்ப ஸ்வாமி, திருமால், ஸ்ரீஅனுமன் என அனைத்து தெய்வங்களின் பெயர்களுக்கு முன்னதாக 'விஜய’ எனும் திருநாமம் சூட்டியுள்ளனர்.
ஸ்ரீகணபதிக்கு சதுர்த்தி, ஸ்ரீகந்தக் கடவுளுக்கு கிருத்திகை, ஸ்ரீஐயப்ப ஸ்வாமிக்கு உத்திரம், ஸ்ரீவிஜயராகவ ஸ்வாமிக்கு புனர்வசு, ஸ்ரீதுர்காதேவிக்கு பௌர்ணமி, ஸ்ரீஅனுமனுக்கு மூலம் ஆகிய நட்சத்திர நாளில், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
ஸ்ரீராம நவமி முடிந்த முதல் ஞாயிற்றுக் கிழமையில் ஸ்ரீராதா கல்யாணமும் சஷ்டி முடிந்த முதல் ஞாயிறு, ஸ்ரீவள்ளி கல்யாணமும் சிறப்புற கொண்டாடப்பட்டு வருகிறது என்கிறார் கோயில் மேலாளர் சுப்ரமணியன்.
பெருமாள் சந்நிதி கொண்டிருக்கிற இந்த ஆலயத்தில், வருடந்தோறும் வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீவிஜய கணபதி எனும் திருநாமம் கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீவிநாயகப் பெருமானை, ஸ்ரீவிசா கணபதி என்றே அழைக்கின்றனர், பக்தர்கள். கோயில் அமைந்து உள்ள தெருவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் யாரேனும் ஒருவர், வெளிநாட்டில் வேலை செய்பவராக இருப்பார். வெளிநாட்டில் வேலை கிடைக்கும் யோகத்தை வழங்கக் கூடியவர் என்பதால் பிள்ளையாருக்கு, விசா கணபதி எனும் பெயர் அமைந்ததாகச் சொல்வர்.
மாதத்தின் 4-ம் ஞாயிற்றுக்கிழமையில் ஏகாதச ருத்ர ஜபம் நடைபெறுகிறது. அதேபோல். ஸ்ரீகுமார கணபதி பூஜையும் கொண்டாடப்படுகிறது.
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், ரத்தினகிரி ஸ்ரீ பால முருகனடிமை, மகாதேவ மலை மகானந்த சித்தர், கி.வா.ஜ ஆகியோர், ஸ்ரீவிஜய கணபதியின் பேரருளைச் சிலாகித்துள்ளனர்.
விஜய கணபதியை கண்ணாரத் தரிசியுங்கள். எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி என நிம்மதியாக வாழ்வீர்கள்!

Comments