ஆண்டவன் கட்டளை!


மாமன்னன் ராஜராஜன், கங்கை கொண்ட சோழன் ஆகியோர் வழியில் வந்தவன் அநபாய சோழன்.
நன்செய்யும் புன்செய்யும் சிறந்து இருந்த தஞ்சையில் அவனது ஆட்சியின்போது பஞ்சம் குடிகொண்டது.
மிகுந்த கவலையடைந்த மன்னன், தனது பாட்டன் கட்டிய பெருவுடையார் கோயிலுக்குச் சென்று சன்னதி முன் நின்று, கண்களை மூடி தனக்கு நல்வழிகாட்ட வேண்டினான்.
"கூடலுக்குப் போ!' காதருகில் ஒரு குரல் ஒலிக்க, விழி திறந்தவன், "எங்கிருந்து அந்தக் குரல் வந்தது?' என யோசித்தான். அது ஆண்டவன் கட்டளை என்பதை உணர்ந்தான்.
அச்சமயம் கூடல் மதுரையில் அவன் ஆட்சியின் கீழ் சிற்றரசனாக பாண்டியன் அரசாண்டு கொண்டிருந்தான். அவனிடம் சென்று ஆலோசனை செய்தான்.
பாண்டிய மன்னன், தன் ஆஸ்தான ஜோதிடரை வரவழைத்தான். அவரோ பூஜை செய்து சொக்கனை மனதில் நிறுத்தினார்.
மீனாட்சியிடம், "அம்மா வாயேன்! அழும் குழந்தை கண்ணீரைத் துடையேன்!' என வேண்டினார். சோழ நாட்டின் வறுமை விலகி, வளம் பெருக வழிகேட்டார்.
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிப்பட்ட பெருமான் மீனாட்சியுடன் எழுந்தருள மனம் கொண்டார்.
"நடந்தது முடிந்தது. இனி நடப்பது நல்லதாகட்டும். பெருவுடையார்க்கு ஈசான்ய பாகத்தில் ஒரு கோயில் கட்டுக! அங்கு என் பரிவாரங்களுடன் எழுந்தருளி, அனைவரின் துயர் துடைத்து அருள்செய்வோம்!' என்று, ஈசனின் குரல் அசரீரியாய் ஒலித்தது.
அதன்படி கோயில் கட்டப்பட்டது. ஆனி மாதம் உத்திர நட்சத்திர நாள் ஒன்றில் விமர்சையாக குடமுழுக்கும் நடக்க, சொக்கநாதர் தன் தேவியுடன் அங்கு எழுந்தருளினார்.
தஞ்சையில் பஞ்சம் தீர்ந்தது. மக்களும் மன்னரும் மகிழ்ந்தனர். அதன்பிறகு மதுரையின் மறுபெயரான "கூடல்' என்பதும் சேர்ந்து கோயில் அமைந்த பகுதி கூடலூர் என்றானது. தஞ்சாவூர் பெரிய கோயிலின் ஈசான்ய திக்கில் அமைந்துள்ளது கூடலூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில்.
சித்திரை தமிழ் வருடப் பிறப்பும், சித்ரா பௌர்ணமியும் சிறப்பு விழாக்கள். ஆனி உத்திர தினம், சொக்கநாதர் தன் குடும்பத்தாருடன் தஞ்சையைக் காப்பதற்காக இங்கு வந்து குடியேறிய நாள் என்பதால், அன்று காலை 7 மணி முதல் 8 மணிக்குள் அவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.
தஞ்சை மாவட்டத்தில், ஆனி திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறும் பஞ்ச ஆதித்ய தலங்களுள் இதுவும் ஒன்று. வைகாசி மாதமும் மாசி மாதமும் மாலைவேளையில் சூரிய ஒளி இறைவன்மீது படர்வதைக் காணலாம்.
பார்வைக் கோளாறு ஜாதகத்தில் சூரிய தோஷம் உடையோருக்கு சிறந்த பரிகாரதலமிது. பஞ்ச ஆதித்ய தலங்களையும் ஒரே நாளில், குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபட்டால், வாழ்வில் எல்லா நலன்களும் கிட்டும் என்பது நம்பிக்கை.
இங்குள்ள பைரவருக்கு பக்தர்கள் அதிகம். ஒவ்வொரு அஷ்டமியிலும் சூரிய அஸ்தமனம் முடிந்ததும், அவருக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்வதால் நோய் நொடிகள், பேய், பிசாசு, பில்லி சூனிய பாதிப்புகள் அகல்கிறதாம்!

எங்கே இருக்கு: தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலும், பள்ளி அக்ரஹாரம் என்னும் பகுதியில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவிலும் கோயில் அமைந்துள்ளது. களாச்சேரி செல்லும் மினி பேருந்தில் சென்று கூடலூர் அரசமரம் ஆற்றுப் பாலத்தில் இறங்கி அரை கிலோமீட்டர் நடந்து சென்று கோயிலை அடையலாம்.

தரிசன நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை; மாலை 6 முதல் இரவு 8 மணி வரை.

Comments