இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்!


முற்காலத்தில் கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது வாயரைக்கால் நாடு. பல்லடம், பொள்ளாச்சி ஆகிய பகுதிகள் அடங்கிய இந்நாட்டில் அமைந்த ஊர் சூலூர்.
சூரல் என்பது நாணல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரம். நொய்யல் நதியில் தென்கரையில் இத்தாவம் மிகுதியாகக் காணப்பட்டதால் இப்பகுதி சூரலூர் எனப்பட்டது. அதுவே மருகி பின்னர் சூலூர் என்று அழைக்கப்படுகிறது.
9ம் நூற்றாண்டில் மன்னன் கரிகாற்சோழன், இங்கிருந்த காட்டை அழித்து ஊராக்கும் போது சுயம்பு மூர்த்தம் ஒன்றைக் கண்டார். அதை சிறிய இடத்தில் பிரதிஷ்டை செய்து, வைத்யலிங்கமுடையார் என்ற திருநாமத்தை சூட்டி கும்பாபிஷேகம் செய்தார்.
கொங்கு நாட்டில், முட்டத்திலிருந்து கரூர் வரை நொய்யல் நதியோரத்தில் இதுபோன்று 36 சிவாலயங்களை கரிகாற்சோழன் திருப்பணி செய்ததாக வரலாறு மூலம் அறியப்படுகிறது. தமிழ்நாடு அரசு 1950ம் ஆண்டு வெளியிட்ட சோழன் பூர்வ பட்டயம் எனும் நூல் இச்செய்தியை உறுதி செய்கிறது.
1168-1196 ஆண்டுகளில் இப்பகுதியை அரசாண்ட மூன்றாம் வீரசோழன் இக்கோயிலில் பூஜை காரியங்கள் தங்கு தடையின்றறி நடைபெற வரிக்கொடை அளித்த செய்தியை செலக்கரச்சல் மாரியம்மன் கோயிலில் உள்ள கல்வெட்டில் காணலாம்.
நொய்யல் நதியின் தெற்காக, இருபுறமும், சூலூர் குளத்தின் நீரால் சூழப்பெற்று எழிலார்ந்த தோற்றத்தில் காணப்படுகிறது கோயில். கொங்கு நாட்டிலுள்ள ராகு-கேது பரிகார தலங்களுள் ஒன்றாகக் கருதப்படும். இது தலம் மூர்த்தி, தீர்த்தம் ஆகிய முப்பெருமைகளை கொண்டது.
மூலவர் சுயம்பு வைத்யநாத சுவாமி, மிகப் பழமைவாய்ந்த மூர்த்தம். முதலில் கல்ஹார கோயிலாக இருந்து, நாளடைவில் பிற கோயில்களைப் போலவே இறைவியையும் பரிவார மூர்த்திகளையும் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.
கிழக்கு தெற்கு என இரு நுழைவாயில்கள். கிழக்கு வாயில் முன்பு தீபஸ்தம்பத்தை அடுத்துள்ள அரசமரத்தடியில் விநாயகப் பெருமான் ராகு-கேதுவுடன் அருளாசி வழங்குகின்றார். வள்ளி-தெய்வானை சமேத முருகன். வைத்யநாத சுவாமி, தையல் நாயகி ஆகியோர் அடுத்தடுத்துள்ள பிரதான சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
உட்பிராகாரத்தில் மகாகணபதி, அரசமரத்தடி விநாயகர் மற்றும் வன்னிமர விநாயகர் என மூன்று இடங்களில் ராகு-கேதுவுடன் ஆனைமுகன் அருள்பாலிப்பது சிறப்பு. மேலும் ஐயப்பன், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகாலட்சுமி, மகா சரஸ்வதி, துர்க்கை, நவகிரகம், சந்தான பைரவர், சனீஸ்வரர், சந்திரன், சூரியன் ஆகியோர் பரிவார தெய்வங்களாக உள்ளனர்.
இங்குள்ள நந்திபகவான் கல்யாண குணநந்திகேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். திருமணம் தடைபட்டோர் தங்கள் கைகளாலேயே இவருக்கு நல்லெண்ணெய் காப்பிட்டு, மாலை சாற்றி பூஜைகள் மேற்கொள்ள வேண்டும். பின் அந்த மாலையை அணிந்து கொண்டு வைத்யநாத ஸ்வாமிக்கு நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டால் திருமணத் தடை விலகி, விரைவில் திருமணம் நடந்தேறுகிறதாம்.
இத்தல இறைவன் பல அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார். ஒருசமயம் தன் பக்தை ஒருவரின் கனவில் தோன்றிய ஈசன், "உங்கள் தோட்டத்தில் உள்ள தென்னைமரத்தில் இரண்டு கொம்புகளுடன் கூடிய தேங்காய் ஒன்றுள்ளது. அதைப் பறித்து என் பூஜைக்குக் கொண்டுவந்து கொடு!' என்றார்.
விடிந்தவுடன் பணியாளை அழைத்து குறிப்பிட்ட தென்னைமரத்தில் உள்ள தேங்காயைப் பறித்து வரும்படி கூறினார், அப்பெண்மணி.
என்ன ஆச்சர்யம்! ஈசன் சொல்லியபடியே அம்மரத்தில் இரு கொம்புகளுடன் முற்றிய தேங்காய் இருந்தது. பொதுவாகத் தென்னை மரத்தில் காய் முற்றிவிட்டால் தானாகவே விழுந்துவிடும். அவ்வாறில்லாமல் அக்காய் மரத்திலேயே இருந்ததும் வியப்புக்குரியது. பின்னர் அதைப் பறித்துக் கொண்டு வந்து பூஜைக்குக் கொடுத்துவிடும், அந்த அற்புத நிகழ்வை அனைவரிடமும் கூறி மனம் நெகிழ்ந்து போனாராம்.
இத்தலத்திலுள்ள அனைத்து தெய்வங்களுக்கும் உரிய மாத, வருட வைபவங்கள் நடந்தாலும் சிறப்பு விழாக்களாகக் கொண்டாடப்படுவது ஆனித்திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம், ஐப்பசி அன்னாபிஷேகம் மற்றும் ஆடி மாதம் முதல் ஞாயிறன்று நடைபெறும் ஏகாதச ருத்ராபிஷேகமாகும்.
வரும் 20.07.2014 அன்று அவ்வாலயத்தில் நடைபெறும் ருத்ராபிஷேகத்தில் நீங்களும் பங்கு பெற்று வைத்யநாத சுவாமியின் திருவருளைப் பெறலாமே!

எங்கே இருக்கு: கோவை மாவட்டம், சூலூர் பேருந்து நிலையத்திலிருந்து முத்துகவுண்டன்புதூர் செல்லும் வழியில், சுமார் அரை கி.மீ. தொலைவில் குளக்கரையில் உள்ளது வைத்யநாதசுவாமி ஆலயம்.

தரிசன நேரம்: காலை 7 முதல் 11.30 வரை; மாலை 5 முதல் இரவு 8 வரை.

தொலைபேசி: 044-2300360

Comments