ஜய ஜய ஸ்ரீ சுதர்சன...

பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமனுக்கு சங்கு, சக்கரம், கதை, வில், கத்தி என்று ஐந்து ஆயுதங்கள் உண்டு. அவை முறையே பாஞ்சஜன்யம், சுதர்சனம், கௌமோதகீ, சார்ங்கம், நந்தகம் என்று பெயர் கொண்டவை. இந்த ஐந்திலும் விசேஷமானது சுதர்சனம் என்கிற சக்கரம். சக்கரத்தாழ்வார் என்று போற்றப்படுபவர் இவர்தான்.
உலகில் உள்ள ஆயுதங்களுக்கெல்லாம் அரசன் என்ற பொருளில், ‘ஹேதிராஜன்’ என்றும் போற்றப்படுபவர் இவர். ‘சக்ரரூபி விஷ்ணு’ என்றே இவரைக் கொண்டாடுவார்கள். ‘ஸஹஸ்ரார ஹூம்பட்’ என்னும் ஆறெழுத்து மந்திரத்தால் ஆராதிக்கப்படுபவர் இவர். அறுகோணச் சக்கரத்தில் இருந்து அருளாட்சி புரிபவர்.
மந்திரங்களில் ‘ராஜமந்திரங்கள்’ என்று சிலவற்றை வகைப்படுத்துகிறது மந்திர சாஸ்திரம். அத்தகைய ராஜ மந்திரங்களில் ஸ்ரீசுதர்சனமும் ஒன்று. கடுமையான நியமங்களோடு உபாசிக்க வேண்டியது இந்த மந்திரம். ஜபிப்பவரின் ஆற்றலை பன்மடங்கு அதிகரிப்பதும், அவர் செல்லுமிடமெங்கிலும் துன்பங்கள் அகல்வதுமான அற்புதத்தை நிகழ்த்த வல்லது, சுதர்சன மந்திரம்.
இதன் சிறப்பைச் சொல்லும்போது, ‘எம்பெருமான் கருதுமிடம் பொருதும் ஆழி’ என்பார்கள் பெரியோர். ‘ஆதிமூலமே’ என்றழைத்த யானை கஜேந்திரனைக் காக்க எம்பெருமான் கரத்திலிருந்து சீறிக் கிளம்பி வந்தவர் இந்தச் சக்கரத்தாழ்வார்தான். சினங்கொண்ட துர்வாசரால் ஏவப்பூட்ட பூதத்தை வீழ்த்தி, மன்னன் அம்பரீஷன் நினைக்கும் முன்பே, துர்வாசரையும் துரத்திச் சென்றவர் இந்த சுதர்சனர்.
வரைமுறை கடந்து கிருஷ்ணனை ஏசிய சிசுபாலனின் சிரத்தைக் கொய்தவரும் இவர்தான். அபிமன்யுவின் மரணத்துக்குக் காரணமான ஜயத் ரதனை வீழ்த்தும் பொருட்டு, கிருஷ்ணனால் ஏவப்பட்ட இவர்தான் சூரியனை மறைத்து மாய இருளை ஏற்படுத்தினார். அதைக் கண்டு வெளிப்பட்ட ஜயத்ரதனை அர்ஜுனன் வீழ்த்தவும், இவர் விலகி சூரிய ஒளி படரவும் நேரம் சரியாயிருந்தது.
இப்படி சக்கரத்தாழ்வாரின் சிறப்புகள் அளப்பரியவை. சிறைவாசம், பயம், கிரக தோஷங்கள், கடன் பிரச்னைகள், வழக்குகள்...உள்ளிட்ட சிக்கல்களில் இருந்து அடியார்களைக் காப்பவர் ஸ்ரீசுதர்சனர். சுதர்சனரை வழிபடச் சித்திரை நட்சத்திர தினங்கள் சிறப்பானவை. சித்திரை அவருக்குரிய நட்சத்திரம்.
ஒரு மண்டலம் என சங்கல்பம் செய்து கொண்டு, தினமும் நெய் தீபம் ஏற்றி, 45 முறை சக்கரத்தாழ்வார் சன்னிதியை வலம் வந்தால், நடக்காது என்று நினைத்த காரியமும் கைகூடும் என்பது பலரின் அனுபவம். செவ்வாய்க்கிழமைகளில் இவரை வலம் வந்து வழிபட்டால், கடன் தொல்லைகள் அகலும்.
தம் பதினாறு கரங்களிலும் பதினாறு ஆயுதங்களைக் கொண்டவராக விளங்குபவர் ஸ்ரீசுதர்சனர். சக்கரம், மழு, ஈட்டி, தண்டம், அங்குசம், அக்னி, கத்தி, வேல், சங்கு, வில், பாசம், கலப்பை, வஜ்ரம், கதை, உலக்கை, சூலம் ஆகியவற்றைக் கொண்டவராக இவர் காட்சி தருவார். இந்தக் கோல மூர்த்தியை, ‘ஷோடசாயுத ஸ்தோத்திரம்’ சொல்லி வழிபடுவது மிகச்சிறந்த பலனைத் தரும்.
சுவாமி தேசிகனின் சுதர்சனாஷ்டகமும், ஹோட சாயுத ஸ்தோத்திரமும் சொல்லி வந்தால் எளிதில் ஸ்ரீசுதர்சனரின் அருளைப் பெறலாம். இதைப் போன்றே, ஸ்ரீகூர நாராயண ஜீயர் அருளிய சுதர்சன சதகமும் விசேஷமானது.
சுதர்சனருக்கு ஸ்ரீரங்கம், திருமோகூர், மதுரை கூடலழகர் கோயில், சென்னை பார்க் டவுனில் உள்ள பைராகி மடம் திருவேங்கடமுடையான் திருக்கோயில்... உள்ளிட்ட பல்வேறு தலங்களில் தனிச் சன்னிதிகள் அமைந்துள்ளன. என்றாலும், சுதர்சனரே மூலவராக விளங்கும் தலம், கும்பகோணத்தில் உள்ள சக்ரபாணி திருக்கோயில். இவரை வழிபட்டே, தாம் இழந்த ஒளியை மீண்டும் பெற்றான் பகலவனான சூரியன். அவனால் எழுப்பப்பட்ட ஆலயம் சக்ரபாணி திருக்கோயில் என்றும், அதனாலேயே குடந்தைக்கு ‘பாஸ்கர கே்ஷத்திரம்’ என்று பெயர் வந்ததாகவும் தலபுராணம்.
கடலூர் அருகே உள்ள அரிசி பெரியாங்குப்பம் என்னுமிடத்தில் சிறு குன்றின்மேல் அமைந்துள்ளது சுயம்பு சக்கரத்தாழ்வார் திருக்கோயில். கடலில் நீராடி வந்த பெருமாள் இக்குன்றில் அமர்ந்ததாகவும், அப்போது தம் சக்கரத்தை இங்கே வைத்ததாகவும், அதையடுத்து, இந்த ஆலயம் எழும்பியதாகவும் சொல்கிறார்கள். கடலூரில் இருந்து திருவஹீந்திரபுரம் செல்லும் வழியில் உள்ள பாதிரிக்குப்பத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த அரிசி பெரியாங்குப்பம். சுமார் 60 படிகள் ஏறி ஸ்ரீசுதர்சனரைத் தரிசிக்க வேண்டும்.
இக்கோயிலில் சித்திரை வருடப் பிறப்பின்போது லட்சதீபம் ஏற்றி வழிபாடு நடக்கிறது; ஆனி மாதத்தில் சுதர்சன ஜயந்தி மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. சுதர்சன வழிபாடு, எல்லாச் சிக்கல்களுக்குமான ஒரே தீர்வு! பிறரால் உண்டாகும் துன்பங்கள், தடைகள் போன்றவை விலக சனிக்கிழமைகளில் இவரை வழிபடுவது சிறப்பானது. லட்சுமி கடாட்சமும், வளமும் பெருக வெள்ளிக்கிழமை வழிபாடு சிலாக்கியமானது.
சுதர்சன ஜபமோ, ஹோமமோ செய்ய முடியாதவர்கள், ஸ்ரீ சுதர்சனரின் காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வரலாம். அதுவும் முடியாதவர்கள் ‘ஜயஜய ஸ்ரீசுதர்சன’ என்பதையே மஹாமந்திரமாகச் சொன்னபடி அருகிலுள்ள ஆலயத்தில் சுதர்சனர் சன்னிதியை வலம் வரலாம். அருகில் ஆலயம் இல்லையென்றால், தினமும் வீட்டிலேயே காலையில் தூய்மைப்படுத்திக் கொண்டு குறைந்தது 45 முறை சொல்லி வாருங்கள். உங்களை வளைக்கும் வலைகள் அறுபடும்; வழிகள் புரிபடும். இது பலரின் அனுபவம்!

 

Comments