போனாலு திருவிழா

‘போனம்’ என்னும் சொல், போஜனம் என்பதிலிருந்து தெலுங்குக்குச் சென்றதாகும். இது சாப்பாட்டைக் குறிக்கும். ‘பொனலு’ என்றும் ‘போனாலு’ என்றும் அழைக்கப்படும் இந்தத் திருவிழா, ஆந்திராவில் தெலுங்கானா பகுதியில், குறிப்பாக ஹைதராபாத், செகந்திராபாத் பகுதியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் கொண்டாடப்படும் திருவிழாவாகும்.
இத்திருவிழா சமீப காலமாகத்தான் நடைமுறையில் உள்ளது. இருந்தாலும் எல்லாத் தரப்பு மக்களும் கொண்டாடும் திருவிழாவாகவே இது உள்ளது. கி.பி. 1813-ல் ஹைதராபாத், செகந்திராபாத் நகரங்களில் உள்ள மிலிட்டரி காலனியில் காலராவும், அம்மை நோயும் தோன்றி லட்சக்கணக்கில் மக்கள் மாண்டனர். அப்போது அங்கு முகாமிட்டிருந்த ஒரு படைப்பிரிவு, உஜ்ஜயினிக்குப் பாதுகாப்புக்காகச் சென்றது.
அவர்கள் உஜ்ஜயினி மகாகாளியிடம், ‘எங்கள் மக்களை இக்கொடிய நோயிலிருந்து காப்பாற்றினால் உனக்குக் கோயில் கட்டி வழிபடுகிறோம்’ என்று வேண்டினர். மகாகாளியின் அருளால் நோய்கள் நீங்கி மக்கள் காப்பாற்றப்பட்டனர். அதற்கு நன்றி கூறும் வகையில் உஜ்ஜயினியிலிருந்து ஒரு காளி சிலையைக் கொண்டுவந்து இங்குப் பிரதிஷ்டை செய்து, கோயில் கட்டி வழிபட ஆரம்பித்தார்கள். காளிக்கு, புதுப்பானையில் புது அரிசியிட்டு, பால், வெல்லம் கலந்து பொங்கல் நைவேத்யம் படைத்தார்கள். இப்படி ஏற்பட்டதுதான் இந்த ‘போனாலு’ திருவிழா.
இத்திருவிழா ஆடி மாதம் முதல் ஞாயிறு அன்று ஆரம்பமாகிறது. கோல்கொண்டா மகாகாளி கோயிலில் ஆரம்பித்து, இரண்டாம் ஞாயிறு பால் கம்பட் எல்லம்மாள் கோயிலிலும், லால்தர் வாஜாவில் உள்ள மாதேஸ்வரி கோயிலில் மூன்றாம் ஞாயிறும், நிறைவாக அப்பண்ணா மாதண்ணா கோயிலில் நான்காம் ஞாயிறு அன்றும் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் பல லட்சம் மக்கள் கலந்து கொள்கிறார்கள்.
அன்று பெண்கள் புத்தாடை புனைந்து, நகைகள் அணிந்து, அலங்காரமாகப் பொங்கல் பானையைத் தலையில் சுமந்து வரிசையாகக் கோயிலுக்குச் செல்வர். அப்போது மகாகாளியின் சகோதரர் எனக் கருதப்படும் போத்திராஜ் அங்கு வருவார். இவர் காவி உடை உடுத்தி, கால்களில் சலங்கை பூட்டி, நெற்றியில் செந்தூரமும் உடலில் மஞ்சளும் பூசியபடி பறை வாத்தியங்களுக்கு ஏற்றபடி நடனமாடுவார். இவர்தான் இத்திருவிழாவைத் தொடங்கி வைப்பார். பின்பு, வரிசையில் நிற்கும் பெண்களை காளியின் சன்னிதிக்கு அழைத்துச் செல்வார். இதற்கு அடுத்த நாளாக ‘ரங்கம்’ என்னும் குறி சொல்லுதல் நிகழ்ச்சி நடைபெறும்.
ஒரு பெண்மணி மயங்கிய நிலையில் மண் குடத்தின் மீது ஏறி நிற்கிறார். காளி அவள் உடலில் புகுந்து குறி சொல்வதாக மக்கள் நம்புகின்றனர். பொதுவாக, வரும் வருட விளைச்சல், திருமணம், மகப்பேறு போன்ற பக்தர்களின் கேள்விகளுக்கு உரிய பதில் கிடைக்கும். இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் பூசாரி, ஒரு அலங்கரித்த பித்தளைக் குடத்தில் வேப்பிலை தோரணம் கட்டி, மந்திரம் ஜபித்த நீர் நிரப்பி அதை ஊர்வலமாக எடுத்துச் சென்று அந்த நீரை நதியில் கலப்பார்.
இத்துடன் இத்திருவிழா நிறைவு பெறும். நம் ஊர்களில் 18-ம் பெருக்கில் வண்ண காகிதங்களால் அலங்கரித்த சிறிய தேர்கள் இழுக்கப்படுவதுபோல அங்கும் சிறிய அலங்கரித்த தேர்கள் இழுக்கப்படுவது இன்னொரு சிறப்பு.

 

Comments