அமரநாதர்

கங்கைச் சடையன் சிவபெருமானுக்கு தென்னாட்டில் மட்டுமின்றி, வடநாட்டிலும் பல கோயில்கள் உள்ளன. அதில் உன்னதமான ஒரு சிவஸ்தலம் தெற்கு காஷ்மீர் பகுதியில் ஸ்ரீநகரில் உள்ள அமர்நாத் குகைக் கோயில்! நெடிதுயர்ந்த இமயமலைத் தொடரில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3888 மீட்டர் (12756 அடி) உயரத்தில் உள்ளது இந்தக் குகைக் கோயில்.
முழுவதும் பனி மூடி வெள்ளி ஜரிகை ஆடையைப் போர்த்தியது போன்ற விவரிக்க முடியாத அழகுடன் காட்சி அளிக்கிறது அடர்ந்த மலைத் தொடர். நாங்கள் சென்றபோது தாங்கக் கூடிய அளவு குளிர்தான். கார்கில், லடாக் பகுதிகள் அருகில் இருப்பதால் அன்னியர் ஊடுருவும் அபாயம் எந்த நேரமும் இருக்கிறது. அன்னியர்களால் யாத்ரீகர்களுக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்கு மத்திய ரிசர்வ் போலீஸ், எல்லைப் பாதுகாப்புப் படையினர், மாநிலப் போலீஸ் என, காவல்துறைப் பட்டாளமே பொதுமக்களுக்கு அரணாக நிற்கின்றனர்.
ஸ்ரீ நகரிலிருந்து பெஹல்காம் பாதையில் 46 கிலோ மீட்டர் பயணம்! அல்லது பால்டால் பாதையில் சென்றால் 14 கிலோமீட்டர். பெஹல்காம் என்பது ஸ்ரீநகரிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர்.
இந்தப் பனிலிங்க வடிவத்துக்கு என்ன விசேஷம்! ஹிமவான் மகளான உமாமகேஸ்வரிக்கு ஒரு பெரிய சந்தேகம்! உலகுக்கே தந்தையான தாங்கள், கழுத்தில் பல கபாலங்கள் கோர்க்கப்பட்ட மாலையை ஏன் தரித்திருக்கிறீர்கள்?" என்று.
தாக்ஷாயணி ஒவ்வொரு முறையும் நீ மறைந்து மறுபடி அவதரிக்கும்போது ஒரு கபாலத்தை மாலையில் சேர்த்துக் கொள்வேன்" என்றார் பொன்னார் மேனியன்! அப்படியா! நான் அடிக்கடி மறைந்து விடுகிறேன், தாங்கள் மட்டும் நிலைத்து இருப்பது எப்படி?" என்றாள் பாலாம்பிகை. இது சிருஷ்டி ரகசியம்! சமயம் வரும்போது உனக்கு எடுத்துரைப்பேன்" என்றார் நமசிவாயமூர்த்தி!
காலங்கள் உருண்டோடின. மதி அணி சூலினியான தேவிக்கு சிருஷ்டி ரகசியத்தை உபதேசிக்க எண்ணினார் ஈசன்!
ஈசன், பார்வதி, விநாயகர் சகிதமான நந்தி வாகனத்தில் கயிலை மலையை விட்டுப் புறப்பட்டுச் சென்றார். சிவபெருமான் உன்னதமான பிறப்புத் தத்துவத்தை எடுத்துரைக்கும்போது சதிதேவி மட்டுமே தன்னுடன் இருக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டார். செல்லும் வழியில் தன்னிடமிருந்து ஒவ்வொரு பொருளையும் களைந்தார்!
அப்படி, நந்தி தேவரை (காளையை) விட்ட இடம் பெயில் காவுன் (ஹிந்தியில் நந்திக் கிராமம்). இதுதான் திரிந்து ‘பெஹல்காம்’. சந்திரனை விட்ட இடம் சந்தன்வாரி. நாகங்களைத் துறந்த இடம் சேஷநாக். விநாயகரை நிறுத்திய இடம் மஹா கணேஷ் பர்லத் - மஹா குணாஸ். பஞ்ச பூதங்களைத் துறந்த இடம் - பஞ்சதாரணி. குகைக்கு அருகில் கங்கா நதியைத் துறந்த இடத்திலிருந்து அமராவதி வருகிறது. உலகின் பற்றுக்களை துறந்து இறைத் தாண்டவம் ஆடிய சிவசக்தி ஸ்வரூபங்கள் குகையை அடைந்தனர். மான் தோலை ஆசனமாக இட்டு அதன் மேல் தான் அமர்ந்து அருகில் தன்னில் பாதியான மங்கை நல்லாளையும் அமர வைத்துக்கொண்டு சிருஷ்டி தத்துவத்தை விளக்கினார் பிறையணிச் சடையன்.
குகையைச் சுற்றி உள்ள உயிரினங்கள் சிருஷ்டி ரகசியத்தைத் தெரிந்துக் கொள்ளக் கூடாது என்பதால் இறைவன் பெரிய தீயை (காலாக்னி) உருவாக்கினார். மான் தோலுக்கு அடியில் ஒரு புறா முட்டை இருந்தது. முட்டை காலக்னியால் அழியவில்லை. அதிலிருந்த இரு உயிர்களும் கயிலை மலையான் அளித்த விளக்கங்களைக் கேட்டு, சாகாவரம் பெற்றன!
குகையில் லிங்க வடிவங்களாக சூட்சுமப் பொருளாக உலகை ரட்சிக்க பார்வதியும் பரமேஸ்வரனும் காட்சி தருகின்றனர். பிருகு முனிவர்தான் முதன் முதலில் அமர்நாத் தரிசனம் செய்திருக்கிறார். ‘பிருகு ஸம்ஹிதை’யில் இந்த வரலாறு இடம் பெற்றிருக்கிறது.
இந்தக் குகைக் கோயிலின் வரலாறு 5000 வருடங்களுக்கும் மேலானது போலும்! கி.மு. 300-ல் ஆரிய குல அரசர்களால் பூஜிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரின் வரலாற்றுப் பதிவுகளைக் கொண்ட ‘ராஜதரங்கினி’ என்ற புத்தகத்தில் ‘அமரேஸ்வர்’ என்றும் ‘அமர்நாத்’ என்றும் இந்த இறைவன் போற்றப்படுகிறார். கி.பி.11-ம் நூற்றாண்டில் ‘சூரிய மதி’ என்ற ஒரு
ராணி இந்தக் கோயிலுக்கு திரிசூலங்கள், பூஜைப் பொருட்கள் போன்றவற்றை அளித்ததாக வரலாறு.

15-ம் நூற்றாண்டில் பூட்டா மாலிக் என்ற இஸ்லாமியச் சிறுவன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான். அவனிடம் பெரியவர் ஒருவர் கூடை நிறைய நிலக்கரியைக் கொடுத்து வீட்டுக்கு எடுத்துச் செல்" என்றாராம். தமது இல்லத்தை அடைந்த சிறுவனுக்கு ஆச்சரியம்! கூடையில் தங்கக் காசுகள்! பூட்டா மாலிக் குடன் ஊர் மக்களும் சேர்ந்து மறுபடி மலை மேல் ஏறிப் பார்த்தனர். யாரையும் காணவில்லை! அங்கு ஒரு குகையில் 3 பனி லிங்க வடிவங்கள் மட்டும் காட்சி அளித்தனவாம். அன்றிலிருந்துதான் இத்தல ஈசனை மக்கள் தரிசிக்க ஆரம்பித்தனர்.
ஜூன் மாதம் கடைசியிலிருந்து ஆகஸ்ட் மாதம் 10 - 15 தேதிவரை அமர்நாத் யாத்திரை நடக்கிறது. இதை ‘ச்ரவண மேளா’ என்கின்றனர்.
ஸ்ரீ நகரிலிருந்து பால்டால் ராணுவ கேம்ப்புக்குச் சென்றோம். அழியாப் பொருளான அமரநாதனை, திரிபுரம் எரி செய்த தேவதேவனை வணங்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பு ஒருவித பரவசத்தை ஏற்படுத்தியது. கடினமான மலைப்பாதை, குளிர், மலையின் அடிவார கேம்ப்பிலிருந்து புறப்பட்டு ஒரே நாளில் போய்விட்டுத் திரும்பிவிட வேண்டும், தீவிரவாதிகள் மற்றும் அன்னியரின் தாக்குதல் என்ற பலவித பயங்களும் சேர்ந்த உணர்ச்சிக் கலவை மனத்தில் அலை பாய்ந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. அரசும், கோயில் நிர்வாகமும் சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். 10 அடிக்கு ஒரு ராணுவ வீரர்.
முதல்நாள் இரவு அடிவார கேம்ப்பில் தங்கினோம். கழிப்பறை, தண்ணீர் வசதியுடன் கூடிய தற்காலிகமாக அமைக்கப்பட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய மர வீடுகள்! காலை 5 மணிக்கு காப்பி, டீ, பிஸ் கட்டில் ஆரம்பித்து இரவு 11 மணி வரை உணவு கிடைக்கிறது. இரவு நல்ல குளிர். அதிகாலை 4 மணிக்கு எழுந்து தயாராகி குகைக் கோயிலுக்குக் கிளம்பினோம். நிறையக் குதிரைக்காரர்கள், டோங்கா (தொட்டில் போன்றது) வாலாக்கள்,ஹெலிகாப்டர் ஏஜெண்டுகள் நம்மைச் சுற்றிக் கொள்கிறார்கள்.
குதிரைக்காரர்களிடம் பேரம் பேசினோம். அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாகக் கேட்கிறார்கள். தமிழில் பேசிக் கொண்டிருந்த ராணுவ வீரர்களை உதவிக்கு அணுகினோம். அவர்கள் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மூலம் சரியான வாடகைக்கு குதிரைக்காரர்கள் கிடைத்தார்கள்.
14 கிலோமீட்டர் மலைப்பாதை! ஏற்ற, இறக்கங்கள், ஆறுகள், பனிப்படலங்கள் என்று பாதை தொடர்ந்தது. ஓரிடத்தில் பனிப்பாறையில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது. ராணுவ வீரர்கள் சரியான நேரத்தில் கண்டுபிடித்து எச்சரிக்கை செய்ததால் உயிர் தப்பினோம்.
குகை வாயிலை அடைந்தோம். சுமார் 150 அடி உயரம் 90 அடி நீளமுள்ள மிகப்பெரிய நுழைவாயில் போல் காட்சி அளிக்கிறது. எந்த உயிரினங்களும் அதிகம் காணப்படாத இடத்தில், சத்தியத்துக்குக் கட்டுப்பட்டதுபோல் அந்த 12000 அடி உயரத்தில் குகை வாயிலில் இரண்டு புறாக்களை நாங்கள் பார்த்தோம். அமரத்துவம் பெற்ற புறாக்கள் அல்லவா அவை! எங்கு நோக்கினும் ராணுவத்தினரும் பக்தர்களும். குகையை நெருங்கும்போது அதிக குளிர் இல்லாததை உணர்ந்தோம்.
நுழைவு வாயிலில் சுதை வேலைப்பாடாக அழகிய நந்திதேவர். அவரை வணங்கி உள்ளே சென்றோம். பளபளவென்று ஜொலிக்கும் பனி வடிவில் ஏகன் அநேகனான ஈசன்! பாண லிங்க வடிவாக சுமார் 2 அடி உயரத்துடன் ருத்ராட்ச மாலைகளுடன் செந்தூரப் பொட்டுடன் ஜோதிச் சுடரான சதாசிவனார். வில்வ இலையால் பூஜைகள் செய்யப்பட்டு இருந்தன. மிக அருகில் செல்ல முடியாதபடி கம்பித் தடுப்பு ஏற்படுத்தி இருக்கின்றனர். ‘மெய்யா, விமலா, விடைப் பாகா, நாயின் கடையாய் கிடந்த அடியேற்குத் தாயின் சிறந்த தயாவான தத்துவனே! இவையெல்லாம் உன் அருள் இருந்ததினால் மட்டுமே எங்களுக்கும் வாய்க்கப் பெற்றோம்’ என்று மனமுருகி ‘நமசிவாய’ மந்திரத்தை உச்சரித்தோம். இடதுபுறம் பனி வடிவான விநாயகர், வலதுபுறம் பார்வதி! மனதார வேண்டினோம்.
இந்தக் குகையும், மலையும் சுண்ணாம்புக் கல் (lime stone) வகையைச் சேர்ந்தவை. பனி உருகிக் கீழே விழுந்து தரையில் சேர்ந்து, மறுபடி உறையும்போது பல வடிவங்கள் ஏற்படுமாம். இவை stalagmite எனப்படுகின்றன. அப்படி ஏற்படுபவை பௌர்ணமி, அமாவாசை கால சுழற்சிக்கு ஏற்ப அளவு அதிகரிக்கும் அல்லது குறையும். இது அறிவியல் அடிப்படை.
குகைக் கோயிலில் இந்த பனியில் ஊறிய சுண்ணாம்பு சாந்தை பிரசாதமாகத் தருகிறார்கள். பனி நீரையே தீர்த்தமாகவும் தருகிறார்கள்.
ஒரு வித்தியாசமான வடிவில் இறைக் குடும்பத்தைத் தரிசித்த பரமானந்தம் மனத்தில் பொங்க... கீர் பவானி தரிசனம் காண ஆயத்தமானோம்

Comments