சரணாகதி

இறைவனின் பாதம் ஒன்றே கதி என்று நினைத்து அவனது சரணங்களை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பர்வர்களுக்கு, இறைவன் நிச்சயம் நற்கதியைத்தான் அருள்வான் என்பதில் சந்தேகமே இல்லை. அப்படிப்பட்ட அந்த இறைவனின் சரணத்தைக் கெட்டியாகப் பற்ற வேண்டியது நம் கடமை; பற்றாமல் போனால் நம் மடமை" என்றார் ‘சரணாகதி தத்துவம்’ என்ற தம் சொற்பொழிவில் டாக்டர் ராமதாஸ்.
ராமருக்கு ‘சரணாகத வத்ஸலன்’ அப்படின்னே ஒரு பேர் உண்டு. ராமாயணத்தில் பால காண்டம் துவங்கி, யுத்த காண்டம் வரை இந்த சரணாகதி தத்துவத்தை ரொம்ப அழகாய்ப் பார்க்கலாம். பால காண்டத்தில் தேவர்கள் பகவான் ஸ்ரீமன் நாராயணன் இடத்தில் சரணாகதி செய்கிறார்கள்
அயோத்யா காண்டத்தில், பரதன் சரணாகதி மற்றும் குகனோடு சக்யம். ஆரண்ய காண்டத்தில், ரிஷிகள் ராமச்சந்திர மூர்த்தியிடம் சரணாகதி செய்கிறார்கள். கிஷ்கிந்தா காண்டத்தில், சுக்ரீவன் சரணாகதி. யுத்த காண்டத்தில், விபீஷணன் சரணாகதி செய்கிறார்.
இதில் விபீஷண சரணாகதிக்குத்தான் தனியொரு பெருமையும் விசேஷமும் இருக்கு. சரணாகதி லட்சணம் என்பது பரிபூர்ணமாக இருந்தது இதில்தான்.
சரணாகதியின் ஐந்து அங்கங்கள் இருந்தது விபீஷண சரணாகதியில்தான்.
அந்த சரணாகதி தத்துவத்தில் சொல்லப்படும் ஐந்து அங்கங்கள் என்னென்ன?
அநுகூல்ய சங்கல்பம் - இறைவனுக்கு அனுகூலமான செயல்களைச் செய்தல். அதாவது எவையெல்லாம் தர்மத்துக்கு உகந்ததோ, அவையெல்ச்லாம் இறைவனுக்கு அனுகூலம்.
ப்ராதிகூல்ய வர்ஜநம் - இறைவனுக்கு விரோதமானவற்றை செய்யாதிருத்தல். தர்மத்துக்கு மாறுபட்ட, முரணான அனைத்தும் இறைவனுக்கு விரோதம்.
மகா விச்வாசம் - இறைவன் அவசியம் ரக்ஷிப்பான் என்ற நம்பிக்கை கொள்ளல். காலக்கெடு நிர்ணயம் செய்யாமல், சந்தேகம் கொள்ளாமல், பூர்ணமாயிருத்தல்.
கோப்த்ருத்வ வரணம் - சரணம் அடைந்தேன், ரட்சகனாக இருத்தல் வேண்டும் என பிரார்த்தித்தல் கார்ப்பண்யம் - என்னைக்காத்துக் கொள்ள என்னிடம் ஆற்றல் இல்லை எனச் செருக்கு நீங்கிடல்.
சரணாகதியில் இருக்கக்கூடிய இந்த ஐந்து அங்கங்களையும் தாண்டி, விபீஷணரிடம்தான் ‘அங்கீ’ என்கிற ஆறாவது தன்மையும் இருந்தது.
(அகிஞ்சன:) ‘அகிஞ்சன’ என்றால் விருப்பு, வெறுப்பின்றி இருத்தல் என்பது பொருள்.
ஸ்ரீ நிகமாந்த மகாதேசிகன் சொல்றார்: பிராட்டியும், பகவானும் விட்டாலும், நான் விடமாட்டேன் என அவர்களின் பாத கமலம் சொல்லுமாம்."
விபீஷணர் எல்லாத்தையும் விட்டுட்டு பகவான் ஸ்ரீ ராமனின் பாதமே கதி என அப்படித்தானே வந்தார். நான்கு பேரோடு அபயம் எனக் குரல் கொடுத்தபடி விபீஷணர் ராமர் இருக்கும் இடம் நோக்கி வருகிறார்.
பகவான் நினைச்சிருந்தா விபீஷணனை அப்படியே ஏத்துக் கொண்டிருக்கலாம். சுக்ரீவனின் ராஜ்யம் நடந்து கொண்டிருந்த சமயம் அது. சுக்ரீவன் ராமரிடம், அண்ணனை விட்டுட்டு வந்திருக்கான். வந்திருக்கும் காலம் சரியில்லை. அதனால் விபீஷனனை ஏற்றுக் கொள்ளக் கூடாது" என்கிறான். ஜாம்பவான், பகை குலத்திலிருந்து வந்திருக்கான். ஏத்துக்க வேண்டாம்" என்கிறார். யாருமே விபீஷணனை ஏத்துக்கல.
ஆஞ்சனேயரின் கருத்தை ராமர் கேட்டபோது அவரோ, இலங்கை மாநகரிலேயே தர்ம ஸ்வரூபி இவன்தான். அபயம் என வந்திருப்பவனை ஏற்றுக் கொள்ளாலாம்" என்றார். உடனே ராமர், அபயம் என வந்தவரை ஏற்றுக் காப்பது என் விரதம். சுக்ரீவா, நீ போய் அவனை அழைச்சுண்டு வா" என்கிறார்.
தமக்கு இலங்காபதியாய் முடிசூட்டி விடுவோம் என ராமர் சொல்லும்போது, பிரபு, பரதனுக்கு தங்கள் திருவடியைத் தந்தருளியதைப் போல, எனக்கும் தங்கள் திருவடிதான் வேண்டும்; திருமுடி வேண்டாம்" என்கிறார் விபீஷணன். ராமரின் திருவடியைத் தான் தன் தலையில் சூடிக் கொண்டார் விபீஷணன்.
அதனால்தான், தாம் ஆராதித்த, தம் குலதனமான ஸ்ரீ ரங்கநாதரையும் விபீஷணனிடம் அளித்தார் ஸ்ரீராமன். பரிபூர்ண பக்திக்கு, சரணாகதிக்கு பகவான் தன்னையே தருகிறார் என்பது இங்கே சூட்சுமமாக உணர்த்தப்படுகிற விஷயம்.
பெருமாளின் குணங்களில் ஆழ்ந்திருப்பவர்கள் ஆழ்வார்கள். ‘பகவானின் சரணமே கதி’ என சரணாகதி செய்த விபீஷணனுக்கும் விபீஷணாழ்வார்னு பேரே கிடைத்தது. நம்பிக்கையோடு நாமும் இறைவனின் திருவடியை மட்டுமே பற்றுவோம். அத்திருவடி நம்மை ஒருக்காலமும் கைவிடாது என உறுதியாக நம்புவோம்."

 

Comments

Post a Comment