ஆயிரம் ஆண்டுகள் போனாலும்... அருளை அள்ளி வழங்கும் அற்புத சிவலிங்கம்!

இஞ்சிமேடு பெரியமலை சிவகுருநாதா இமகிரியாய் விளங்க வேண்டும் சிவகுருநாதா இமவானின் மகளோடு சிவகுருநாதா இமைப் பொழுதில் எழுந்தருள்வாய் சிவகுருநாதா!
கிலமெங்கும் வியாபித்திருக்கும் சர்வேஸ்வரனின் அறுபத்துநான்கு திருவிளையாடல்களை ஆன்றோர் அனைவரும் அறிவர். காரணம் இந்தத் திருவிளையாடல்கள் அனைத்தும் எத்தனையோ காலத்துக்கு முன் இறையருட் பெருமக்களால் தெளிவாக எழுதப்பட்டவை. இது ஒரு புறம் இருக்க... இன்னும் எழுதப்படாத திருவிளையாடல்கள் எத்தனையோ உள்ளன. ஆதியந்தம் இல்லாத சர்வேஸ்வரனின் திருவிளையாடல்களை சாதாரண மனிதர்களால் கணிக்கவோ, அறுதியிட்டுக் கூறவோ முடியுமா என்ன? இந்தப் பிரபஞ்சமும் பிரபஞ்ச இயக்கமும் இருக்கும்வரை இந்தத் திருவிளையாடல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அவையெல்லாம் நேரமும் காலமும் கூடி வரும்போதுதான் தமிழ் கூறும் நல்லுலகுக்குக் கிடைக்கவும் செய்யும்.
இஞ்சிமேடு பெரியமலை அருள்மிகு திருமணிச்சேறை உடையார் (உடையார் என்பதற்கு உடையவர், செல்வந்தர், சிவன் என்றெல்லாம் பொருள் உண்டு) நடத்திய திருவிளையாடலும் அப்படிப்பட்டதுதான். வெளியுலக மக்களால் அதிகம் அறியப்படாதவை இவை. இந்த ஐயன் குடிகொண்டிருக்கும் திருத்தலமான இஞ்சிமேடு பெரியமலை, திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி தாலூகாவில் அமைந்துள்ளது.
புராணச் சிறப்பும் வரலாற்றுச் சிறப்பும் செழுமையாகவுள்ள இந்த இஞ்சிமேடு திருமணிச்சேறை உடையாருக்கு இங்கு ஆலயம் தோன்றி, சுமார் இரண்டாயிரத்தைந்நூறு ஆண்டு கள் ஆகி இருக்கலாம் என்கிறார்கள். சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த ஆதிக்க வெறி கொண்ட அந்நியர்களின் தொடர் படையெடுப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டவற்றுள் இந்த ஆலயமும் ஒன்று. அந்தத் தாக்குதலின் இறுதியில் மலை மீது கம்பீரமாகக் கோலோச்சிக் கொண்டிருந்த ஈசனின் ஆலயம் தரைமட்டமாக அடித்து நொறுக்கப்பட்டது. எனினும் ‘திருமணிச்சேறை உடையார்’ என்று பக்தியுடன் வணங்கப்பட்ட அங்கிருந்த சிவலிங்கத் திருமேனி மட்டும் ஆச்சரியத்துக்கு உரிய வகையில் எந்த வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் தப்பித்தது.அதன் பிறகு இந்த சிவலிங்கத் திருமேனி மட்டும் அங்கு ஒரு சில நூற்றாண்டுகள் தனித்து விடப்பட்டிருந்தது. கோயிலோ, கருவறையோ, பரிவார தேவதைகளோ, தீர்த்தமோ, விழாக்களோ இல்லாமல் மலை மேல் வெற்றுப் பிரதேசத்தில் ஆராதனை இல்லாமல் அநாதரவாக இருந்தார் திருமணிச்சேறை உடையார்!
மலைப் பகுதி என்பதால் ஆடு, மாடு மேய்க்க வரும் சிறுவர்கள் அதன் மேல் ஹாயாக அமர்ந்திருப்பார்களாம். சில நேரம் மேய்ச்சல் மாடுகள் குறிப்பிட்ட இலக்கைத் தாண்டாமல் இருப்பதற்கு, மாடுகளை இந்த சிவலிங்கத்தை ஒரு கல்லாகக் கருதி அதில் கட்டிவிட்டுச் சென்ற அவலமும் நடந்திருக்கிறது. தாங்கள் அமர்ந்திருப்பது ஒரு சிவலிங்கத்தின் மீது என்பதே அவர்களுக்குத் தெரியாதாம். காரணம், அந்த அளவுக்கு கோயில் இருந்த பகுதியில் புதர்கள் மண்டி காடு போல் வளர்ந்திருந்தது.
‘பலராலும் வழிபடப்படும் இந்த ஆலயம் கிருத யுகத்தில் சீரழியும்... கலிகாலத்தில் மானிடர் ஒருவரின் முயற்சியால் இது சீர் செய்யப் படும்!’ என்று பெங்களூரில் ஒரு நாடி ஜோசியக் குறிப்பில் தகவல் சொல்லப்பட்டிருந்ததாம். அதன்படி இஞ்சிமேடு பெரியமலை கிராமத்தைச் சேர்ந்த ராஜா ஸ்வாமிகள் என்பவரின் முயற்சியால் சிவலிங்கத் திருமேனிக்குத் தினமும் நெய் தீபம் ஏற்றப்பட்டது. வழிபாடுகள் மெள்ளத் துவங்கின. திருப்பணி வேலைகளும் துரிதமாக்கப்பட்டன.
அதன்பின், அவரது வாரிசான இரா. பெருமாள் (பார்க்க - பெட்டிச் செய்தி) மற்றும் ஊர்க்காரர்கள் ஒத்துழைப்புடன் மலைமேல் ஆலயத் திருப்பணி கிடுகிடுவென வளர ஆரம்பித்தது. திருமணிச்சேறை உடையார், திருமணிநாயகி ஆகிய பிரதான தெய்வங்களுடன் பரிவார தேவதைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். வழிபாடே இல்லாமல் சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த திருமணிச்சேறை உடையார் ஆலயத்துக்குக் கடந்த 1999-ஆம் ஆண்டு கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெற்றது. இஞ்சிமேடு மற்றும் அதைச் சுற்றி யுள்ள ஐம்பத்தெட்டு கிராம மக்கள் இந்தக் கும்பா பிஷேகத்துக்குக் கைங்கரியம் செய்து, பக்திப் பெருக் கோடு கலந்து கொண்டனராம்.
மலை மீது சுமார் 200 அடி உயரத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் இந்த ஆலயத்தின் பெருமைகளைக் கொஞ்சம் பார்ப்போம்.
ஆதிகாலத்தில் இமயமலைக்கு நிகராகப் பேசப் பட்டதாம் இஞ்சிமேடு பெரியமலை. அகத்தியரின் பொற்பாதம் பட்ட புண்ணிய பூமி. மாமுனிவர்களும் புண்ணிய சீலர்களும் முன்னொரு காலத்தில் தவம் இயற்றிய அற்புத மலை. ஒரு முறை பிரம்மனுக்கும் திருமாலுக்கும் இடையே தங்களுக்குள் யார் பெரிய வர் என்ற போட்டி எழுந்தது. ‘என் அடி(பாதம்) மற் றும் முடியை யார் முதலில் கண்டு வந்து சொல்கி றார்களோ அவரே பெரியவர்!’ என்று சர்வேஸ்வரன் சொல்ல... அதை ஏற்றுக் கொண்டு பிரம்மாவும் திரு மாலும் புறப்பட்டனர். சிவபெருமானின் அடியைக் காண, பாதாளத்தை ஊடுருவிப் புறப்பட்டார் திரு மால். ‘முடியைக் கண்டு போட்டியில் வெல்வேன்’ என்று மமதையுடன் புறப்பட்ட பிரம்மன் ஆகாய மார்க்கத்தில் பயணித்தார்.
இந்த இருவரும் நெடுந்தொலைவுக்குச் சென்றும் சர்வேஸ்வரனின் அடியும் காணவில்லை; முடியும் காணவில்லை. இரண்டு பேருமே தொடர்ந்து ஊடுருவிக் கொண்டிருந்தனர். பிரம்மனுக்குச் சோர்வு வந்தது. அதே நேரம், இந்தப் போட்டியில் தானே வெல்ல வேண்டும் என்று ஆசையும் வந்தது. எனவே, வழியில் எதிர்ப்பட்ட தாழம்பூவை (‘தாழம்பூ முனிவர்’ என்றும் சொல்வதுண்டு) தனக்கு பொய் சாட்சி சொல்ல வருமாறு அழைத்தார். முதலில் மறுத்த தாழம்பூ, பின்பு பிரம்மன் சொன்ன சில வார்த்தைகளில் மயங்கி இதற்குச் சம்மதித்தது.
சர்வேஸ்வரன், சாதாரணமானவரா என்ன? பொய்யாக பதில் சொன்ன பிரம்மனின் திட்டம் அறிந்து கோபம் கொண்டார். அதனால் பிரம்மனுக்கு பூலோகத்தில் கோயிலோ வழிபாடோ இருக்காது என்று சபித்தார். அவருடன் வந்து சாட்சி சொன்ன தாழம்பூ, இனிமேல் இறை வழிபாட்டுக்குப் பயன்படாது என்றும் சபித்தார்.
தாழம்பூ தனது தவறை உணர்ந்து சாப விமோசனம் கேட்டது. அப்போது, ‘கலி யுகத்தில் இஞ்சிமலைக் குன்றின் மேல் தாழையாக உருவெடுத்து தவம் செய். உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்!’ என்று ஈசன் அருளினார். அந்தத் தாழை மரமே இந்தக் கலி யுகத் தில் இங்கு ஸ்தல விருட்சமாகத் திகழ்கிறது.
சுமார் 2,500 வருடங்களுக்கு முன் இங்கு இவ்வளவு அற்புதமான ஆலயம் அமைந்ததும் ஒரு சுவாரஸ்யமான கதை. ஆதி காலத்தில் பண்டமாற்று வியாபாரம் செய்வதற்காகப் பொன்னையும் நவரத்தினங்களையும் எடுத்துக் கொண்டு கங்கை நதிப் பகுதியை நோக்கி தென்னாட்டைச் சேர்ந்த நாற்பத் தொன்பது வணிகர்கள், குதிரைகள் பூட் டிய ஏழு ரதங்களில் புறப்பட்டனர். இதை விண்ணுலகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த நட்சத்திரக் கூட்டத் தலை வன் துருவனுக்கு அந்த வியாபாரிகளின் பொன்னைக் கவர்ந்து செல்ல ஆசை எழுந் தது. உடனே தன் நட்சத்திரக் கூட்டத்தின ரோடு ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் அவன் மண்ணுலகம் வந்து சேர்ந்தான்.
வானிலிருந்து வந்த நட்சத்திரக் கள்வர்கள் நாற்பத்தொன்பது வியாபாரிகளுடனும் கலந்தனர் உடன் வருபவர்கள் மனிதக் கள்வர்கள் என்று தவறாக நினைத்த நாற்பத்தொன்பது வியாபாரிகளும் தங்களது உடைமைகளைக் காப்பதற்காக அவர்களோடு கடும் போரிட்டனர். இறுதியில் வெற்றி, நட்சத்திரக் கூட்டத்தினருக்கே! நாற்பத்தெட்டு வியாபாரிகளைக் கொன்றுவிட்டு, பெருமளவு செல்வங்களைக் கவர்ந்த னர் நட்சத்திரக் கூட்டத்தினர். எஞ்சியது ஒரே ஒரு வியாபாரி மட்டுமே. அவன் தனது நவரத்தினக் கற்க ளைக் காக்கும் பொருட்டு இரட்டைக் குதிரைகள் பூட்டிய தனது ரதத்தில் ஏறித் தப்பித்தான்.
நட்சத்திரக் கூட்டம் இதைக் கண்டு ஆவேசமானது. இவன் மட்டும் தப்பிப்பதா? ‘விடாதே... பிடி அவனை! அவனைக் கொன்று அந்தச் செல்வங்களையும் கவர்ந்து கொள்ளுங்கள்!’ என்று துருவன், தன் நட்சத்திரக் கூட்டத்தினருக்கு உத்தரவிட்டான். உடனே அந்த வியாபாரியை மொத்தக் கூட்டமும் துரத்தியது. மூன்று இரவு- பகல்கள் இடை விடாமல் துரத்தியும் அந்த வியாபாரியை நட்சத்திரக் கள்வர்களால் பிடிக்க முடிய வில்லை! காரணம் அவனுக்கு சர்வேஸ்வரனது அருள் இருந்தது. அந்த வியாபாரி முன் ஜென்மத்தில் தேவதூதன் என்ற பெயருடன் இறைவனுக்குப் பணிவிடை செய்தவன். அப்படிப்பட்டவன், ஒரு நாள் சர்வேஸ்வரனிடம், ‘‘ஈஸ்வரா! நான் அடுத்த ஜென்மத் தில் மனிதப் பிறவி எடுத்து, தங்களுக்கு ஓர் ஆலயம் எழுப்பி, அதில் உமது விக்கிரகம் அமைத்து ஆராதனை செய்ய எனக்கு அருள் புரிய வேண்டும்!’’ என்று விண்ணப்பித்தான்.
‘‘அப்படியே ஆகட்டும்!’’ என்று அருள் புரிந்தார் சிவபெருமான்.
முன் ஜென்மத்தில் தேவதூதன் என்ற பெயருடன் விளங்கிய அந்த வியாபாரியின் ஆசையை இந்த ஜென்மத்தில் நிறைவேற்றுவதற்காகவே அவனை உயிர் தப்ப வைத்தார் ஈஸ்வரன்! இறுதியாக வியாபாரி தஞ்சமடைந்தது இந்த இஞ்சிமலையில்தான்! ஈஸ்வர அனுக்கிரகம் வேண்டி, நெடுநாள் இங்கு தங்கி தியானத்தில் ஈடுபட்டான் அந்த வியாபாரி. பின், தான் வைத்திருந்த நவரத்தினங்களை ஏழு பொற்பானைகளில் இட்டு நிரப்பி, பட்டு- பீதாம்பரங்களை மேலாகப் போட்டு அவற்றைப் புதைத்து வைத்தான்.
அதன் மீது தஞ்சையில் இருந்து, தான் விசேஷமாக வடிவமைத்துக் கொணர்ந்த சிவலிங்க விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்தான். அந்த சிவலிங்கமே ‘திருமணிச் சேறை உடையார்’ என நாமகரணம் சூட்டப்பட்டது (பிற்பாடு இந்தக் கோயில் சூறை யாடப்பட்டது. அப்போது அந்த வியாபாரியால் புதைக்கப்பட்டிருந்த நவரத்தினங்களும் பொன்னும் அந்நியர்களால் களவாடப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்!).
பிற்காலத்தில் முசுகுந்தச் சோழ மன்னன், திருமணிச்சேறை உடையார் மட்டுமே இருந்த இந்த பூமியில், இறையருளால் தான் பெற்ற ஒரு லிங்கத்துக்கு ‘வைத்தீஸ்வரன்’ என்ற பெயர் இட்டு வணங்கி வந்தான். நாளடைவில் அதுவும் அந்நியர்களால் தகர்க்கப்பட்டது. ‘இங்குதான் வைத்தீஸ்வரர் வீற்றிருந்து அருள் பாலித்து வந்தார்’ என்று வெறுமையான ஓர் இடத்தை மலைமீது இப்போது சுட்டிக் காட்டுகின்றனர்.
இந்த மலையில் உள்ள மிஞ்சி எனும் ஒரு வகை தர்ப்பைப் புல்லைக் கொண்டு நந்தி பகவான், தன் முன்னோர்களுக்கு பிதுர்க்கடன் ஆற்றினாராம். எனவே, இங்குள்ள நந்தி தேவரும் சிறப்புப் பெற்றவர் ஆகிறார். நந்தியின் குளம்படிகள் கூட இந்த இஞ்சிமலையில் உள்ளன. சிவனிடம் வரம் பெற்ற நந்திதேவர், அவருக்கே வாகனமானதால் இந்த ஊரை, ‘நந்திபுர விண்ணகரம்’ என்றும் சொல்கிறார்கள்.
கி.பி. 1126-ஆம் ஆண்டில் விக்கிரம சோழன் ஆட்சிக்கு வந்த எட்டாம் ஆண்டில் இஞ்சிமேடு திருமணிச்சேறை உடையார் கோயிலுக்குச் செல்வதற் காக மலைமீது ஏழு படிக்கட்டுகள் கட்டினான் என்ற தகவலை ஒரு கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. கோயிலில் படிகள் ஏறி நாம் மேலே செல்லும்போது விக்கிரம சோழன் கட்டிய பழைய படிக்கட்டுகளை இன்றும் காணலாம். அந்தப் படிக் கட்டுகளைத் தனியாக அடையாளம் காட்டிக் கட்டி வைத்திருக்கிறார்கள்.
இந்தத் தலத்தை வணங்கினாலே முக்தி கிட்டுமாம். அது சாஷ்டாங்க நமஸ்காரமாக இருக்கலாம். இரு கரம் உயர்த்தி உளமார வணங்குவதாகக்கூட இருக்கலாம். எனவே, இந்த திருமணிச்சேறை உடையாரை உளமார வணங்கி, ஆலய தரிசனம் செய்வோம்.
மலைக்கு மேலே கோயில். இங்கு வாக னத்தில் செல்ல முடியாது. நடந்துதான் செல்ல வேண்டும். மொத்தம் ஐம்பத்தோரு படிகள். படிகளின் மேற்புறம் கூரை போடப்பட்டுள்ளதால் படியேறும் பக்தர்களுக்கு வெயில், மழை பற்றிய கவலை இல்லை. கற்பாறையில் வளர்ந்து வரும் வேம்பு மற்றும் அரச மரங்களை மலையில் காணலாம். இத்துடன் இணைந்தது நாகர் சந்நிதி. இதன் அருகில் தல விருட்சம் தாழை மரம் உள்ளது.
மலை ஏறுமுன், வலப் பக்கம் விநாயகர். சற்றுத் தொலைவில் நவக் கிரகங்கள். வித்தியாசமாகத் தங்கள் வாகனங்களுடன் இங்கு காட்சி தருகின்றனர் நவக் கிரகாதிபதிகள்.
மலைப் பாதையில் காட்சி தருகிறது சங்கு தீர்த்தம் எனப்படும் சங்கர தீர்த்தம். சங்கின் வடிவிலேயே இதை அமைத்துள்ளார்கள். பாகீரதி எனும் நிலத்தடி கங்கையாக இந்த ஊற்று கருதப்படுகிறது. எனவே, மலை மீதுள்ள இந்தச் சுனை நீர், புனிதத் தன்மை வாய்ந்ததாக நம்பப்படுகிறது. சுனை எந்தக் காலத்திலும் வற்றுவதில்லையாம். சுனைப் பகுதியை தேவநாகம் ஒன்று இடைவிடாமல் காவல் காக்கிறதாம். ‘‘இந்தத் தீர்த்தம்தான் இன்றும் இறைவனின் அபிஷேகத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. அந்த அபிஷேக நீரை அருந்தினால், தீராத வியாதிகள் கூடத் தீர்ந்து விடும். அவ்வளவு ஏன்... பாம்புக் கடிக்கும் இந்தத் தீர்த்தம் விஷ முறிவாகப் பயன்படுகிறது என்கிறார்கள். பிள்ளை வரம் கேட்பவர்கள், ஒரு மண்டல காலம் இந்தத் தீர்த்தத்தைத் தொடர்ந்து அருந்தினால் பிள்ளைப் பேறு உண்டாகும் என்பது கண்கூடு. தவிர, திருமணம் ஆக வேண்டிக் காத்திருப்பவர்கள் இந்தத் திரு மணிச்சேறை உடையாரை மனமாரத் தொழுது தீர்த்தம் அருந்தினால் கல்யாணம் கை கூடுகிறது!’’ என்கிறார் ஆலய அர்ச்சகரான ஆனந்த சர்மா.
அழகாகக் காட்சி தரும் திருமணிச்சேறை உடையார் கோயிலுக்கு முன் இருக்கிறோம். பலிபீடம், நந்தி தேவர். பிரதோஷ வேளைகளில் கிராமத்தினர் திரண்டு வந்து அபிஷேகக் காட்சியைக் கண் குளிர தரிசிப்பார்களாம்.
பிராகார வலம் வருவோம். முதலில் ஸித்தி விநாயகர். பரோடா சமஸ்தானத்தில் செய்யப்பட்டது. பரவசப்பட வைக்கும் பளிங்கு உருவம். தவிர வள்ளி-தெய்வானையுடன் கூடிய முருகன், துர்க்கை, சண்டிகேஸ்வரர், கால பைரவர் போன்ற விக்கிரகங்கள் ஆகம விதிப்படி அமைந்துள்ளன.
 பாம்பாட்டிச் சித்தர் இன்னும் வசித்து வருவதாகச் சொல்லப்படும் ஒரு குகை, இந்தப் பிராகாரத்தில் இருக்கிறது. பாம்பு வடிவில் இன்னும் அவர் உள்ளே வசித்து வருகிறாராம். இதன் உள்ளே பத்துப் பேர் வரை அமர்ந்து தியானம் செய்யலாம். அந்த அளவுக்கு இட வசதி இருக்கிறது. தவறான எண்ணங்களுடன் உள்ளே செல்பவரை பாம்பு தீண்டிவிடும் என்கிறார்கள் ஊர்க்காரர்கள்.
பிராகார வலம் முடிந்து, வந்து நின்றால் திருமணிச்சேறை உடையார் சந்நிதி. கிழக்குப் பார்த்து அமர்ந்துள்ளார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளைப் பார்த்த அற்புத லிங்கத் திருமேனி. நாகாபரணத்துடன் முத்தங்கி அலங்காரத்தில் ஜொலிக்கிறார்.
‘‘சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்’’ என் கிறார் அர்ச்சகர் சிவா. நாற்பத்தைந்து அடி உயர கோபுரத்துடன் இருக்கிறார் இறைவன். இவருக்கு முன்னதாக சைவ நால்வர் விக்கிரகங்கள். கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர்.
அருகிலேயே தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்பாள். பெயர் திருமணிநாயகி. சாந்தம் தவழும் வடிவம். திருமணப் பேறு நல்கும் நாயகி. அம்பாளுக்கு இருபத்தெட்டு அடி உயர கோபு ரம். இன்னும் கொஞ்சம் மேலே போனால்_ கார்த்திகை மாதத்தில் தீபம் ஏற்றுவதற்காக பெரிய கொப்பரை அமைத்திருக்கிறார்கள்.
225 அடி உயரத்தில் ராஜ கோபுரம், கர்ப்பக் கிரகத்தின் முன் மகா மண்டபம், கொடிமரம், 63 நாயன்மார் சிலைகள் போன்றவை அமைக்கும் பணிகள் பக்தர்களின் நன்கொடையை வைத்து வர இருக்கிறதாம்.
வருடந்தோறும் படி விழா, ஆண்டு விழா, பொங்கல் விழா, மகா சிவராத்திரி, விநாயக சதுர்த்தி, ஆடிக் கிருத்திகை, நவராத்திரி, சூரசம்ஹாரம், கார்த்திகை தீபத் திருவிழா போன்ற வைபவங்கள் விமரிசையாக நடக்கின் றன. தினமும் மூன்று கால பூஜையும், பௌர்ணமி யில் கிரிவலமும் தற்போது நடந்து வருகிறது.
தரிசனம் முடிந்து திருமணிச்சேறை உடையார் ஆலயத்தை விட்டு வெளியே வரும்போது, அற்புதமான அருள் நம்மை ஆக்கிரமித்திருப்பதை உணர முடிகிறது! இது அந்த ஈஸ்வரன் செயல் தவிர, வேறு என்னவாக இருக்க முடியும்?!
ஓம் நமசிவாய!
பெ ங்களூரில் ஐ.ஏ.எஸ்-ஆக உயர் பதவியில் இருக்கும் இரா. பெருமாளின் பெரும் முயற்சியால் இந்த ஆலயம் தற்போது பிரபலமடைந்து வருகிறது. இவர், இஞ்சிமேடு கிராமத்துக்காரர். ஊரில் ஒவ்வொருவரும் மற்றவரைப் பார்க்கும்போதும் ‘ஹலோ’ சொல்வது போல் ‘ஓம் நமசிவாய’ என்று சொல்லப் பழக்கப்படுத்தி இருக்கிறார். ஊரில் எங்கு திரும்பினாலும் ‘ஓம் நமசிவாய’ என்கிற முழக்கம் காதுக்கு இனிமையாக இருக்கிறது. கோயிலுக்கு அருகே இருக்கும் பெருமாளின் வீட்டில் வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் சற்று ஓய்வெடுத்துச் செல்லலாம். இவரது மனைவியான லலிதாம்பிகையும் ஆலயப் பணிகளில் அக்கறை காட்டி வருவது குறிப்பிடத் தக்கது.
இந்த இஞ்சிமேடு பெரியமலை ஆலயம், பெரணமல்லூரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இருக்கிறது. மினி பஸ் வசதி உண்டு. சென்னையில் இருந்து பெரணமல்லூருக்கு பேருந்து வசதி உண்டு. ஆரணியில் இருந்து இஞ்சிமலை 21 கி.மீ. தொலைவு.
ஆலய முகவரி :
அருள்மிகு திருமணிச்சேறை உடையார் ஆலயம்,
இஞ்சிமேடு கிராமம்,
வந்தவாசி தாலூகா,
பெரணமல்லூர் அருகே,
திருவண்ணாமலை மாவட்டம்.
பின்கோடு: 604 503.
தொலைபேசி: 04183 245282

Comments