பெரிதினும் பெரிது!

 


அரசன் அநபாய சோழன் கேட்ட கேள்வி, பெரியவரின் மனத்தைக் குடைந்து கொண்டிருந்தது. எத்தனை நூல்களைப் புரட்டிப் பார்த்தும் விடை காண முடியவில்லை. குழம்பித் தவிக்கும் தந்தையிடம், அரசன் கேட்ட கேள்விதான் என்ன?" என்று கேட்டான் மகன்.
உலகைவிட பெரியது எது? கடலைவிட பரந்தது எது? மலையைவிட உயர்ந்தது எது? மன்னரின் இந்தக் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்" என்ற தந்தையிடம் கவலையை விடும்படி கூறி, இதோ பதில் என்றான்.
‘காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்தின் மானப் பெரிது.’
‘பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது.’
‘நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மானப் பெரிது.’
நேரத்தில் செய்த உதவி உலகைவிடப் பெரியது. பயன் கருதாத உதவி கடலைவிடப் பெரியது. கொள்கையில் திடமாக இருப்பது மலையை விடப் பெரியது.
பெரியவர் தன் மகன் சொன்னதை அப்படியே சென்று மன்னரிடம் சொல்ல, அவரிடம் விசாரித்து அறிந்த மன்னன் உடனே பல்லக்கை அனுப்பி அந்த இளைஞனை அழைத்துவரச் செய்து அவரையே தன் அமைச்சராக்கினான்! அந்த இளைஞர்தான் பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழார்!

புதிய பாடம்...
ஒரு சீடன் தன் குருவிடம் கேட்டான். குருவே! ‘நல்லதைப் படைத்த இறைவன்தானே கெட்டதையும் படைத்துள்ளான். அதனால் நல்லதை மட்டும் ஏற்பதுபோல கெட்டதையும் ஏற்றால் என்ன?" குரு அந்தக் கேள்விக்கு பதிலளிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.
கேள்விக்கு குருவாலேயே பதில் அளிக்க முடியவில்லை என்று நினைத்துக்கொண்டான் சீடன்.
பகல் உணவுவேளை வந்தது. அப்போது தனக்கு அளிக்கப்பட்ட உணவைப் பார்த்து அதிர்ந்துவிட்டான் சீடன். ஒரு கிண்ணத்தில் பசுமாட்டு சாணம் மட்டும் வைக்கப்பட்டிருந்தது. சீடன் விழித்தான். குரு, புன் முறுவலுடன் சொன்னார்: பால், சாணம் இரண்டுமே பசு மாட்டிடம் இருந்துதான் கிடைக்கிறது. பாலை ஏற்றுக்கொள்ளும்போது சாணத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாதா?"
சிஷ்யன் புதிய பாடம் கற்றான்.
-
குருவைச் சுற்றி சீடர்கள் அமர்ந்திருந்தார்கள். ஒரு சீடன், சுவாமி! சமயங்களின் அடிப்படை என்ன?" என்று கேட்டான்.
குரு அவனை அருகில் அழைத்தார்.
எல்லோரும் இருக்கிறார்களே! அவர்கள் எல்லாம் போனபின் உனக்குத் தனியாகச் சொல்கிறேன்" என்று அவன் காதில் கிசுகிசுத்தார்.
சீடனுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. அவன் தன் இருப்பிடத்தில் போய், பேசாமல் அமர்ந்து கொண்டான்.
தியானம் முடிந்து எல்லாரும் கலைந்து சென்றார்கள். சந்தேகம் கேட்ட சீடன் மட்டும் அப்படியே அமர்ந்திருந்தான்.
எல்லோரும் போய் விட்டார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, குருவே! எல்லாரும் போய்விட்டார்கள்" என்றான் மெல்லிய குரலில்.
குரு எழுந்து நின்றார்.
சீடனும் ஆவலோடு எழுந்து நின்றான்.
பின்னால் வா!" என்று சொல்லிவிட்டு, வெளியில் சென்றார் குரு. சீடன் ஆவலுடன் பின் தொடர்ந்தான்.
மடாலயத்துக்குப் பின்னால் ஒரு பெரிய மூங்கில் புதர் இருந்தது. அதன் முன்னால் போய் குரு நின்றார்.
சீடன் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
என்னை ஏன் பார்க்கிறாய்? அங்கே பார்! அதோ, அந்த மூங்கில் சிறியது! இந்த மூங்கில் பெரியது!" என்று சொல்லிவிட்டு நகர்ந்து போய்விட்டார் குரு.
அவ்வளவுதான் உபதேசம்!
அதுதான் சீடனுக்கு விடை!
இந்த உலகில் சிலர் புத்திசாலிகள், சிலர் மடையர்கள், சில மூங்கில்கள் குட்டை. சில நெட்டை. அறிவாளியோ முட்டாளோ, குட்டையோ நெட்டையோ ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றுக்கும் இவ்வுலகில் இடமும் உண்டு; காரணமும் உண்டு; பயனும் உண்டு; தனித்தனி சிறப்புகளும் உண்டு என்பதுதான் குரு உணர்த்தவந்த கருத்து.

Comments