காகபுசுண்டர் வணங்கிய ஷோடச லிங்கம்

கா கபுசுண்டரும் அவர் மனைவி ஸ்ரீபகுளாதேவியும் ஜீவசமாதி அடைந்த இடம், கள்ளக்குறிச்சி வட்டம் தென் பொன்பரப்பு கிராமத்தில் ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர் திருக்கோயிலின் ஈசானியத்தில் அமைந்துள்ளது.
இந்தத் திருக்கோயிலில் இருக் கும் ஷோடசலிங்கம் தனிச் சிறப்பு பெற்றது. சித்தர்களுக்கெல்லாம் தலைமை குருவாகக் கருதப்படும் ஸ்ரீகாகபுசுண்டர் 16 ஆண்டுகளுக்கு மேலாகக் கடும் தவமிருந்து, 16 முகங்களுடன் கூடிய சிவதரிசனம் பெற்றாராம். அதுபோல் உலக மக்களும் சிவதரிசனம் பெற்றுச் சிறப்படையும் வகையில் ஏறக் குறைய 1,300 ஆண்டுகளுக்கு முன் தென் பொன்பரப்பை ஆட்சி செய்த வானகோவராயன் என்ற மன்னன், 16 முகங்கள் கொண்ட ஷோடச லிங்கத்தை பிரதிஷ்டை செய்து, மற்ற சிவாலயங்களில் இல்லாத தனிச் சிறப்புகள் பலவற்றை உள்ளடக்கியதாக இந்தக் கோயிலை உருவாக்கினார் என்பது வரலாறு.
இந்த ஷோடச லிங்கம் நவபாஷாணத்துக்கு நிகரான சூரியகாந்தத் தன்மையுடன், சுமார் ஐந்தரை அடி உயரத்துக்கு, பிரம்மா மற்றும் விஷ்ணு பீடங்கள் மீது ஒரே கல்லால் கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது. உலகைக் கட்டியாளும் மும்மூர்த்தியரும் இவ்வாறு ஒரே வடிவமைப்பில் இணைந்திருப்பது இங்குள்ள சிறப்பம் சம். இந்தத் திருவடிவைக் கைகளால் தட்டிப் பார்த்தால் வெண்கலச் சத்தம் எழுவது கூடுதல் சிறப்பு.
ஸ்ரீகாகபுஜண்டர் இந்தக் கோயிலின் அருகில் சமாதி அடைந்ததையட்டி, பீடம் அமைக்கப்பட்டு திருவிளக்கு ஏற்றி இன்றும் பராமரிக்கப்பட்டு வருவது மற்றொரு சிறப்பு.
எல்லா சிவாலயங்களிலும் பிரதோஷ காலத்தில் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே சிவதரிசனம் செய்வது வழக்கம். ஆனால், இங்கு நந்தியெம்பெருமான் பால நந்தியாக வீற்றிருப்பதால், பிரதோஷத்தின்போது கொம்புகளுக்கிடையே தரிசனம் செய் யும் அவசியம் இன்றி, நேரடியாகவே சிவ தரிசனம் செய்யலாம். இது ஒரு சிறப்பம்சம்.
விவசாயம் செழிக்க, கடன் தொல்லை நீங்க, திருமணம் நடைபெற, ஜாதகத்தில் உள்ள ராகு-கேது பாதிப்புகள் நீங்க, களத்திர தோஷம், கால சர்ப்ப தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் நிவர்த்தியாக - பக்தர்கள் தங்கள் பிறந்த நட்சத்திரத்தன்று ராகு கால வேளையில் ஸ்ரீபால நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்வித்து பலனடையலாம். இங்கு பால், சந்தனம், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும்போது அவை நீல நிறமாக மாறுவதைக் காணலாம்.
கோயில் வெளிப் பிராகாரத்தில் வள்ளி- தெய் வானையுடன் பறக்கும் மயிலில் ஆசனமிட்டு, சுமார் 8 அடி உயரத்துடன் ஆறுமுகங்களோடு முருகப் பெருமான் காட்சி தருகிறார். தவிர குரு பகவான், துர்க்கை அம்மன் சந்நிதிகளும் எளிமையாகக் காட்சி தருகின்றன.
இந்தக் கோயிலின் சுற்றுச் சுவரில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் ஆதி கிரந்தம் மற்றும் தமிழ் எழுத்துகள் உள்ளன. ‘கங்கைக் கரை போன்ற புண்ணிய இடங்களுக்குச் சென்று ஆயிரம் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வணங்குவதால் கிடைக்கும் பலனை, இந்தக் கோயில் ஈசனின் ஆத்ம தரிசனத்தின் மூலம் பெறலாம்’ என்பது போன்ற தகவல்கள் அவற்றில் அடங்கியுள்ளன.
‘இந்தக் கோயில் பஞ்சபூத ஸ்தலங்களுக்கு இணையாக இருப்பதால் கருவறை மிகவும் உக்கிரமானதாக இருக்கும். இங்கு ஏற்றப்படும் தீபமானது துடித்துக் கொண்டே இருக்கும்’ என்று ஸ்ரீகாகபுஜண்டர் நாடிச்சுவடியில் குறிப்பிடப் பட்டுள்ளது. இன்றும் கருவறையின் மையத்தில் அமைந்துள்ள தீபம் துடிப் புடன் எரிந்து கொண்டிருப் பது, நாடி சுவடி கூற்றை மெய்ப்பிப்பதாக உள்ளது.
தேன், பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், விபூதி, சந்தனம், திருமஞ்சனம், கரும்புச்சாறு, எலுமிச்சம்பழச் சாறு, பஞ்சாமிர்தம், நெய், அரிசிமாவு, நல்லெண்ணெய், புனித நீர் போன்ற 16 வகைப் பொருட்களை சிவலிங்கத்தின் உச்சியில் அபிஷேகம் செய்ய ஆரம்பித் ததும் அவை தானாகவே சிறிதும் பிசிறு இல்லாமல் தனித் தனியாக 16 கோடுகளாக லிங்கத்தின் அடிப்பகுதி வரை வந்து பீடத்தில் ஐக்கியமாவதை தரிசிக்கலாம். ராகு கால வேளையில் இங்குள்ள சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்வதால், நமது அனைத்துப் பிரச்னைகளும் தீரும் என்பது ஐதீகம்.
ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதம் பௌர்ணமி தினத்தன்று காலை 6 முதல் 7.30-மணிக்குள்ளும், பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று காலை 6 முதல் 7.30 மணிக்குள்ளும் பால நந்தியின் இரு கொம்புகளில் இருந்து தோன்றும் சூரிய ஒளி இரு கோடுகளாக கர்ப்பக்கிரகத்தில் உள்ள சிவலிங்கத்தில் படிந்து மீண்டும் பாலநந்தி சிலையில் ஐக்கியமாவது கண்கொள்ளாக் காட்சியா கும். பால நந்திக்கும் கரு வறைக்கும் உள்ள தூரம் சுமார் 70 அடி!
- கே.பி.ஷண்முகம், திருச்செங்கோடு
கோயிலுக்குச் செல்லும் வழி
சே லம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர் _ கள்ளக்குறிச்சி செல்லும் வழியில் அம்மையகரம் பஸ் ஸ்டாப்பில் இருந்து மேற்கே 1 கி.மீ. தூரத்தில் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது.
கிருத கம்பளம்!
ஒ வ்வொரு பௌர்ணமி பூஜையும் சிவ பெருமானுக்கு சிறப்பானது ஆகும். இதில் மாசி மாத பௌர்ணமி பூஜை இறைவனுக் குச் செய்யும் அபிஷேகங்களில் மிகவும் முக்கியமானது.
அபிஷேகம் நடைபெற்று முடிந்ததும் ‘கிருத கம்பளம்’ சாத்துவார்கள். கம்பளி ஒன்றை நெய்யில் நனைத்து சாத்துவதை ‘கிருத கம்பளம்’ என்பர். இந்த வழிபாட்டை தரிசித்தால் தேக ஆரோக்கியம் சிறக்கும் என்று நூல்கள் கூறுகின்றன. ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவார சங்காபிஷேகம் போல கிருத கம்பளம் சாற்று தல் மாசி மாத பூஜையாய் திருவையாற்றில் நடைபெறும்.

Comments