ஞானானந்தம்

‘தெளிவு - குருவின் திருமேனி காண்டல்’
- திருமூலர்
நாம் யார் தெரியுமோ" -
தபோவன தரிசன மண்டபத்தில் தட்சிணாமூர்த்தி போல் அமர்ந்த ஞானானந்த சற்குரு கேட்ட இந்தக் கேள்வி - எல்லோரது செவிகளிலும் விழுந்தது.
பூஜைக்கு மலர்களைத் தொடுத்துக் கொண்டு இருந்த பெண்மணிகளின் விரல்கள் இயக்கத்தை நிறுத்தின. சற்றுத்தள்ளி, உணவு தயாரிக்கும் கைங்கர்யத்தில் இருந்த பணியாளர் கரண்டியை கீழே வைத்தார்.
மண்டப மூலையில் லலிதா நவரத்ன மாலையை ஒருசேர லயத்துடன் பாடிக்கொண்டிருந்த இளம் வித்யார்த்திகள் புத்தகத்தை மடக்கி தூரத்தில் வைத்தார்கள்.
மகனுக்கு வேலை, பெண்ணுக்குக் கல்யாணம், வீடு கட்ட ஆசி, பேத்திக்கு பிள்ளை வரம்... இத்யாதி பிரார்த்தனைகளுடன் சற்குருவை தரிசிக்க வந்தவர்கள் கூட தாங்கள் கோரிக்கைகளை ஜபிப்பதை ஒத்தி வைத்தார்கள்.
இவ்வளவு ஏன், தபோவன தெய்வ சன்னிதிகளின் அர்ச்சகர்கள்கூட சன்னிதியை விட்டு வெளியே வந்து விட்டார்கள்.
குருநாதர் தாம் யார் என்று வெளியிடப் போகிறார்! எல்லோரது செவிகளும் காண்டீபக் குறியுடன் விடைத்துக் காத்திருந்தன, விடைக்காக!
அவர்களது பரபரப்பான எதிர்பார்ப்புக்கு நியாயம் உண்டுதானே! அவர் யார் என்று எவர்தான் முற்றக் கண்டார்? ஒரு சித்தாள் போல அவர் கட்டட வேலைகள் செய்வார். (சித்து ஆள்தானே அவர்) சின்னக் குழந்தைகளுடன் தட்டாமாலை சுற்றி குதூகலிப்பார். அடுத்த நொடி கைவல்ய நவநீதத்தின் உட்பொருளை விளக்குவார். ரிபு கீதையை விவரிப்பார். உருது பேசுவார். சிங்களம், பர்மீஸ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், நேபாளம் என்று சகல பாஷைகளிலும் மாறிமாறி உரையாடுவார்.
மூலிகைத் தைலம் தயாரிப்பதை முகமதிய அன்பர் ஒருவருக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டு, ‘தத்வமஸி’ என்ற பதத்தை வேத விற்பன்னர்களுக்கு இரண்டு மணி நேரம் விளக்குவார். காலி அரிசி டப்பாவில் 200 பேருக்கான அரிசியை வரவழைப்பார். பந்தியில் சாப்பிட உட்கார்ந்த அன்பர்களின் இலையில் இடப்பட்ட சுடுசோறு ஆறுவதற்கு விசிறி கொண்டு ஒரு அடியாரைப் போல வீசுவார்.
இப்படி, அட்டவணைக்கு அடங்காத விளையாடல் புரியும் ஐயனை எந்த வகையில் சேர்த்து, எந்தப் பட்டியலில் இணைப்பது? இன்னார்தான் இவர் என்று எப்படி வரையறுப்பது என்று மனத்தில் குமிழி இட்டு எழும் கேள்விகள் - இதோ இப்போது முடிவுக்கு வருகிறது! வரப்போகிறது.
தான் யார் என்று தானே வெளிப்படுத்தப்போகிறார் என்று - ஆர்வத்துடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் கடைசிப் பந்தைப் பார்க்கும் ரசிகர்களைப் போல், ஆனார்கள் அனைவரும்.
குருநாதர் சொல்லத் தொடங்கினார்:
நாம் ஒரு பலசரக்கு கடைக்காரன்!"
ஹா..." என்று அதிர்வுடன் எல்லோரும் ஒலி எழுப்பினர்.
ஆம்! நாம் ஒரு பலசரக்குக் கடைக்காரர்தான். நம் கடையில் எல்லாம் வைத்திருக்கிறது. வைரம், ரத்னம், வைடூர்யம், பவளம், பிளாட்டினம், வெள்ளி இவையும் இருக்கிறது. உப்பு, புளி, அரிசி, கடுகு, மிளகாய்ப் பொடி இது மாதிரி சரக்கும் இருக்கிறது..." பூடகப் பேச்சு! புதிரான விடுகதை!
சுற்றி மகாமவுனம் நிலவியது. பலரது முகத்தில் குழப்ப ரேகைகள் ஓடின. சிலருக்கு குற்ற உணர்வு படர்ந்தது!
குருநாதர் சிரித்தபடி தொடர்ந்தார்: சரி, சரி.வைத்திருக்கும் ஆத்மீக வைரக்கற்களை, பகவத் அனுபவ ரத்னங்களை யார் வேண்டும் என்று கேட்கிறார்கள், நாம் தரத் தயாராய் இதற்காகவே வந்து காத்துக் கொண்டிருந்தும்..."
பேசியபடி சுற்றும் முற்றும் பார்த்தார் சற்குரு. சிலரது முகங்கள் தொங்கிப் போயிருந்தன! அவர்களை குறிப்பாகப் பார்த்தபடியே தொடர்ந்தார்:
ம்...! எல்லோரும் அரிசியும் புளியும் உப்பும்தான் வேண்டும் என்கிறார்கள்! அவர்கள் என்ன கேட்கிறார்களோ அதைப் பெறுகிறார்கள்!"
ஞானானந்தர் இந்த வாசகத்தைச் சொல்லியபோது, அவர் திருமுகத்தில் ஒரு தாயின் வாஞ்சைமிக்க கவலையும் கருணையும் ஒருசேர விளங்கியது.
தன்னை ‘பலசரக்குக் கடைக்காரன்’ என்று வர்ணித்துக் கொண்ட எளிமை குருநாதனின் கருணையை அல்லவா சித்திரம் போட்டுக் காண்பிக்கிறது?
செட்டியார் எல்லா நல்ல சரக்கும் வைத்திருக்கிறார். வாங்கிக்கொள்ள ஆள் இல்லை!" என்று சிற்சில தருணங்களில் அவர் உதடுகள் பிதுக்கிச் சொல்வதில், ‘கடை விரித்தேன் கொள்வாரில்லை’ என்ற திருவருட்பாவின் அடிநாதம் மின்னுவதை உணரலாம்!
ஞானானந்தர் வழங்குவதற்காகவே வந்தார். நிபந்தனைகள் இல்லாமல் தன் பிரசன்ன நோக்கம் இதுதான் என்பதை உலகுக்கு அவர் உணர்த்திய இன்னும் ஒரு சம்பவம்.
ஏற்காடு.
ஸ்ரீ ஞானானந்த பிரணவ நிலையம்! மத வரப்புகள் இல்லாது, சர்வ மத சமரச ஞான இன்பப் பெருவெளியாக அது விளங்கியது. சொல்லப் போனால், ‘ஆலோலம்’ பாடி பறவைகளை விரட்டி விடாத தினைப்புனம் அது! மாறாக, ‘வருக அனைவரும்! பெறுக அனைத்தும்!’ என்ற அறைகூவல் அங்கு மிருதுவாகக் கேட்கும்!
ஒரு கோடை நாளில் நீதிபதி திரு. பி. ராமகிருஷ்ணன் அவர்கள் குருநாதரை தரிசிக்க வந்திருந்தார். அவர் நேரில் கண்டு பதிவு செய்த சம்பவம் இது!
ஒரு அன்பர் ஞானானந்தரிடம் சொன்னார்: இன்னும் ரொம்ப உள்ளே தள்ளி நிறைய நிலம் இருக்கிறது. ஈ காக்கா நடமாட்டம்கூட கிடையாது. ஏகாந்தமாய் இருக்கும். அங்கு ஸ்வாமி நிலம் வாங்கி நிலையம் அமைத்தால் தியானம், யோகம், தவம் எல்லாம் ஏகாந்தமாக செய்துகொண்டு..." குறுக்கிட்டார் சற்குரு... என்ன! இன்னும் தவமா? இன்னும் யோகமா? இன்னும் தியானமா? ஸ்வாமி எல்லாத்தையும் அநேக காலம் முன்னாலேயே முடிச்சுட்டுதான், கொடுக்கறதுக்காகவே வந்திருக்கு எல்லோருக்கும் - ஆமாம் எல்லோருக்கும்...!"
நிலையத்துக்கு நிலம் வாங்குவது பற்றி பேசியவர் நிலைகுலைந்து போனார். ஸ்வாமி தான் சொல்ல வந்ததைப் புரிந்து கொள்ளவில்லை என்ற தொனியில், இல்லை, மனுஷாள் தொந்தரவு இல்லாமல்..." என்று பூசிமெழுகியபோது, மறுபடியும் ஒரு மென்மையான இடைவெட்டு வெட்டினர் சற்குரு.
தொந்தரவா? மக்களா? நமக்கா?" என்று இளஞ்சிரிப்பு சிரித்தபடி தொடர்ந்து ஸ்வாமி சொன்ன வாசகம் வேதச் சுருக்கம்!
தன்னைத்தானே சுட்டிக் காண்பித்தபடி சற்குரு சொன்னார்: இதோ இந்தச் சீனி மிட்டாயை பொது இடத்தில் - ஆமாம் பொது இடத்தில் வைக்க வேணும்! ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான எறும்புகள் வந்து சாப்பிட தோதான இடத்தில் இந்தச் சீனி மிட்டாய் இருக்க வேண்டாமா?"
ஆம்! அந்தக் கற்கண்டு கிரி எத்தனை ஆயிரம் ஆயிரம் பேருக்கு - தயா அமிழ்தத்தை வழங்கிக் கொண்டே வந்திருக்கிறது! தான் சேகரம் பண்ணிய அத்தனை அமுதத்தையும் துளி பாக்கி வைக்காமல்... கருணா விநியோக யக்ஞம் பண்ணிக் கொண்டே வந்திருக்கிறது! எங்கெல்லாம் நடந்திருக்கிறது! நடந்துகொண்டே வந்திருக்கிறது!
ஆம்! அவர் கிளம்பி நடந்த கதை கொஞ்சம் கொஞ்சம் கிடைத்திருக்கிறது! அது என்ன?
நள்ளிரவு! கர்நாடக மாநிலம், மங்களபுரியில் சிறு ஓட்டு வீட்டில் குடும்பத்தினர் எல்லோரும் அயர்ந்து நித்திரை கொண்டிருந்தார்கள் - கடைக்குட்டி சுப்பிரமணியனைத் தவிர!
தாம் இந்த இடத்தைச் சார்ந்தவன் அல்ல; உண்டு உறங்கி வாழ தான் உடல் எடுக்கவில்லை; எங்கோ போக வேண்டும். எங்கே என்று தெரியவில்லையே என அந்த பாலகன் குமைந்த படி படுத்துக் கிடந்தான். அப்போது, ‘எழு’ என்றது உட்குரல். எழுந்தான். ‘நட’ என்றது உட்குரல். நடந்தான்! வீட்டில் இருந்து அந்தப் பாலகன் கட்டிய துணியோடு வெளியே வந்தான்.
வானத்தில் இருள்! ஆனால், அவன் முகத்திலோ அருள்! விழிகள், அகண்ட வானத்தைப் பார்த்தன!
வேலியும் வரப்பும் போடப்பட முடியாத வானம், பரம் பொருளைப் போல அகண்ட பரிபூரணமாகத் தெரிந்தது. இருளுக்கு கிரணங்களே இல்லை என்று எவர் சொன்னது? இந்த வித்தியாசமான பிள்ளையின் விழிகளுக்கு மட்டும் இருளில் வெளிச்சம் தெரிந்தது.
வானில் யாரோ - அல்லது எதுவோ, நட்சத்திர வளையங்களால் ஆன ஜோதியை சட்டென்று தூக்கிப் பிடித்தார்கள். சுப்பிரமணியனின் விழிகள் அந்த ஜோதியின் கிரணங்களை விரல்கள் போல் கருதி சிக்கெனப் பிடித்துக்கொண்டன! ஜோதி நகரத் தொடங்கியது; இந்தப் பிள்ளையும் கூடவே! (நம்மாழ்வாரை தரிசிக்க மதுர கவியாழ்வாரை ஒரு ஜோதிதானே வழி நடத்தியது!)
கோகுல கிருஷ்ணனின் பஞ்சுப் பாதங்கள் போல இருந்த அந்த பாலகனின் பாதங்களை - தொடாமல் தொட்டு, செவிலித் தாயின் அக்கறையுடன் நகர்த்தத் தொடங்கியது ஜோதி. அடி முதல் எதுவெனக் கடைசிவரை அறிமுகமே செய்து கொள்ளாத சுப்பிரமணிய பாலனின் யாத்திரை ஆரம்பம்.
வழியனுப்ப யாரும் இல்லை! அவன் பத்து வருஷம் வசிக்கும் பாக்கியம் பெற்ற சிறுகுடில் மட்டும் - ஜோதியைப் பிரித்து வழியனுப்பிய அகல் சட்டியின் சோகத்துடன் அவன் நடந்து போவதைப் பார்த்துக் கொண்டிருந்தது.
விண் சுடர்மணி விளக்கு - சுப்பிரமணியனை நடத்திக்கொண்டே போனது. பகல் பொழுதில் எங்காவது படுத்துக் கொண்டு... இரவில் யாத்திரை.
எந்தத் திசையில்? எவருக்காக? ஏன்? இந்தக் கேள்விகள் அந்தப் பிள்ளை மனத்தில் எழவே இல்லை.
ஆனாலும், குடல் அமைந்த உடல் - பசியால் சுருங்கிக் காயத் தொடங்கிய ஓர் இரவில் ஏதாவது உண்ணக் கிடைக்காதா என்று அந்தப் பிள்ளை சுற்றும் முற்றும் பார்த்தது!
எவரும் இல்லை. நடந்தது மேலும்...
மேடு -பள்ளம் - காடு - கரை என்று என்ன நடை நடந்துவிட்டன அந்தச் சின்னக் குட்டிப் பஞ்சுப் பாதங்கள்! வயிறு வலித்தது. பசி.
யாராவது இருக்க மாட்டார்களா? என்று தேடிய அந்த பாலகனுக்கு ஓர் ஆச்சர்யம்! அத்துவானக் காட்டில் ஒரு குடிசை. உள்ளே முட்டை விளக்கு எரிந்து கொண்டிருந்தது. குடிசை வாசலில் போய் நின்றவுடன் பசி மயக்கத்தில் சரிந்து விழப்போன பிள்ளையைச் சட்டென்று தாங்கிப் பிடித்தாள் மங்களகரமான திருவதனமுள்ள ஒரு மூதாட்டி.
ஆதுரத்துடன் முதுகைத் தடவிக் கொடுத்து - பிள்ளைக்குக் கஞ்சி வார்த்தாள்! (பின்னால் லட்சக்கணக்கான பேர்க்கு ‘தட்டாத அன்னதானம்’ செய்த பிள்ளை, கஞ்சியை கன்றுக்குட்டி போல் உறிஞ்சிக் குடிக்கும் அழகை அந்த மூதாட்டி, அர்த்தபுஷ்டியான முறுவலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்!) ‘அம்மே அப்பா’ என்று அலறிய சம்பந்தனுக்கு சீர்காழியில் திருமுலையுண்ணக் கொடுத்த பார்வதியாள் போன்றே முகபாவம்!
கஞ்சி வயிற்றை நிறைத்தது. பசி மறைந்தது. குழந்தை குடிசை மண் தரையில் - சுருண்டு படுத்துக் கொண்டான். நீல நயனங்கள் நித்திரை கொண்டன.
கதிரவன் கதிர்க்கரங்களால் வருடி எழுப்பி விட்டான். பிள்ளை எழுந்தான். குடிசையையும் காணோம். மங்கள சொரூபியான மூதாட்டியையும் காணோம்.
மானசீகமாக அந்த அன்னைக்கு நன்றி சொன்னது, பின்னாளில் ‘அன்னை மண்டபம்’ என்றே ஒரு மண்டபத்தை திருக்கோயிலூர் தபோவனத்தில் அமைத்த அந்தப் பிள்ளை.
இரவு வந்தது. ஜோதி தோன்றி கூட்டிக் கொண்டே போனது. பாண்டுரங்கன் அரசாளும் பண்டரிபுரம் அருகே வந்து நின்று - ‘இதோ வந்துவிட்டது உன் இடம். நான் வருகிறேன். என் வேலை முடிந்தது’ என்று சொல்லாமல் சொல்லி மறைந்தது. அங்கே சந்திரபாகா நதிக்கரையில் இருந்த ஒரு மணல் மேடு. அதில் அமர்ந்தபடி விழிகளை மூடி எதிலோ லயித்துக் கிடந்தது. கதிரவன், இந்த பாலசூர்யனின் விஜயத்தை ரசிக்கும் ஆவலுடன் விகசித்து பிரகாசித்து எழுந்து, சிலையாய்ச் சமைந்த சுப்பிரமணியனை ஆலிங்கனம் பண்ணி எழுப்பி விட்டான்.
சலசல என சலங்கை ஒலி எழுப்பி சந்திரபாகா நதி ஓடிக் கொண்டிருந்தாள். ‘வா குழந்தாய்! என்னுள் குள்ளக் குடைந்து நீராடி என்னை மேலும் புனிதப்படுத்து’ என்று அலைக்கரம் வீசி அழைத்தாள். ஒற்றை வஸ்திரம் அணிந்த குழந்தை தயங்கிய படியே நின்றபோது, தோளில் ஒரு கை ஆதுரத்துடன் பதிந்தது. பார்த்தால் முப்பட்டைத் திருநீறு அணிந்த மூத்த பழம் போல் ஒரு முதியவர்.
ஏன் நிற்கிறாய் குழந்தாய்... போ உனக்கானவர் உள்ளே உனக்காகவே காத்திருக்கிறார். சந்திரபாகாவில் குளித்துவிட்டு, பண்டரிபுர பாண்டுரங்கனை கோயிலுக்குள் போய் பார்" என்றார்.
கோடானு கோடி மக்களை அருளால் குளிப்பாட்டிக் கரையேற்றிவிடப் போகும் சுப்பிரமணியன், குளித்துக் கரையேறினான். தென்றல் தலையைத் துவட்டிவிட்டது. சூர்யன் ஆடையை உலர்த்திவிட்டான். முதியவரைக் காணோம்!
கோயிலை நோக்கி காலடி வைத்தான் சுப்பிரமணியன் - காலடிக் காரரின் காலடியில் அமர்ந்து பாடம் கேட்ட ஆனந்தகிரியின் வழித்தோன்றல் சிவரத்னகிரி ஸ்வாமிகளைத்தான் தரிசிக்கப் போகிறோம் எனத் தெரியாமல்.
பண்டரிநாதன் கோயில் விமானத்தை நிமிர்ந்து பார்த்தான். விமானமும் சுப்பிரமணியனை ரொம்ப விசேஷ பிரியத்துடன் பார்த்தது! அதற்கான காரணம் அறியான், பின்னாளில் ஞானானந்தர் ஆகப்போகும் சுப்பிரமணியன். ஏனெனில், பண்டரிபுர கோயில் விமானத்தின் பெயரே ஞானானந்த விமானம்!

Comments