வெற்றிவேல் அம்மன்

தமிழகத்தின் தென்பகுதியில் தூத்துக்குடிக்கு அருகே அமைந்துள்ள கொற்கை சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியர்களின் துறைமுக நகரமாக இருந்தது. உலகப் பேரழகியான கிளியோபாட்ராவின் கழுத்தில் கிடந்த முத்துமாலையில் இடம் பெற்றிருந்த முத்துக்கள் கொற்கை கடலில் இருந்து எடுக்கப்பட்ட முத்துக்களே என்கிறது வரலாறு.
‘மறப்போர் பாண்டியன் அறத்தின் காக்கும் கொற்கை அம்பெருந்துறை’ என்று அகநானூற்றால் உலகுக்கு அடையாளம் காட்டப்பட்ட கொற்கை, கால மாற்றத்தில் கடல் உள்வாங்கியதால் உருக்குலைந்து போய்விட்டது.
அன்று கடல் இருந்த இடத்தில் இன்று குளம் இருக்கிறது. இந்தக் குளத்தின் நடுவேதான் கண்ணகி அம்மன் கோயில் அமைந்துள்ளது. கோயிலின் தூண்களில் எல்லாம் பாண்டியர்களின் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. கோயிலில் மூலவராக அருள்பாலித்து வரும் அம்மனை பக்தர்கள் ‘கண்ணகி அம்மன்’, ‘வெற்றிச்செல்வி அம்மன்’ என்று அழைக்கின்றனர்.
பாண்டிய மன்னர்களின் வழிவந்த நெடுஞ்செழியன், அவசரப்பட்டு தவறான நீதி வழங்கியதால் கோவலன் கொல்லப்பட்டான். அதனால் சினந்த கண்ணகி, நெடுஞ்செழியனுக்கு சாபம் இட்டதுடன், தன் கற்பு வலிமையால் மதுரையையும் எரித்து அழித்தாள்.
நெடுஞ்செழியனின் வழித்தோன்றலில் வந்த வெற்றிச் செழியன் கொற்கையில் கண்ணகிக்கு கோயில் கட்டி, அங்கு கண்ணகி சிலையை அமைத்து வழிபட்டான் என்கிறது வரலாறு.
அவன் காலத்துக்குப் பின்பு கோயில் திருவிழாவின்போது அம்மனுக்கு ஆயிரக்கணக்கில் எருமை மாடுகள் பலியிடப்பட்டுள்ளன.
வெற்றிகளைத் தந்த காரணத்தினால் கண்ணகியை ‘வெற்றிவேல் அம்மன்’ என அழைத்து வருகின்றனர். கண்ணகியின் மறு அவதாரமாகவே இந்த அம்மன் அருள்பாலித்து வருகிறாள்.
ஆலயத்தின் உள்ளே விநாயகர், வள்ளி - தெய்வானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். வெளிப்பிராகாரத்தில் நந்தீஸ்வரர், பெரியநம்பி, சின்னநம்பி, பேச்சியம்மன், பிரம்மநாயகி, சுடலை, பலவேசக்காரன் ஆகியோர் காட்சியளிக்கின்றனர்.
ஆலயத்தின் வெளியே ஸ்தல விருட்சமான அரசமரமும், தீர்த்தக் கிணறும் எதிரெதிர் மூலையில் அமைந்துள்ளன. அம்மன் கிழக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலித்து வருகிறாள். திருமண வரம், குழந்தை வரம் வேண்டும் பெண்கள் வெற்றிவேல் அம்மனை 21 வாரங்கள் செவ்வரளி மாலையிட்டு, நெய் விளக்கு ஏற்றி வணங்கினால் வேண்டிய வரம் கிட்டும் என்பது ஐதீகம்.
கொற்கை ஊரின் மையப் பகுதியிலுள்ள வயதான வன்னி மரத்துக்கும், வெற்றிவேல் அம்மன் கோயிலுக்கும் தொடர்புண்டு என்று கூறப்படுகிறது. சுமார் 2500 ஆண்டுகள் கடந்த வன்னிமரத்தின் தண்டு பாகம் அரிக்கப்பட்டு குகை போலக் காட்சி அளிக்கிறது. இதன் உள்ளே விநாயகர் உருவம், ஐந்துதலை நாகம் உருவங்கள் மரத்தில் இயற்கையாகவே அமைந்துள்ளன.
இங்கு சுரங்கப் பாதை இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. பாண்டியர் காலத்துக்குப் பின்பு பயன்பாடு இல்லாததால் இந்தச் சுரங்கப்பாதை தூர்ந்துபோய் விட்டது என்கிறார்கள்.
இங்கு புரட்டாசி மாதம் மூன்று நாட்கள் திருவிழா வெகுசிறப்பாக நடத்தப்படுகிறது. திருவிழாவின்போது ‘மதுபொங்குதல்’ நிகழ்வு கோலாகலமாக நடக்கிறது. திருவிழாவின் முதல்நாள் குடத்தில் கலந்து வைக்கப்படும் நவதானியங்களில் இருந்து எடுக்கப்படும் பால் பாதியளவு மற்றொரு குடத்தில் ஊற்றப்படும். இந்தப் பால் சூடு பண்ணாமலேயே, மறுநாள் குடத்திலிருந்து பொங்கி வழியும்.
இப்படி பால் பொங்கி வழிவதே மதுகுடம் பொங்குதலாகும். பால் நன்றாகப் பொங்கி வழிந்தால் அந்த ஆண்டு பருவ மழை தவறாமல் பொழிவதும், மக்கள் நோய்- நொடியின்றி நல்வாழ்வு பெறுவார்கள் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. தைப்பூசம், மாசி, சித்திரை மாத தமிழ் வருடப்பிறப்பு, பங்குனி உத்திரம், பௌர்ணமி நாட்களில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
ஆலயத் துளிகள்...
* கொற்கை சுற்றுவட்டாரத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு வெற்றிச்செல்வி, கண்ணகி என்றும், ஆண் குழந்தைகளுக்கு வெற்றிவேல் என்றும் பெயர் வைப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது.
* குழந்தை வரம் வேண்டி, அரச மரத்தில் தொட்டில் கட்டி வழிபடுவது இங்கும் வழக்கத்தில் உள்ளது.
* வன்னி மரத்தின் அருகே போர் வீரனின் நடுகல் ஒன்றும், முனிவர் ஒருவரின் சிலையும் உள்ளன.
செல்லும் வழி: தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பஸ் நிலையத்தில் இருந்து 3 கிலோமீட்டர். இங்கிருந்து கோயிலுக்குச் செல்ல ஆட்டோ, மினிபஸ் வசதி உள்ளது. தொடர்புக்கு: 82203 90144
தரிசன நேரம்: செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காலை 8.00 முதல் மதியம் 12.30 மணி வரை. மாலையில் நடைதிறப்பதில்லை.

Comments