கடியாலி மஹிஷாசுரமர்த்தினி

கர்நாடக மாநிலம், உடுப்பி என்றாலே நம் நினைவுக்கு வருவது ஸ்ரீகிருஷ்ணர் கோயில்தான். ஆனால், உடுப்பி மாவட்டம் கடியாலி என்னுமிடத்தில் சுமார் 1,200 ஆண்டுகள் மிகப் பழைமை வாய்ந்த, ஸ்ரீமஹிஷாசுரமர்த்தினி ஆலயம் அமைந்துள்ளது. இங்கு அருள்பாலிக்கும் தேவி, வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கிறாள்.
முற்காலத்தில் ‘கடியாலி’ எனும் இவ்விடம் முனிவர்களும், கந்தர்வர்களும் வந்துபோகும் அடர்ந்தக் காடாக இருந்துள்ளது. அப்போது, இளைஞர் ஒருவர் இந்தக் காட்டுப் பாதையில் ஸ்ரீமஹிஷாசுரமர்த்தினியின் திருச்சிலையைத் தோளில் சுமந்து வேறு ஊருக்குச் சென்று கொண்டிருந்தார்.
அசதியாக இருந்ததால், தேவி விக்கிரகத்தை ஒரு குளக்கரையில் வைத்துவிட்டு, அயர்ந்து தூங்கி விட்டார். உறங்கி விழித்த அவர், மீண்டும் பயணத்தைத் தொடர எண்ணி, தேவியின் சிலையைத் தூக்க முயன்றபோது, அவரால் அதை அசைக்கவே முடியவில்லை.
செய்வதறியாது திகைத்து அவ்விளைஞர் நிற்கையில், கண்வ முனிவர் உட்பட, முனிவர்கள் சிலர் அங்கு வந்தனர். நடந்ததை அறிந்த கண்வ மகரிஷி, தேவியின் சான்னித்யம் அங்கு குடிகொண்டிருந்ததை உணர்ந்து, தேவியை அங்கேயே பிரதிஷ்டை செய்து வணங்கினார்.
சிறிய காட்டுக் கோயிலான இதை, பின்னாளில், இப்பகுதியை ஆண்ட மன்னர்கள் திருத்தி விரிவுபடுத்தி அமைத்தனர். பாதாமி சாளுக்கிய மன்னர்களின் கட்டட பாணியில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. ஏழாவது நூற்றாண்டில் எழுப்பப்பட்டதாகக் கருதப் படும் இந்த மஹிஷாசுரமர்த்தினி ஆலயம் மிகப்பழைமையானதாகக் கருதப்படுகிறது. ‘காடு ஹள்ளி’ (காட்டில் உள்ள சிறிய கிராமம்) என்ற பெயரே ‘கடியாலி’ என்று மருவியிருக்கிறது.
ஆலயம் சிறியதாக இருப்பினும் கருவறையில் எழுந்தருளியிருக்கும் தேவியின் விக்கிரக அமைப்பும் சான்னித்யமும் இந்த ஆலயத்துக்கு தனிச்சிறப்பைத் தருகிறது. ஆலயக் கருவறையில் ஸ்ரீமஹிஷாசுரமர்த்தினி ஒரு பீடத்தின் மீது நான்கு கரங்களோடு நின்ற நிலையில் காட்சி தருகிறாள். அரிய வகை கருங்கல்லில் வடிக்கப்பட்ட விக்கிரகம். நான்கு கரங்கள் கொண்ட தேவியின், பின் வலக்கையில் பிரயோக சக்கரமும், இடக்கையில் சங்கும் உள்ளன. முன் வலக்கையில் தூக்கிப் பிடித்த நீளமான திரிசூலத்தின் அடிப்பாகம், எருமை வடிவத்தில், தேவியின் காலடியில் சரணடைந்துள்ள மகிஷாசுரனின் தலையின் மீது அழுந்தியிருக்க, தேவியின் முன் இடக்கை எருமையின் வாலைப் பிடித்து, அதன் பின்பாகத்தை அப்படியே மேலே தூக்குவதுபோல் அமைந்துள்ளது.
அசுரன் மகிஷனை, மிக எளிதாக வதம் செய்து ஒரு கரத்தில் தூக்கும் தேவியின் முகபாவம் வெற்றிப் பெருமிதத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது. தேவியின் இடப்புறம் நாகாபரணத்துடன்கூடிய சிறிய சிவலிங்கமும், வலப்புறம் மூல விக்கிரகத்தைப் போன்றே சிறிய உற்சவ மூர்த்தியும் உள்ளன.
தேவியின் விக்கிரகத்தில் பிற்காலச் சிலைகளில் காணப்படும் ஆபரணங்கள் போன்று அதிகம் வடிக்கப்படவில்லை. சுமார் இரண்டு அடி உயரமுள்ள தேவியின் விக்கிரகம், ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்றும், ஆலயம் பத்தாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
ராமபோஜன் என்ற மன்னன் அமைத்த முக்கியமான நான்கு துர்க்கை ஆலயங்களில் கடியாலி ஸ்ரீமஹிஷா சுரமர்த்தினி ஆலயமும் ஒன்றாக இருக்கலாம் என்பது வல்லுநர்களின் கூற்று.
நவராத்திரி விழா இங்கு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், மாசி மாத பிரம்மோத்சவமும், சித்திரை மாதப் பிறப்பும் இங்கு விசேஷ தினங்கள்.
செல்லும் வழி: உடுப்பி பேருந்து மற்றும் ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ..
தரிசன நேரம்: காலை 5.30 முதல் 1 மணிவரை. மாலை 4 முதல் 9 மணிவரை. வெள்ளிக்கிழமைகளில் இரவு 11.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
தொடர்புக்கு: +91-820 252 1937

Comments