மருத்துவ சாயி

இறைவன் எங்கே இருக்கிறார்? அவர் என்று, எப்பொழுது வருவார்? எனது மனக்குறைகளையும், கோரிக்கைகளையும் எந்த ரூபத்தில் வந்து நிறைவேற்றுவார்’ என்ற கேள்விகள் எழாத மனம் கொண்டவர்களே இருக்க முடியாது. ஆனால், ‘தன்னை நம்பியவர்களை இறைவன் கைவிட்டதும் இல்லை; கைவிடப்போவதும் இல்லை’ என்ற ஆழமான, ஆத்மார்த்தமான நம்பிக்கையை மட்டுமே மனதில் நிறுத்தி, அவனை வணங்கும்பொழுது அவன் நம் துயரை எல்லாம் நிச்சயம் களைவான்" என்றார், ஷீரடி சாய்பாபா நிகழ்த்திய லீலைகளைப் பற்றிய தம் சொற்பொழிவில் ப்ரியா கிஷோர்.
சாயிநாதன் நம்மகிட்ட கேட்பதெல்லாம் இரண்டு விஷயங்களைத்தான்... பொறுமை, நம்பிக்கை. ‘அவன் நிச்சயம் நம்மைக் காத்தருளுவான்’ என்கிற பொறுமையும், ‘அவன் நம்மைக் கைவிடமாட்டான்’ என்கிற நம்பிக்கையும்தான் நமக்கு வேண்டும். ‘நான் இவ்வளவு நாட்களாக, இவ்வளவு ஸ்லோகங்கள் படிக்கிறேனே? இன்னும் நான் நினைச்சது எனக்கு நடக்கவே இல்லையே’ என, பொறுமை இழக்காமல், இறைவனின் திருவருள் மீது நம்பிக்கையை வைத்து ‘எனக்கு வேறு வழியே இல்லையப்பா, நீதான் எனக்கு கதி, உன் சரணமேதான் எனக்கு கதி’ என்று நிற்கும் பக்தர்களை ஒருபோதும் சாயிநாதன் கைவிட்டதே இல்லை.
ஷீரடி சாய்பாபாவை வழிபடுவது என்பது மிக எளிய வழிபாட்டு முறை. சாயி சத்சரித்திர பாராயணத்தைச் செய்யலாம். அந்தப் பாராயணத்தை சொல்பவர்களுக்கும் சரி; கேட்பவர்களும் சரி தனது அருள் என்பது அணையா விளக்காகச் சுடர் விட்டுக் கொண்டே இருக்கும் என்பதை அவரே சொல்கிறார்:
‘என்னுடைய கதைகள், உபதேசங்கள் இவற்றைக் கேட்போருக்கு நான் பணிவிடை செய்வேன். அவர்கள் ஆசைகளையும் பூர்த்தி செய்வேன். என்னுடைய கதைகள் வெறுமனே கேட்கப்பட்டால்கூட அவர்களது அனைத்து வியாதிகளும் குணப்படுத்தப்படும். என்னுடைய பக்தர்களை எக்கணமும் அச்சுறுத்துகின்ற ஆபத்துக்களின் கோரப்பற்களிலிருந்து நான் வெளியே இழுத்துவிடுவேன்’ என்கிறார் பாபா.
இந்தப் பாராயணத்தை ஏழு நாட்களில் முடித்தால் அதற்குப் பெயர் சப்தாகம். வியாழக்கிழமைகளில் இதைப் படிப்பது மிகவும் விசேஷமானது. இப்படி தான் பிரசாதம் செய்யணும் என்பது இல்லை. அரிசி உணவைத் தவிர்த்துவிட வேண்டும். மன சஞ்சலத்தோடு இதைப் படிப்பவர்கள் ஏதாவது ஒரு பக்கத்தை எடுத்துப் பிரிக்கும்பொழுது, அந்தப் புத்தகத்தின் வலப்பக்கத்தில் அவர்களது சஞ்சலத்திற்கான தீர்வை நிச்சயம் கண்டு கொள்ளலாம். இது, கண்கூடாக இன்று வரை நடந்தேறி வருகிறது.
தன் பக்தர்களைக் காக்க, பக்தர்களுக்காக எந்த நேரத்திலும், எந்த ரூபத்திலும் அவர் வருவார். மருத்துவ சாயீயாக வந்த ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம் இது.
ஒரு சாயி பக்தருக்கு வினோதமான ஒரு மன நோய் வந்தது. தான் எங்காவது வெளியில் போனால் தனக்கு விபத்து நேர்ந்து விடும் என்று ஒரு வகை phobia. அதனால், அவர் எங்குமே வெளியே செல்லாமலேயே இருந்தார். எத்தனையோ மனோதத்துவ மருத்துவர்களிடம் எல்லாம் அவரை அவரது பெற்றோர்கள் அழைத்துச் சென்று காட்டினர். எனினும் அந்தக் குறிப்பிட்ட மன நோயிலிருந்து அவரால் மீண்டு வர முடியவில்லை. எத்தனையோ கோயில்களுக்குச் சென்று பூஜைகள் செய்தும் பலன் இல்லை. இப்படிப்பட்ட ஒரு மன நோயின் பிடியில் இருந்ததால், அவருக்குச் சரியான வேலையும் கிடைக்கவில்லை.
அந்த பக்தரின் தாய், தீவிர சாயி பக்தை. ஒரு நாள் அவர் சாயி பாபா படத்துக்கு முன் நின்று கொண்டு, நான் தினமும் உங்களது நாம ஸ்மரணத்தை சொல்லிக் கொண்டு இருக்கிறேன். சத் சரித்திரம் படிக்கிறேன். என் பையனுக்கு இப்படி நேர்ந்து விட்டதே. இதற்குத் தீர்வே கிடையாதா" என மனமுருகிப் பிரார்த்தனை செய்தார். மன நோயால் பாதிக்கப்பட்டவரின் கனவில் அன்று இரவே, அந்தப் பையன் வெகு வேகமாக பைக்கை ஓட்டிக் கொண்டு போவது போலவும், அது விபத்துக்குள்ளாக இருக்கும் தருவாயில், பாபா பைக்கின் முன்னால் அபய ஹஸ்தத்தோடு வந்து நின்று விபத்தைத் தடுத்து விடுவதைப் போலவும் வந்தது. இந்தக் கனவில் வந்தக் காட்சியை அவர் தம் பெற்றோர்களிடம் தெரிவித்தார். அந்த வாரக் கடைசியில், ஷீரடிக்குப் போவோம் என பெற்றோர்க்குத் தோன்றியது.
எங்கேயாவது போக வேண்டும் என்றாலே ‘வேண்டாம் வேண்டாம்’ என பயத்தால் அதுவரை மறுத்த அந்த மகன், ஷீரடிக்கு தானும் வருகிறேன் என்று சொன்னது பெற்றோரை ஆச்சரியப்படுத்தியது. ஷீரடிக்கு போய் விட்டு வந்து, ஒரு நல்ல வேலையிலும் சேர்ந்து விட்ட அந்த மகன், தன் பெற்றோரிடம் தனக்கு ஒரு பைக் வாங்கித் தரும்படி கேட்டபொழுது தான், பாபா தனது மகனின் கனவில் தோன்றி அவனது நோயை அவர் முழுமையாகக் குணப்படுத்தி விட்டார் என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்தது.
நியாயமான, உண்மையான பிரார்த்தனைகளை நிச்சயம் பகவான் நிறைவேற்றி வைப்பார். இந்த வாழ்க்கையில் எதுவுமே நமக்குச் சொந்தம் கிடையாது. இருக்க ஒரு வீடு, உடுக்க உடை, பசிக்கு உணவு இவை இருந்தால் போதுமே.. தேவைக்கு மேல் ஏன் ஆசைப்பட வேண்டும்? நல்லெண்ணங்களை மனதில் வளர்த்துக் கொண்டு நாமும் நன்றாக இருக்க வேண்டும். நம்மோடு, இவ்வுலகில் இருப்பவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையை ஷீரடி சாயீநாதனின் பாதத்தில் சமர்ப்பித்து எல்லா நலன்களையும் பெறுவோமாக."

Comments