அட்சய திருதியை திருத்தலங்கள்!

அ ட்சய திருதியை திருநாளை சிறப்பாகக் கொண்டாடும் திருத்தலங்களும் உண்டு.
காசி, விளாங்குளம் (நெல்லை- அம்பாசமுத்திரம் அருகில் உள்ளது), திருச்சோற்றுத்துறை (திருவையாறில் இருந்து சுமார் 5 கி.மீ தூரம்), திருப்பரங்குன்றம், முழையூர் ஆகிய இந்த ஐந்து திருத்தலங்களை ‘அட்சய திருதியை திருத் தலங்கள்’ என்று அழைப்பர்.
இந்தத் தலங்களுள் மிக விசேஷமாகக் கருதப்படுவது முழையூர். ஜமதக்னி முனிவர், இந்த பிரபஞ்சம் போற்றும் பரசுராமரை தவப் புதல்வனாகப் பெற்றிட தவம் செய்ததுடன், பரசுராமருக்கு நல்வரங்களும், மறை ஞானமும் பெற்றுத் தந்த அற்புதத் திருத்தலம் இது. கும்பகோணம் - பட்டீஸ்வரம் அருகேயுள்ள இந்தத் தலத்தில் ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீ பரசுநாதர் ஆலயம் அமைந்துள் ளது. பண்டைய யுகங்களில் பிரமாண்டமான தேர்கள் உலா வர, மகாமகம் போல அட்சய திருதியை திருவிழா கொண் டாடப்பட்ட சிவத் தலம் இது. தற்போது ஆரவாரமின்றி, எளிமையாகத் திகழ்கிறது.
மேலும், திருதியை திதி தேவ தைகள் இறைவனை வழிபட்டு எதையும் விருத்தி செய்யும் சக்தியைப் பெற்ற அற்புதத் தலம் இது. இங்கு உமையவள், கொஞ்சும் கோலத்துடன் ஞானாம்பிகையாக அருள்பாலிக்கிறாள்.
பிரம்மாவின் அகங்காரத்தைக் களைந்த திருத்தலமான இங்கு அமைந்துள்ள லிங்கம், ‘பரசு- பீஜாட்சர’ லிங்க வடிவைச் சார்ந் தது. காணுதற்கரிய லிங்க வடிவம் இது. அட்சய திருதியை அன்று இந்த சிவலிங்கத்துக்கு மாதுளை முத்துகளால் காப்பு இட்டு அலங்கரித்து அபிஷேக- ஆராதனைகளுடன் வணங்கி வந்தால் ஐஸ்வரியங்கள் விருத்தியாகும். மேலும் இந்த நாளில் குபேர பூஜை நடத்துவதும், இங்கு சிறப்பாகக் கருதப்படுகிறது.
சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், உணவு செரிமானம் இன்மை போன்றவற்றுக்கு தக்க நிவர்த்தியைப் பெற்றுக் கொள்ள சிறப்பான தலம் இது. தரிசாகப் பயனின்றி கிடக்கும் நிலம், முடங்கிக் கிடக்கும் பணம், தோட்டம், வீடு ஆகியவை விருத்தியடைய இந்தத் திருத்தலம் வந்து இறைவனை வழிபட்டு வந்தால் தக்க பலன் கிட்டும் என்பது கண்கூடு. அட்சய திருதியை தவிர, மாதந்தோறும் வரும் வளர்பிறை, தேய்பிறை திருதியை திதிகளிலும் இங்குள்ள ஈஸ்வரனுக்கு வெண் பொங்கல் நிவேதித்து வழிபட்டு பலன் பெறலாம்.

Comments