நந்தியின் நாயகன்!

நடராஜரின் திருநடனம்! சிவ கணங்கள், ஆளுக்கொரு இசைக் கருவியை எடுத்துக் கொண்டு பரமனின் நடனத் துக்கு தக்கபடி வாசித்தனர். ஓடோடி வந்த தேவர்களும், கயிலாய வாசலில் நின்று, நடராஜரின் நடனத்தைக் கண்டு ரசித்தனர்.

அனைவரும் சிவ நடனத்தில் லயித்திருக்க, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு காவலனாக இருந்த நந்திதேவர், தன்னையும் தன் நிலையையும் மறந்தார்; 'சிவனாருக்கும் எனக்குமான உறவு வேறு யாருக்கு உண்டு?' என்பது போல், மத்தளத்தை எடுத்துக் கொண்டு, நடனத்துக்குத் தகுந்தாற் போல் வாசித்தார். கூடியிருந்தோர் வியந்தனர். இவ்வகையில், சிவனாரின் வாகனராக இருந்த நந்திதேவர், நடராஜரின் நடனத்துக்கு லயம் சேர்ப்பவராக, வாத்தியம் வாசிப்பவராக மாறினார். இதே காட்சியை நாம் வெகு சில தலங்களில் மட்டுமே காண முடியும்.

ஆம்! சிவாலயங்களில் பொதுவாக நடராஜர் சந்நிதியில் அவருக்கு அருகில் மாணிக்கவாசகர், வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் முதலானோர் இருப்பர். ஆனால், நடராஜருக்கு அருகில் அமர்ந்து கொண்டு குடமுழாவை வாசித்தபடி காட்சி தரும் நந்திதேவரைக் காண்பது அரிது! திருச்சி காந்தி மார்க்கெட் அருகில், (டவுன் ஸ்டேஷன் அருகில்) கீழப்புலிவார்டு சாலையில் உள்ள ஸ்ரீபூலோகநாதர் கோயிலில், இந்தத் திருக்காட்சியை தரிசிக்கலாம்.

இங்கே... நடராஜர் விக்கிரகம் கொள்ளை அழகு! திருவாதிரை நாளில், சிறப்பு அபிஷேகம் திருவீதியுலா என நடைபெறும் வேளையில், காந்தி மார்க்கெட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரள்வார்கள். நந்திதேவருடன் காட்சி தரும் நடராஜரை தரிசித்து வழிபட்டால், கல்வி-கேள்வியில் சிறந்து விளங்கலாம்; வீடு - மனை வாங்கும் யோகம் உண்டாகும் என்கின்றனர் பக்தர்கள்.

இந்த ஆலயத்தில், வருடத்துக்கு எட்டு நாட்களில், வாஸ்து யாகமும் பூஜையும் சிறப்புற நடைபெறுகிறது.

கோயில் தொடர்புக்கு 0431-2711360

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியிலிருந்து படவேடு செல்லும் சாலையில் சுமார் 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது காமக்கூர் திருத்தலம்! ஸ்ரீமுருகப்பெருமான், சந்திரன், அர்ஜுனன் மற்றும் ரதிதேவி முதலானோர் சிவபெருமானை வழிபட்ட தலம் இது! ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர பிரதிஷ்டை செய்த தலங்களுள் இதுவும் ஒன்றாம்! முக்கியமாக... சிவனார் தாண்டவமாடிய தலங்களில் ஒன்று என்பதால், இந்தத் தலத்தை உப விடங்கத் தலம் என்கிறார்கள்!

சிவனார் ஆடிய 108 தாண்டவங்களில் முதன்மையான சதுர தாண்டவக் கோலத்தில் இங்கே காட்சி தரும் ஸ்ரீநடராஜ பெருமானை பார்த்துக் கொண்டே இருக்கலாம்! பரமன், இங்கே சதுர தாண்டவம் ஆடியதாக விவரிக்கிறது காமாத்தூர் புராணம்! (காமாத்தூரே, தற்போது காமக்கூர் என அழைக்கப்படுகிறது!) கால்கள் இரண்டையும் மடக்கி, முன்னும் பின்னுமாக சதுர வடிவில் வைத்தபடி ஆடும் அரிய கோலத்தில் காட்சி தரும் சதுர தாண்டவ நடராஜரை தரிசித்து வணங்குவது சிறப்பான பலனைத் தருமாம்!

நடராஜருக்கு உகந்த ஆறு அபிஷேக காலங்களில் வணங்குவது சிறப்பு. முக்கியமாக, திருவாதிரை நாளில், சதுர தாண்டவ நடராஜரை வணங்கினால், பெரும் வல்லமையும் பேராற்றலும் பெறுவர்; எவரையும் வெல்லும் திறன் அதிகரிக்கும்; கலைகளில் ஆர்வமும் திறனும் ஏற்படும் என்பர். சதுர தாண்டவ மூர்த்தியை தரிசித்து, சகல வல்லமையும் பெறுவோம்!

கோயில் தொடர்புக்கு 94439 63477

Comments