கருணை வள்ளல் கிரிஜாத்மஜர்!

மூஷிகோத்தமமாருஹ்ய தேவாஸுரமஹாஹவே!

யோத்துகாமம் மஹாவீர்யம் வந்தேஹம் கணநாயகம்!

(தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் ஏற்பட்ட யுத்தத்தில் சிறந்த எலியில் ஏறி போர் புரிய விரும்பினவரும், சிறந்த பராக்ரமத்தை உடையவரும், பூத கணங்களுக்குத் தலைவருமான ஸ்ரீமஹாகணபதியை நான் நமஸ்கரிக்கின்றேன்).

ஒருமுறை அசுரனான சிந்தூரனைக் காணவந்த நாரதர், “சிந்தூரா! உனக்குச் சமமான வீரதீர பராக்கிரமசாலிகள் இம்மூவுலகிலும் இல்லை!” என்று ஆரம்பித்து, தொடர்ந்தார். “ஆனால், கைலாயத்தில் உமாதேவிக்கு தலையற்ற ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதற்கு முன்பே கஜமுகாசுரனை வதம் செய்த பரமசிவன், அவனது யானைத் தலையை மட்டும் பத்திரப்படுத்தி வைத்திருந்தார். பார்வதியின் வருத்தம் போக, யானைத் தலையை வரவழைத்து கழுத்தில் பொருத்தியவுடன், தலை ஒட்டிக்கொண்டுவிட்டது! இந்த அதிசயக் குழந்தையே கஜானனர் என்று பெயர் பெற்று விளங்குகிறது. உன்னதமான ஞானமும், பெரும் பராக்கிரமமும் கொண்டிருக்கிறது. அதற்கு சமதையாக யாரும் எங்கேயும் கிடையாது என்று சொல்கிறார்கள்” என்று நாரதர் கூற, சிந்தூரன் மிரண்டான். அக்குழந்தையே தனக்கு பரமசத்ருவாக அமையலாம் என்று நினைத்தான். அதே சமயம் நாரதர் கைலாயம் சென்று உமாதேவியை சந்தித்து சிந்தூரன் விஷயத்தை விவரித்தார்.

ஒரு பாலகனோடு போர் தொடுப்பது தனக்கு இழுக்கு என்று எண்ணிய சிந்தூரன், க்ஷேமன், குசலன் எனும் இரு அசுரர்களை கஜானனரிடம் அனுப்பினான் அவர்கள் இருவரும் தங்களுக்குள் சண்டை வளர்த்துக்கொண்டே கணேசர் மார்பில் வந்து வீழ்ந்தனர்! இதனால் உடல் முழுவதும் தாங்கமுடியாத வலி, ஏற்பட்டு, துடிதுடித்து இறந்தனர்!

அடுத்து குரூராசுரனை அனுப்பி வைத்தான். குழந்தையாகிய கஜானனரை மஞ்சத்தோடு வானிடைத் தூக்கிச் சென்றான் குரூராசுரன். குழந்தை கஜானனர் அவ்வசுரனின் இரு காதுகளை பிடித்து தொங்கிக் கொண்டே அவன் மார்பில் தன்னிரு கால்களால் ஓங்கி உதைத்தார்! அவன் மாய்ந்துபோனான். சிந்தூரன் அசரவில்லை. பாலாசுரன், வியோமாசுரன், என அடுத்தடுத்து அனுப்பினான். எல்லோரும் விளக்கில் பட்ட விட்டில்போல மாண்டு போனார்கள்.

அதனால், தானே ஒரு படையுடன் சென்றான். விநாயகரிடம் “பாலகனே! அதி அற்புதமான அழகைப் பெற்றிருக்கும் உன்னைக் கொல்ல மனம் வரவில்லை. குழந்தையான நீ, உன் அன்னையிடம் பால் அருந்திவிட்டு முற்றத்தில் போய் விளையாடு” என்று ஏளனமாகப் பேசினான்.

“சிந்தூரா! என் சக்தியை உணராமல் ஏளனமாக நினைக்கிறாய். இப்போது பார்!” என்று கூறிய கஜானனர் விஸ்வரூபம் எடுத்தார். மூவுலகங்களும் தமக்குள் அடங்கும்படியாக காட்சி தந்தார். அதைக் கண்ட சிந்தூரன் அஞ்சி நடுங்கினான்!

பயந்து நின்ற சிந்தூரனை, கணேசர் தனது நீண்ட தும்பிக்கையால் வாறியெடுத்து நசுக்கி தமது மத்தகத்தில் பூசிக்கொண்டார். மத்தகத்தில் சாந்தாக மாறிவிட்ட அவன் உயிர், அவருடைய திருவடிகளை அடைந்து பேரானந்த நிலைபெற்றது. அதன்பின் மீண்டும் பாலகனாகக் காட்சி அளித்தார் விநாயகர். அனைவரும் விநாயக மூர்த்தியை பக்தியோடு பூஜித்தார்கள். இவ்வாறு பலராலும் போற்றப்பட்டவரே கஜானனர். தன்னை வந்து வணங்கியோரின் விருப்பத்துக்கிணங்க அங்கேயே சிலாரூபமாக மாறினார். இச்சிலைக் கொண்ட திருத்தலம் ‘லேன்யாத்ரி’ என்று அழைக்கப்படுகிறது.

வேறுவிதமான கதையும் புராணங்களில் சொல்லப்படுகிறது.

விநாயகரைத் தன் மகனாகப் பெற, அன்னை பார்வதி லேன்யாத்ரி குகையில் தவம் இருந்தார். இறுதியில் அவள் எதிரே தோன்றிய கணநாதர், அவளுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதாக வாக்களித்தார். ஒருநாள் நீராடும்முன், ஈஸ்வரி தன் உடலில் மிதமிஞ்சி படிந்திருந்த புழுதியை சுரண்டி எடுத்து அதனுடன் குளத்து மண், எண்ணெய் முதலியவைகளைக் கலந்து தனக்கு தரிசனம் ஈந்த கணபதி உருவை வெகு அழகாக சமைத்தாள். அதன்பின் புனித நீராடி அவ்வூருவுக்கு பூசனைப் புரிந்தாள். பூஜை முடிந்த கையோடு அவ்வுருவம் உயிர்பெற்றது.

“அன்னையே! தங்கள் ஆவலைப் பூர்த்தி செய்யவே இவ்வாறு அவதரித்துள்ளேன்” என்று கூறிய மோதகப்ரியர், தன் தாயாரை வலம் வந்து வணங்கினார். கஜமுகர் இவ்வாறு அவதரித்த நாள் ஆவணி (பாத்ரபதம்) மாதம் சுக்கிலபக்ஷம் சதுர்த்தி திதி. ஒவ்வொரு ஆண்டும் அன்றுதான் விநாயக சதுர்த்தி!

லேன்யாத்ரி மலைகளிலும், குகைகளிலும் சுமார் பதினைந்து ஆண்டுகள் வளர்ந்த கணேஷின் தன் அன்னை பார்வதி தேவிக்கு மகிழ்ச்சியை அளித்து வந்ததால், கிரிஜாத்மஜர் எனும் நாமம் பெற்றார். அன்னைக்கு கிரிஜா என்ற பெயர் உண்டு. ஆத்மஜ என்றால் மகன் என்று பொருள். எனவே கிரிஜாத்மஜர் (பார்வதி மகனார்) எனும் பெயரடைந்தார். இந்த பாலபருவத்தில்தான், முன் கதையில் கூறப்பட்ட அசுரர்களையும், அவர்களது தலைவனான சிந்தூரனையும் மாய்த்தது. பிறகு, இந்த லேன்யாத்ரி பர்வதத்தில், புடைச்சிற்பமாக ஐக்கியமாகி விட்டார் என்கிறார்கள்.

*** குகடி எனும் நதியின் வடமேற்குக் கரையில் தென்படும் ‘லேன்யாத்ரி’ தலத்தை ஜுர்னாப்பூர், லேகாண்டரு வதம் என்றெல்லாம் புராணங்கள் புகழ்கின்றன.

மலை மீது தென்படும் குகை கோயிலை அடைய 307 படிகள் ஏற வேண்டும். மலை சற்று செங்குத்தாக இருப்பதால் படிகள் ஏறுவது சிலருக்கு கடினம். அவர்களுக்காக மலையடி வாரத்தில் பல்லாக்கு, டோலி வசதிகள் உள்ளன. உச்சியில் தென்படும் 18 பௌத்த குகைகளில் எட்டாவது குகையில்தான் இறைவன் கிரிஜாத் மஜர் எழுந்தருளியுள்ளார். பெரும் பாறையினுள் குடையப்பட்ட இத்திருக் கோயில் தெற்கு நோக்கி உள்ளது. தூண்கள் அற்ற சபாமண்டபம் இக்குகையினுள் உள்ளது. இம்மண்டபம் 53 அடி நீளமும், 51 அடி அகலமும், 7 அடி உயரமும் கொண்டது. ஆழ்நிலை தியானத்துக்கென்றே இச்சபாமண்டபத்தில் 18 சிறு அறைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவைகளின் மையத்தில் கிரிஜாத்மஜர் வீற்றிருக்கிறார். இங்கு தென்படும் ஆறு தூண்களில் பசுவும், யானையும் செதுக்கப்பட்டுள்ளன.

கிரிஜாத்மஜர் சிலை கிழக்கு நோக்கி உள்ளது. புடைசிற்பமாக உள்ளதால் இவரை வலம் வருவதற்கில்லை. அஷ்ட விநாயகர்களில் இவர் தனிப்பட்டவர். அதாவது இவரது முகம் இடப்புறம் திரும்பியுள்ளதால், அவரது வலது கண்ணைத்தான் தரிசிக்க முடியும். ஒரு காலத்தில் இவ்வுருவம், கவசத்தோடு காட்சி அளித்ததாம். நாளாவட்டத்தில் அக்கவசம் பழுதாகிவிடவே, சிலையின் கலைநயத்தைக் கண்டுகளிக்கிறோம். ஆகம சாஸ்திரப்படி அமையாத இக்கோயிலில் கிரிஜாத்மஜர் திருமேனியை எவரும் தீண்டி, தழுவி வழிபடலாம்.

அனுதினமும் பஞ்சாமிர்த பூஜை நடைபெறும் இவ்வாலயத்தில் பாத்ர பதம், மாகமாதங்களில் வரும் சுக்கில சதுர்த்தி அன்று பெரும் விழா நடைபெற்று வருகிறது. குகையை விட்டு வெளியேறி நான்கு புறமும் நோக்கினால், அழகிய நதியையும் அதை ஒட்டியுள்ள ஜுன்னார் ஊரின் பாங்கும் நம் மனத்தை வசீகரிக்கின்றன. திராட்சை, தக்காளி, வெள்ளரிக்காய் மற்றும் கரும்பு முதலியவை லேனாத்ரியில் சாகுபடி செய்யப்படுகின்றன. நிசப்தமின்றி, அமைதி நிலவும் இடம் நாடி ஆழ்ந்த தியானம், ஜபம் செய்ய விரும்பினால், லேனாத்ரி கிரிஜாத்மஜ ஆலயம் மிகச் சிறந்தது.

லேன்யாத்ரி

புனே-நாஸிக் நெடுஞ்சாலையில், புனேயிலிருந்து 94 கி.மீ. தொலைவில் உள்ளது லேன்யாத்ரி. ஜுன்னாரிலிருந்து ரிக்‌ஷாக்கள், ஜீப்புகள், பேருந்துகள் மூலம் 5 கி.மீ. தொலைவில் உள்ள லேன்யாத்ரியை எளிதாக அடையலாம்.

விகடர்

அசுர குரு சுக்கிராச்சாரியரிடம் தீட்சை பெற்ற காமாசுரன் பரமசிவனை நோக்கி தவமிருந்தான். பெரும் வரங்களைப் பெற்றான். அதன் விளைவாக, தேவலோகம் உள்பட திசைகள் அனைத்தையும் வென்றான். இதனால் தருமமும், நற்கர்மமும் அடியோடு அழிந்து அதர்மம் தலைவிரித்தாடியது! தேவர்களும், முனிவர்களும் கணபதியை சரணடைந்து தம் கவலையை கூறினர். விரைவில் அவர்களது இன்னலைப் போக்குவதாக அபயம் அளித்து மறைந்தார் விநாயகர்.

அதன்படி, மயில்வாகனத்தில் ஆரோகணித்து விகடர் எனும் திருநாமம் ஏற்ற விநாயகர், காமாசுரன் இருப்பிடத்தை அடைந்தார். போர் தொடங்கியது. அவனின் புதல்வர்கள் இருவரும், போரின் முதல் நாளே மடிந்துவிட்டனர். அப்போது விகடர், “டேய் மூடனே! என் தந்தை தந்த வரத்தால் நீ இறுமாப்பு அடைந்து, அனைவரையும் அல்லல்படுத்துகிறாய்! இது நல்லதல்ல. உயிரோடு இருக்க விரும்பினால், தேவர்களைத் தீண்டாதே. இல்லையெனில், நீ மரணிக்க நேரிடும். ஜாக்கிரதை!” என்று காமாசுரனை எச்சரித்தார்.


அதை அலட்சியம் செய்த காமாசுரன், தனது கதாயுதத்தால் விகடரைத் தாக்கினான். பகவானின் கரம் பட்ட கதாயுதம், அதிவீரியத்துடன் திரும்பி வந்து காமசுரனையே வீழ்த்தியது! அவன் மூர்ச்சித்து வீழ்ந்தான். ஆயுதமின்றியே தன்னை விழச் செய்த விகடர், ஆயுதம் ஏந்தி போர் புரிந்தால் என்ன நேரிடும் என்று புரிந்தது அவனுக்கு. தன்னை மன்னிக்க மன்றாடினான். விநாயகரும் அவனை மன்னித்து அருளினார்

Comments