தட்சன் வேள்வி செய்த திராக்ஷாராமா!

திராக்ஷாராமா பிரபலமான சிவத்தலம். இங்குதான் சிவலிங்கம் ஐந்து பாகங்களாக உடைந்து, வெவ்வேறு இடங்களில் சிதறியது. அவை திராக்ஷாராமா, குமாரராமா, க்ஷீரராமா, பீமாராமா, அமராராமா ஆகும். அந்த ஐந்து துண்டுகளில் முதல் துண்டு விழுந்த இடம் திராக்ஷாராமா!

ஏன் சிவலிங்கம் உடைக்கப்பட்டது? யார் உடைத்தார்கள்?

தாராகாசுரன் தீவிர சிவபக்தன். அவன் மிகவும் கடுமையான தவத்தை மேற்கொண்டான். அதை ஏற்ற சிவபெருமான் அவன் முன்னே தோன்றினார். உடனே, தாரகாசுரன், “பெருமானே தாங்களை ஒரு சிவலிங்க ஸ்வரூபமாக எனது தொண்டையில் வைத்துக்கொள்ள வரமளிக்க வேண்டும்” என்றான். “அப்படியே ஆகட்டும்” என்றார் பெருமான்.

தாரகாசுரன் தனது தொண்டையில் சிவலிங்கத்தை வைத்துக்கொண்டான். “அதை ஒருவரும் உடைக்க முடியாது. தனக்கு மரணமும் நேராது” என்று கர்வமாக இருந்தான். அதனால் சாதுக்களையும், முனிவர்களையும் துன்பப்படுத்த ஆரம்பித்தான்.

துன்புற்ற எல்லோரும் திருமாலை நோக்கிச் சென்றனர். திருமாலோ, “பொறுமையாயிருங்கள். சிவபிரானுக்கும் பார்வதிக்கும் பிறக்கும் குழந்தைதான் அந்த அசுரனை அழிப்பான்” என்று கூறினார்.

அதன்படி, கார்த்திகேயன் பிறந்தான்; அதனால், உற்சாகமடைந்த அனைவரும் தாரகாசுரனை அழிக்க முற்பட்டனர்; முடியவில்லை. பயந்து பின்வாங்கி விட்டனர்.

கார்த்திகேயன் சிவபிரானிடம், “தந்தையே, என்னை மன்னியுங்கள்; தாரகாசுரனின் தொண்டையில் உள்ள சிவலிங்கத்தை எனது வேலாயுதத்தால் உடைக்கப்போகிறேன். தங்கள் உத்தரவு வேண்டும்” என்று பிரார்த்தித்தார். சிவபிரானும் கார்த்திகேயனின் வேண்டுகோளை ஏற்று, போரிடச் சொன்னார். அப்போதுதான், தொண்டையில் இருந்த சிவலிங்கம் வேலாயுதத்தால் உடைந்தது. 5 துண்டுகளாக சிதறி வெவ்வேறு இடங்களில் விழுந்தது. அதன் முதல் துண்டு விழுந்த இடம்தான் திராக்ஷாராமா.

இந்தத் தலத்தில் மாணிக்கம்பாள் என்ற பெயரில் அருள்பாலிக்கிறாள் அம்பிகை. இரண்டு கட்டு அல்லது மாடி போன்ற அமைப்புடையது ஆலயம். சிவலிங்கம் சுமார் 10 அடி உயரம். கீழே சன்னிதியில் முழு உருவத்தையும் காணமுடியாது; பாதிலிங்கம்தான் தெரியும். உள்ளே பக்கவாட்டில் மேலே செல்ல படிகள் உண்டு. அதன்மீது ஏறிச் சென்றால், அங்கு சிவலிங்கத்தின் மேற்பகுதியைக் காண்கிறோம். இங்குதான் அர்ச்சனையும் கற்பூர ஆரத்தியும்!

கோயிலின் வெளிப்பிரகாரத்துக்கு நான்கு வாயில்கள் உள்ளன. கிழக்கு வாசலில் கோகுலம்மா, மேற்கு திசையில் நூக்காம்பிகா, வடக்கு பக்கம் மூதாம்பிகை, தெற்கு வாசல் கட்டாம்பிகை என்று தேவியரை நாற்புறமும் தரிசிக்கிறோம்.

தெற்கு வாசல்தான் பிரதான வழி. இதன் வழியே சன்னிதிக்கு நேராக வரமுடியும்.

இந்தக் கோயில் சுவர்களில் முன் காலத்தில் வைரம், வைடூரியம், விலை மதிப்பற்ற கற்கள் பதிக்கப்பட்டிருந்தனவாம். அந்தக் கற்கள் சூறையாடப்பட்ட அடையாளத்தை இன்றும் சுவர்களில் பார்க்க முடிகிறது.

இங்கு நடராஜர், வாமனர், விஸ்வநாதர், நர்த்தன கணபதி, அன்னபூரணி, துர்கா என்று பல சன்னிதிகள். கோயிலுக்கு அருகில் ‘சப்த கோதாவிரி குண்டம்’ என்ற திருக்குளம்.

கோயிலின் ‘மினியேச்சர்’ வடிவத்தை பிராகாரத்தில் காண்கிறோம்.

9ஆம் நூற்றாண்டில் கிழக்கு சாளுக்கிய மன்னர் பீமா என்பவரால் கட்டப்பட்டது இத்திருக்கோயில். கிழக்கு, மேற்கு சாளுக்கியர்கள், சோழர்கள், கலிங்க மன்னர்கள் என்று பலர் பணி செய்துள்ளனர்.

தினசரி அதிகாலையில் சூரிய கிரணங்கள் சிவலிங்கம் மீது படுகிறது. தினந்தோறும் சூரிய பூஜை என்கிறார்கள்.

இங்கு நவராத்திரி, கார்த்திகை மாதம் விழாக்கள், பீஷ்ம ஏகாதசி, மகா சிவ ராத்திரி விழாக்கள் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.

தவத்தை ஏற்று, வரம் தந்த சிவ பிரானும், தாரகன் தவறிழைக்கும் போது தண்டனை பெறுவதை தடுக்கவில்லை. தன் லிங்கத் திருமேனி துகளாவதையும் பொருட்படுத்தவில்லை.


‘தெரிந்தே தவறிழைப்பவன் பக்தன் என்றாலும், பரமன் அந்தப் பக்தனைப் பாதுகாப்பதில்லை’ என்று அறிவுறுத்துகிறது திராஷாராமம்! இத்தலத்தில் யாத்திரிகர்கள் தங்குவதற்கு விடுதிகளும், உணவுக்கான ஹோட்டல்களும் உண்டு.*

த்ராக்ஷ ஆராமா என்றும் தக்ஷ அராமா என்றும் அழைக்கப்படுகிறது இந்தத் தலம். ஆந்திர மாநிலம் காக்கிநாடாவிலிருந்து 28 கி.மீ. ராஜமுந்திரியிலிருந்து 25 கி.மீ.

சிவபெருமானின் மாமனாரான தக்ஷபிரஜாபதி இங்குதான் யாகம் செய்ததாகக் கூறுகின்றனர். இது அவரது ஊர். அதனால்தான் இதற்கு திராக்ஷாராமா என்று பெயர்.



Comments