கங்காதீஸ்வரர்

கங்கை’ என்றாலே சிவபிரான்தான் நினைவுக்கு வருவார். தம் தலையில் ஏற்றிருப்பதாலும், காசி கங்கைக் கரையில் விஸ்வநாதராகக் குடி கொண்டதாலும், அவருடைய நினைவு எழுவது இயல்பு. அவர், கங்காதீஸ்வரர் என்னும் பெயருடன் ஆலயம் கண்டுள்ள தலம் குட்டஹல்லி. இது கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள பகுதி. குகைக் கோயிலான இதை, ‘கவிபுரம் சிவன் கோயில்’ என்றே அழைக்கின்றனர். ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இக்குகைக் கோயில், பிற்காலத்தில் ‘கெம்ப கௌடா’ உட்பட பலரால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இக்குகைக் கோயிலுக்குள் சிவபெருமான் லிங்க வடிவில் ‘கங்காதீஸ்வரர்’ எனும் திருப்பெயரில் காட்சி தருகிறார். இச்சிவலிங்கத்தின் மீது வருடத்தில் இருமுறை சூரியக் கதிர்கள் விழுகின்றன. இந்நிகழ்வு சூரிய பகவான், ஈசனை வழிபடுவதாகக் கருதப்படுகிறது. நவம்பர் 26ம் தேதி முதல், டிசம்பர் 2ம் தேதி வரையிலும், பின்பு, மகர சங்கராந்தியின்போது, ஜனவரி 13ம் தேதியிலிருந்து 16ம் தேதி வரையிலும் இந்த அதிசய சூரிய வழிபாட்டினைக் காணலாம்.
இதில் விசேஷம் என்னவென்றால், வெளியிலுள்ள நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே சூரியக் கதிர்கள் பாய்ந்து, சிவலிங்கத்தின் மீது விழுவதுதான். ஆக, மகர சங்கராந்தியின்போது, இக்குகைக் கோயிலில் இச்சூரிய வழிபாட்டு தரிசனத்தைக் காண, பெரும் பக்தர் கூட்டம் கூடுகிறது. மாலை 4.55 மணி முதல் 5.15 வரை இச்சூரியக் கதிர்கள் இறைவன் மீது விழுவது தரிசிக்க வேண்டிய காட்சி.
இக்கோயிலில் அருள்பாலிக்கும் அக்னி மூர்த்தி இரு தலைகள், ஏழு கைகள், மூன்று கால்கள் என்ற அமைப்புடன் வேதத்தில் குறிப்பிட்டுள்ளதுபோல் அமைந்திருப்பது விசேஷம். இவரை தரிசித்து, வேண்டுபவர்களுக்கு கண் சம்பந்தமான நோய்கள் அகன்று விடுகிறதாம்.
திருக்கோயில் பிரதான நுழைவாயிலின் இடதுபுறம் உள்ள சக்தி கணபதி 12 கைகளுடன் காட்சியளிக்கிறார். இவரைத் தரிசித்தால் அதிர்ஷ்டம் தேடி வரும் என்பது நம்பிக்கை. பெங்களூரில் சிவன் கோயில்கள் மிகவும் குறைவு. அதிலும் இக்கோயில் பழைமையான நினைவுச் சின்னமாகக் கருதப்படுகிறது. சிவராத்திரியின்போது பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இக்கோயிலில் இரண்டு வட்ட வடிவ டிஸ்குகள் உயர்த்தி நிறுவப்பட்டுள்ளன. இதனைச் ‘சூரிய, சந்திர டிஸ்க்குள்’ என அழைக்கின்றனர். கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் மீது சூரிய கதிர்கள் விழுவதை உணர்த்த இவை அமைக்கப்பட்டுள்ளதா அல்லது வேறு ஏதாவது காரணங்கள் உள்ளனவா எனக் கேட்டால், அதுபற்றி இங்கு யாருக்கும் பதில் கூறத் தெரியவில்லை. பெங்களூர் வந்தால், அவசியம் கண்டு தரிசிக்க வேண்டிய வித்தியாசமான கோயில் இது.
செல்லும் வழி: பெங்களுரூ கே.ஆர். மார்க்கெட்டிலிருந்து 3 கி. மீ.. பஸ் வசதி உண்டு.

Comments