நாகதோஷம் தீர்க்கும் ஸ்ரீசர்ப்ப நடராஜர்!

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்... என்று இறைவனின் ஐந்து தொழில்களையும் உலகுக்கு உணர்த்தும் அற்புத சிவரூபம் ஸ்ரீநடராஜ மூர்த்தம். இதில், பெருமானின் திருவடியில்... அஞ்ஞான ரூபமாக முயலகன்தானே வீழ்ந்து கிடப்பான்? ஆனால் ஒரு தலத்தில், நடனநாயகனின் திருவடியில் முயலகனுக்கு பதில் நாகம்! அது எந்தத் திருத்தலம்?!



திருச்சி- குணசீலம் சாலையில் நொச்சியத்தை அடுத்து உள்ளது திருவாசி. சிவனார், மண்ணை பொன்னாக்கி சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு அருளிய இந்தத் தலத்தின் அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் ஆலயத்தில்தான்... திருவடியில் சர்ப்பத்துடன், தனிச் சந்நிதியில் அருள்கிறார் ஸ்ரீநடராஜர்.

கொல்லிமலை வளவன் என்ற அரசனின் மகளுக்கு தீராத வயிற்றுவலி. என்ன மருத்துவம் செய்தும் குணமாகவில்லை. பெரிதும் வருந்திய மன்னன், மகளை திருவாசிக்கு அழைத்து வந்து, 'நீயே பார்த்துக்கொள்' என்று இறைவனிடமே ஒப்படைத்துச் சென்றான். தென்னாடுடைய இறைவன், அந்தப் பெண்ணின் நோயை பாம்பாக மாற்றி தனது திருவடியில் போட்டு மிதித்ததாக தல புராணம் சொல்கிறது.

இன்றும், இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீசர்ப்ப நடராஜரை வழிபட... சர்ப்ப தோஷம், தீராத வயிற்றுவலி, மாதவிடாய் பிரச்னைகள், காய்ச்சல், குழந்தைகள் இரவில் வாய் உளறுவது ஆகிய பாதிப்புகளுக்கு நிவாரணம் கிடைக்கும் என்கிறார்கள்.



நோய் தீர பிரார்த்திப்பவர்கள், வாரந்தோறும் செவ்வாய் வெள்ளி என்று மட்டும் இல்லாமல், எல்லா நாட்களிலும் இங்கே வந்து வணங்கலாம். 9 அல்லது 11 வாரம் தொடர்ந்து வந்து வழிபட்டு பிரார்த்தனை நிறைவேறியதும் ஸ்வாமிக்கு அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்கின்றனர். மாவிளக்கு ஏற்றி வேண்டிக் கொள்ளும் பக்தர்களும் உண்டு.

திருவாதிரைத் திருநாள் இங்கே சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. அன்று, வீட்டில் களி படைத்து ஸ்ரீநடராஜ மூர்த்தியை வழிபடுவதுடன், திருவாசி இறைவனையும் தரிசித்து வழிபட்டால், நல்லதே நடக்கும்.

ஆலயத் தொடர்புக்கு மோகன் குருக்கள் 0431-2908109 / 98656 64870

கரூர் அருகில் உள்ளது புகழிமலை வேலாயுதம்பாளையம். இங்கு உள்ள ஸ்ரீபால சுப்ரமணிய சுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழா விசேஷமாக நடைபெறும். மலை அடிவாரத்தில், ஸ்ரீநடராஜருக்கும் சிவகாமி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும். பிறகு தம்பதி சமேதராக கிரிவலம் வருவர். இந்த வேளையில், ஸ்ரீநடராஜரை தரிசித்தால், திருமண பாக்கியம் கிட்டும்.


--------------------------------------------------------------------------------

தாண்டவ தீபாராதனை!



நடராஜருக்கு உரிய பஞ்ச சபைகளில் திருக்குற்றாலம் சித்திரசபையும் ஒன்று! திருக்குற்றாலநாதர் திருக்கோயிலுக்கு சற்று அருகிலேயே தனிக்கோயில் கொண்டு காட்சி தருகிறார் சித்திரசபை நடராஜர். இங்கே... திருவாதிரை நாளில், தாண்டவ தீபாராதனை வெகு பிரசித்தம்.

நடராஜர் நாட்டியமாடினால் எப்படி இருக்குமோ, அதேபோல் தீபத்தட்டினை மேலும் கீழுமாக, குறுக்கும் நெடுக்குமாக ஆட்டியபடி நடராஜருக்கு தீபாராதனை காட்டுவார்கள்! ஜோதி சொரூபமான சிவனார், தானே அக்னிப் பிழம்பாக தாண்டவமாடி, உலகை இயக்குவதை உணர்த்துவதற்காக, இந்த தாண்டவ தீபாராதனை வைபவம் என்கின்றனர்!


--------------------------------------------------------------------------------

பரிசலில் பவனிவரும் நடராஷர்!

மார்கழி திருவாதிரைத் திருநாளில், ஸ்ரீநடராஜ பெருமான் திருவீதியுலா செல்வார் என்பது தெரியும். அவர் பரிசலில் ஏறி ஆற்றில் பவனி வரும் ஆலயம் தெரியுமா? ஈரோடு அருகில் உள்ள காங்கயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோயிலில்தான் பரிசலில் பவனி வரும் வைபவம் நடைபெறுகிறது.

காவிரியாற்றின் நடுவே தானாகவே தோன்றிய பாறை மீது எழுந்தருளியுள்ளார் சிவனார். இதனால் இவருக்கு நட்டாற்றீஸ்வரர் எனும் திருநாமம் உண்டானதாம்! பொதிகைக்குச் சென்ற அகத்திய முனிவருக்கு சிவ பெருமான் காட்சி தந்த தலமாம் இது!

திருவாதிரை நாளில், ஸ்ரீநடராஜரும் ஸ்ரீசிவகாமியம்மை யும் பரிசலில் எழுந்தருள்வர்; இன்னொரு பரிசலில் மேள-தாளங்கள் இசைக்க... ஆற்றிலேயே கோயிலைச் சுற்றி வலம் வருவது கண்கொள்ளாக் காட்சி!


--------------------------------------------------------------------------------

பஞ்சநதன நடராஜர்


திருச்சி சமயபுரத்துக்கு அருகில் உள்ளது ஊட்டத்தூர் திருத்தலம். இங்கேயுள்ள ஸ்ரீசுத்தரத்தி னேஸ்வரர் கோயிலில், 'பஞ்சநதனம்' எனப்படும் அரிய கல்லில் வடிக்கப்பட்ட நடராஜரை தரிசிக்கலாம்.

சிறுநீரகப் பிரச்னையால் அவதிப்படுவோர், இவருக்கு வெட்டிவேர் மாலை சார்த்தி, அதை தண்ணீ ரில் ஊற வைத்து அந்த தீர்த்தத்தை அருந்தினால், விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை!

திருவாதிரை நாளில், இங்கேயுள்ள ஸ்ரீநடராஜ பெருமானை தரிசித்தால், ஏழேழு பிறவியிலும் செய்த பாவங்கள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம்!


--------------------------------------------------------------------------------

தீர்த்தப் பிரசாதம்

சென்னை திருவள்ளூர் அருகில், திருவாலங்காட்டில் உள்ளது ஸ்ரீவடாரண் யேஸ்வரர் கோயில். நடராஜ பெருமானுக்கு உரிய பஞ்ச சபைகளில் இது முதலாவது தலம். இந்த சபை... ரத்தின சபை; ஆகவே ஸ்வாமிக்கு ரத்ன சபாபதி எனும் திருநாமம்! சிவதாண்டவத்தை காரைக்கால் அம்மையார் தினமும் காணும் பேறு பெற்ற தலமும் இதுதான்!

நடராஜர் சந்நிதியில் தீர்த்தப் பிரசாதம் தருவது ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்று. மேலும், இந்திய தேசத்தின் வரைபடம் போல் நடராஜரின் திருவுருவம் அமைந்திருப்பதும் சிறப்பு என்கின்றனர்

Comments