காற்று தத்துவம்!

ஒரு ஊரில் ஒரு பணக்காரன் இருந்தான். பணத்தினால் பெறக்கூடிய எல்லா சுக - சௌகரியங்களும் அவனுக்கு இருந்தும் மகிழ்ச்சியின்றி இருந்தான். நிம்மதியையும் சந்தோஷத்தையும் தேடி, ஒரு ஞானியிடம் வந்தான்.

அவரிடம் தன் குறையைச் சொன்னான். ஏராளமான செல்வம் படைத்த நீங்கள் எதை வேண்டுமானாலும் வாங்கலாம்; எங்கு வேண்டுமானாலும் போகலாம். அப்படியிருக்க என்ன பிரச்னை?" என்று ஞானி கேட்டார்.

எனக்கு, உடனடியாக மகிழ்ச்சி தேவை. அதை வாங்க முடியுமா?" என்றான் செல்வந்தன்.

ஞானி அவனை, கால்பந்து விளையாட்டு பார்க்க அழைத்துச் சென்றார். மைதானத்தை அடைந்து பந்தயத்தைக் கவனிக்க ஆரம்பித்தனர். இரு அணிகளும் உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்தனர்.

ஞானி, எவ்வளவு நன்றாக விளையாடுகிறார்கள்! ஒருவருக்கொருவர் சளைக்காமல் வெற்றி ஒன்றையே லட்சியமாகக் கொண்டு விளையாடுவதைப் பார்க்க ஆனந்தமாக இருக்கிறது" என்றார்.

ஆனால், பணக்காரன் கண்களிலோ பந்து உதைபட்டு இங்கும் அங்கும் அலைக்கழிக்கப் படுவதுதான் விழுந்தது. அவன் ஞானியிடம் சொன்னான்: இந்தப் பந்தைப் போன்றதுதான் என் நிலையும்... வருமான வரிக்காரர்கள், தொழிலாளிகள், பிள்ளைகள் என்று நாலா பக்கமும் இடிதான்!"

சரி, இது வேண்டாம்! வேறு இடத்துக்குப் போகலாம்" என்று ஞானி ஒரு சங்கீத கச்சேரிக்கு அவனை அழைத்துபோனார். அங்கு ஒரு புல்லாங்குழல் வித்துவான் ஆனந்தமாக இசைமழை பொழிந்து கொண்டிருந்தார். அவர்கள் அமைதியாக இசையை ரசித்து மகிழ்ந்தனர்.

வழியில் ஞானி கேட்டார்: பந்துக்கும் குழலுக்கும் என்ன வேற்றுமை?"

இதென்ன கேள்வி? ஒன்று இசைக்கருவி, மற்றொன்று விளையாட்டுச் சாதனம்!" என்றான் தனவான்.

ஞானி விளக்கினார்: இவை இரண்டுக்கும் தேவைப்படுவது காற்று. பந்து, தான் வாங்கிய காற்றைத் தனக்குள்ளேயே வைத்துக் கொள்கிறது. அதனால்தான் அது உதைபடுகிறது.

புல்லாங்குழல், உள்வாங்கிய காற்றை தகுந்த இடத்தில், தக்க அளவில் வெளியே விட்டுவிடுகிறது. அதனால், அற்புதமான இசை உருவாகிறது. இப்போது புரிகிறதா?" என்று கேட்டார் ஞானி.

பணத்தைத் தன்னிடமே வைத்துக் கொள்வதால் நிறைவு கிடைக்காது. அதைப் பாத்திரமறிந்து, தேவையறிந்து வினியோகிப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி, நிம்மதி கிடைக்கும் என்று தெளிவடைந்தான் செல்வந்தன்.


கடவுள் என்ன செய்வார்?

ஒரு ஊரில் உள்ள கோயில் சுவாமி சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த நகைகள் காணாமல் போயின. ஆலயக் காப்பாளர், என்ன கடவுள் நீ? உன் நகையையே உன்னால் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லையே... நீ எப்படி உலகத்தைக் காப்பாய்?" என்று புலம்பி அழுதார்.

அப்போது அங்கே வந்த ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னார்: நகைகள் உனக்குத் தான் உயர்வானவையே தவிர, கடவுளுக்கு அல்ல.

ஒரு பக்தன் தந்தபோது ஏற்றுக்கொண்ட தெய்வம், இன்னொருவன் எடுத்துக் கொண்டபோது விட்டுக் கொடுத்துவிட்டது. உயர்வாக நினைக்கும் நீதான் காப்பாற்றி இருக்க வேண்டுமே தவிர, எதையும் பெரிதாக எண்ணாத பரம்பொருள் அல்ல!"

Comments