லிங்க பைரவி

அருள்பெருக்கான அம்பிகையின் வடிவங்களில் ‘பைரவி’ திருக்கோலமும் ஒன்று. ‘பீரு’ என்கிற வேர்ச் சொல்லில் இருந்து தோன்றிய சொல் பைரவி. பீரு என்றால் பயம். பிழை செய்பவர்களுக்கு பயந்தருபவளாக, அச்சமூட்டும் வடிவில் வெளிப்படுபவள் பைரவி. இவளை ‘திரிபுரா’ என்றும் குறிப்பிடுகின்றன தந்திர சாஸ்திர நூல்கள்.‘பிரம்மா, விஷ்ணு, மகேசன் ஆகிய மூவராலும் பூஜிக்கப்பட்டாள். அதனால், திரிபுரா என்று தேவதைகளால் போற்றப்பட்டவள்’ என்கிறது சித்தேஸ்வரி தந்திரம்.

‘சரஸ்வதி, லட்சுமி, காளி ஆகியோர் எவளுக்கு சரீரமாய் இருக்கிறார்களோ, அவளே திரிபுரா எனப் போற்றப்படுகிறாள்’ என்கிறது வாராஹி தந்திரம்.

‘மூன்று வேதங்களின் முதல் எழுத்தைச் சேர்த்தால் உருவாகின்ற ‘ஐம்’ என்கிற வாக்பவ பீஜத்தை முன்னுடையது இவளுக்குரிய மந்திரம். அதனாலும், திரிபுரா என்று புகழப்படுகிறாள்’ என்கிறார்கள் பெரியோர்கள். மந்திர சாஸ்திர நூலான சாரதா திலகம், ‘மும்மூர்த்திகளையும் சிருஷ்டி செய்வதாலும், முன்பே இருப்பதாலும், மூன்று வேதங்களின் வடிவில் திகழ்வதாலும், மூவுலகங்களும் அழிந்த பின்பும் அவற்றைப் படைத்தளிப்பதாலும் இவள் திரிபுரா எனப்படுகிறாள்’ என்று விவரிக்கிறது.

பைரவியை வழிபடுபவர்கள் இணையற்ற கவியாற்றல் கொண்டவளாகவும், மூவுலகிலும் புகழ் பெற்றவளாகவும் விளங்குவான் என்றும் பலஸ்ருதி தெரிவிக்கிறது. இவளை, பைரவரின் சக்தி என்று குறிப்பிடுகின்றன புராணங்கள்.

‘அந்தகாசுர வதத்தின் போது, சிவபிரானின் அம்சமாக வெளிப்பட்டவர்கள் பைரவர்கள். அஷ்டாஷ்ட பைரவர்கள் என எட்டின் மடங்காகப் பெருகிய அந்த பைரவர்களிடம், ஆகமங்களையும் தந்திரங்களையும் வெளியிடுமாறு பணித்தார் சிவபிரான். அப்போது உமையவளை, தேவியின் அம்சமான பைரவிகளாக சிருஷ்டித்து அவர்களின் சக்தியாகத் திகழச் செய்தார் என்றும் புராணங்கள் விவரிக்கின்றன. ஆணவம் தலைக்கேறிய அந்தகாசுரன் அடக்கப்பட்ட தலம் திருக்கோவலூர். இங்கே வீரட்டநாதர் என்ற பெயருடன் சிவபிரானும், சிவானந்தவல்லியாக அம்பிகையும் அருள்பாலிக்கிறார்கள். அட்ட வீரட்டத் தலங்களில் இதுவும் ஒன்று. ‘தேவி சப்தசதி’ இந்த பைரவியின் சிறப்பை விவரிக்கிறது.

உத்யத்பானு சஹஸ்ர காந்தி மருணக்ஷௌமாம்

சிரோமாலினீம்

ரக்தாலிப்த பயோதராம் ஜபவடீம் வித்யாம் அபீதிம்வராம் I

ஹஸ்தாப்ஜைர் தததீம் திரிநேத்ர விலஸத் வக்த்ராரவிந்த

ஸ்ரீயம்

தேவி பாலஹிமாம் சு ரத்னமகுடாம் வந்தேர

விந்தஸ்திதாம் II

உதிக்கும் ஆயிரம் சூரியர்களின் ஒளி கொண்டவளாகவும், சிவப்புப் பட்டு ஆடை, முண்டமாலை ஆகியவற்றைத் தரித்தவளாகவும், புஸ்தகம், ஜபமாலை ஆகியவற்றை மேலிரு கரங்களிலும், வரத அபயம் கீழிரு கரமாகக் கொண்டவளும், முக்கண்கள் ஒளிரும் திருமுகத்தினளும், பிறைநிலா பொலியும் சிரத்தில் ரத்னகீரிடம் தரித்தவளும், தாமரை மலரில் அமர்ந்திருப்பவளுமான பைரவியைத் தியானிக்கிறேன் என்பது இதன் பொருள்.

புகழ்பெற்ற ஜகந்நாதர் ஆலயம் அமைந்துள்ள ‘புரி’யில் உள்ள ‘விமலா மந்திர்’ எனப்படுவது பைரவி ஆலயமே! ‘புருஷோத்தம கே்ஷத்திரத்தில் உள்ள சக்திக்கு விமலா என்று பெயர்’ என்கிறது பிரம்ம யாமள தந்திரம்.

நேபாளத்தில் உள்ள பாக்மதி நதிக்கரையில் உள்ளது பைரவியின் சக்திபீடம். இங்கே சதி தேவியின் இடது காது விழுந்ததாகப் புராணம். ஆவேசமாய் வெளிப்படும்போது, இவள் கழுதை வாகனத்திலும் தோன்றுவாள். புலித்தோலை அணிந்திருப்பாள். திரிசூலம், பரசு, வஜ்ரம் போன்ற ஆயுதங்களைக் கொண்டிருப்பவள் என்றும் நூல்கள் விவரிக்கின்றன.

தசமஹா வித்யா தேவியரில், ஐந்தாவது மகாவித்யாவாகப் போற்றப்படுபவள் ஸ்ரீபைரவி. காளி, தாரா, ஸ்ரீவித்யா, புவனேஸ்வரி, சின்னமஸ்தா, தூமாவதி, பகளாமுகி, மாதங்கி, கமலாத்மிகா ஆகியோர் மற்ற மகா வித்யாக்கள்.

பைரவியின் பல்வேறு வடிவங்கள் மற்றும் அவற்றுக்குரிய மந்திரங்கள், மந்திர சாஸ்திர நூல்களில் கூறப்பட்டுள்ளன. ஸம்பத்ப்ரதா, சைதன்ய பைரவி, அகோரபைரவி, மகா பைரவி, லலிதா பைரவி, ரக்த நேத்ர பைரவி, ஷட்கூடா பைரவி, மிருத ஸஞ்ஜுவனீ பைரவி... என்று பெருகுகின்றன பைரவியின் திருநாமங்கள்.

பைரவியின் அபூர்வமான வடிவம் ஒன்று ‘லிங்க பைரவி’ என்ற பெயரில், தமிழகத்தில் சேலம் சாமி நாயக்கன்பட்டியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. சுமார் எட்டு அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த வடிவை, பக்தர்கள் தாங்களே பூஜித்து வணங்குகிறார்கள்.

பைரவியை வழிபடுவதற்கான எண்ணமும், அவள் மீதான தியானமும் அவளுடைய கருணையால்தான் வசப்பட வேண்டும். அதனால்தான், ‘எவளை திரிபுரா என அறிகிறோமோ, எவளை காமேஸ்வரி என தியானிக்கிறோமா, அந்த ‘க்லின்னா’ என்ற பைரவி, எங்களை அவள் மீதான ஞானத்திலும் தியானத்திலும் தூண்டட்டும்’ என்கிறது சாரதா திலகம்.

பெரிய துதிகள் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. எளியதான தேவியின் காயத்ரி மந்திரத்தைச் சொல்லி அவளைத் துதிப்போம். நம்முடைய தேடல்கள் வசப்படும்; அச்சங்கள் அகலும்.

ஓம் த்ரிபுராயை ச வித்மஹே

பைரவ்யை ச தீமஹி

தன்னோ தேவீ ப்ரசோதயாத் (மந்திர மஹார்ணவம்)



Comments