எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்?

பொதுவாகவே எல்லா நாட்களிலும் எல்லோருக்கும் ஏதாவது ஒரு செயலைச் செய்யவேண்டிய அவசியம் நிச்சயம் இருக்கும்.
அதேசமயம் எந்த தினத்தில் எதைச் செய்யலாம் என்பதைத் தெரிந்துகொண்டு செயல்படுத்தினால் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்கின்றன ஜோதிட சாஸ்திரங்கள்!
எந்தக் கிழமை, என்ன செய்யலாம்? இதோ...

ஞாயிற்றுக்கிழமை: சுபகாரியத் தொடக்கம், ஹோமங்கள், யாத்திரை புறப்படுதல், பதவி ஏற்றல், சிகிச்சை மேற்கொள்ளல், விதை விதைத்தல் கிரகப்ரவேசம், வாகனங்கள் வாங்குதல், சூரியன் அல்லது அனுமன் வழிபாடு செய்து தானமளித்தல் செய்யலாம்.

திங்கட்கிழமை: வர்த்தக ஆரம்பம், திருமணம், புராணங்கள் படித்தல், தானிய சேமிப்பு, யாகங்கள், கிணறு வெட்டுதல், மாங்கல்யத்திற்குப் பொன் உருக்குதல், கோயிலுக்குத் திருப்பணி தொடங்குதல், சிவனை வணங்கி அன்னதானம் செய்தல் ஆகியன செய்யலாம்.

செவ்வாய்கிழமை: போருக்கான ஏற்பாடுகள் செய்தல், நெருப்பு சார்ந்த பணிகளைத் தொடங்கிடல், வாகனங்களுக்கு பூஜையிடல், அஸ்திரவித்தைகள் பழகுதல், முருகப்பெருமானை வணங்கி ஏழைகளின் திருமணத்துக்கு உதவிடல் ஆகியவை செய்யலாம்.

புதன் கிழமை: திருமாங்கல்யம் செய்தல், ஹோமசாந்தி செய்தல் மருந்து உண்ண ஆரம்பித்தல், நீதி, தர்மம் பரிபாலித்தல், கல்வி, கலை கற்கத் தொடங்குதல், புதிய வாகனத்தில் பயணம் செய்தல், பெருமாளை வணங்கி ஆடை தானம் அளித்தல் செய்யலாம்.

வியாழக்கிழமை: கடவுள் படங்கள், சிலைகள் வாங்குதல், பிதிஷ்டை செய்தல், சுபகாரியங்கள் செய்தல், குழந்தைகளுக்கு பெயர் சூட்டல், தியானம் பழகத் தொடங்கல், போர்வெல்-கிணறு போடுதல், வேதம் கற்றிடத் தொடங்குதல், தட்சிணாமூர்த்தியை வணங்கி அன்னதானம் வழங்குதல், அறிஞர்கள் உரை கேட்டல், மகான்களை தரிசித்தல் ஆகியன செய்யலாம்.

வெள்ளிக்கிழமை: விவாகம், சுமங்கலி பூஜைகள், கிரகப்பிரவேசம், குழந்தைகளுக்கு சோறு ஊட்டல், தர்ம ஸ்தாபனங்கள் ஆரம்பித்தல், குழந்தையைத் தொட்டிலில் இடுதல், வளைகாப்பு நடத்துதல், காதுகுத்துதல், மகாலட்சுமியை வணங்கி மங்களப் பொருடகளை தானமளித்தல் ஆகியன செய்யலாம்.

சனிக்கிழமை: பருத்தி விதைத்தல், இரும்பு சார்ந்த பணிகளைத் தொடங்குதல், தீட்சை வாங்குதல், வளர்ப்புப் பிராணிகள் வாங்குதல், இயந்திரங்கள் தொடர்பான பணிகளைச் செய்தல், சனிபகவானை ஆராதித்து மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுதல் ஆகியவற்றைச் செய்யலாம்.


மகாபாரதத்தில் தங்களுக்குப் பிடித்த கதாபாத்திரம் யார்? ஏன்?

கர்ணன்! தாய் அறியாமல், தந்தை பெயர் தெரியாமல் தேரோட்டியின் மகனாக வளர்ந்த கர்ணன், பாண்டவர்களின் மூத்த சகோதரன். மாவீரன் அர்ஜுனனை விஞ்சிய வில்வித்தை நிபுணன்.
தருமபுத்திரருக்கு மூத்தவன் என்பதனால் அரியணையில் அமரவும் பட்டம் சூட்டிக் கொள்ளவும் தகுதி பெற்றவன்.
ஆனால் கிருஷ்ணனின் சூழ்ச்சியால் எல்லா வகையிலும் அவன் வஞ்சிக்கப்பட்டான்.
"ஆஹா! கர்ணனைக் கொன்றேன்' என்று அர்ஜுனன் இறுமாப்படைந்த போது கிருஷ்ணன் சொல்கிறார். "நீயா கர்ணனை கொன்றாய்? உன்னால் அது முடியுமா? ஏற்கெனவே நாலைந்து பேர் அவனைக் கொன்று விட்டார்கள். என்னால் அனுப்பப்பட்ட இந்திரன், கர்ணனின் கவச குண்டலத்தை யாசகமாகப் பெற்றார்.
உன் தாய் குந்திதேவி உன்னைக் காக்கும் பொருட்டு உன் மீது ஒரு தடவைக்கு மேல் நாகாஸ்திரத்தை எய்தாமலிக்க அவனிடம் சத்தியம் வாங்கிக் கொண்டாள்.
கர்ணன் உன் மீது நாகஸ்திரத்தை எய்தபோது தேர் சக்கரத்தைக் கீழே அழுத்தி அஸ்திரம் உன் தலையை துண்டிக்காமல் நான் காப்பாற்றினேன். இத்தனை பேர் அவனை வஞ்சகமாக சாகடித்த பின்னர் கர்ணனை நான் கொன்றேன் என்கிறாயே.... இவ்வளவும் நிகழ்ந்திருக்கவில்லை என்றால் உன்னால் கர்ணனைக் கொன்றிருக்க முடியுமா? செத்த பாம்பை அடித்துவிட்டு நான் கொன்றேன், நான் கொன்றேன் என்று கூற உனக்கு வெட்கமாக இல்லையா?' என்று கேட்கிறார் கண்ணன்.
கண்ணனுக்கும் கர்ணனுக்கும் ஒரு எழுத்துதான் வித்தியாசம். பிறந்ததிலிருந்து சகலவிதத்திலும் வஞ்சிக்கப்பட்டவன் கர்ணன். துரியோதனன் மட்டும் நண்பனாகக் கரம் நீட்டியிருக்காதபட்சத்தில் மகாபாரதத்தில் கர்ணன் என்ற கதாபாத்திரமே காணாமல் போயிருக்கும்!


முன்வினை, மறுபிறவியில் நம்பிக்கை உண்டா?

உண்டு..உண்டு.. உண்டு ஐயா! வினைப் பயன்களே நாம் அனுபவிக்கும் துன்பங்களும், துயரங்களும் தான்! முன் வினைதான் ஊழ்வினை! அதுதான் கர்மா எனப்படுகிறதும் கூட முன்வினைகளின் கர்மத்திலிருந்து யாரும் தப்பித்து விட முடியாது பயந்து ஓடிப்போய் விட முடியாது. எவ்வித கஷ்டமானாலும் ஒப்புக் கொண்டு அமைதியாக அனுபவித்துத் தீர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை. இல்லாவிடில் ஜன்ம ஜன்மமாய் தொடரக்கூடியவை, முன்வினை எனப்படும் இக்கர்மவினைகள்.

தானங்கள் அனைத்திலும் சிறந்தது எது?

அன்னதானம் தான் என அனைத்து மறை நூல்களும் கூறுகின்றன. பசித்த வயிற்றுக்கு சோறிடுவது என்பது கோயில் கட்டுவதற்கு சமம். அன்னதானம் ஒன்றே மிகச் சிறந்த தானம் என்பதை ஷீரடி சாயிபாபா தன் சத்சரிதம் என்ற புத்தகத்தில் வலியுறுத்தி கூறியுள்ளார்.

சித்தர்கள் இந்தக் காலத்திலும் இருக்கிறார்கள்?

அந்தக் காலத்தில் எதுவெல்லாம் இருந்ததோ அதுவெல்லாம் இந்தக் காலத்திலும் இருக்கிறது. அதே வானம், அதே சூரியன், அதே சந்திரன், அதே நட்சத்திரங்கள், அதே கோபம், அதே வஞ்சம், அதே சூது, அதே களவு... என்று எதிலும் மாற்றமில்லை.
திருவள்ளுவர் கள்ளுண்ணாமை பற்றி எழுதியிருக்கிறார். ஆகவே அப்போதும் கள் இருந்தது.
பிறன்மனை நோக்கிய ராவணன் இருந்த போதே வசிஷ்டரும் விஸ்வாமித்திரரும் இருந்திருக்கிறார்கள். மந்திரை கூனியும், கைகேயியும் இருந்த கட்டத்தில் - ராமன், லட்சுமணன், பரத, சத்ருக்னனும் இருந்திருக்கிறார்கள்.
திருதராஷ்டிரன், சகுனி, துரியோதனன் இருந்தபோதே ஆச்சாரியர்கள் துரோணர், பீஷ்மர் போன்ற மகாத்மாக்களும் இருந்தனர். அவ்வளவு ஏன், கோட்சே இருந்தபோதே மகாத்மா காந்தியும் இருந்தார் எல்லவா?
இப்போதும், கோட்சேவும், மகாத்மாக்களும் இருக்கிறார்கள். மந்திரை கூனியும், கைகேயிகளும் - ராம லட்சுமண பரதர்களும் இருக்கிறார்கள். சகுனி, துரியோதனர்களும், துரோண, பீஷ்மர்களும் இருக்கிறார்கள்.
என்ன - அந்தக் காலம் போன்ற உடை, நடை, பாவனைகளில் இருக்க மாட்டார்கள். அவ்வளவுதான் வித்தியாசம். அதுபோல்தான் சித்தர்களும் இருக்கிறார்கள். நீங்கள் நினைப்பது பால் அழுக்கு உடம்பு, சடைமுடி என்றிருக்க மாட்டார்கள். பாண்டங்கள்தான் மாறுகின்றனவே தவிர உட்பொருள் ஒன்றுதான்.

பஞ்சாட்ச மந்திரமான "நமசிவாய' என்பதையே எழுத்துக்களை இடம் மாற்றி மாற்றிச் சொன்னால் பல்வேறு சித்திகள் கிடைக்கும் என்கிறார்களே அது நிஜமா?

நிஜமாக இருக்கிறபட்சத்தில் என்ன செய்யப் போகிறீர்கள்? உங்களுக்கு வேண்டியது என்ன? சித்திகளா, சிவனின் அனுக்கிரகமா? எதிர்பார்த்து செய்கின்ற எந்த விஷயத்திற்கு பலனில்லை. கிட்டுமா - கிட்டாதா, நிஜமா - பொய்யா என்று ஆராய்ந்து பார்ப்பதல்ல பக்தி. சந்தேகம் பக்தியின் சாரமன்று.
கள்ளம் கபடமற்ற வெள்ளø உள்ளம் வேண்டும். குழந்தை மனம் வேண்டும். கழுத்துச் சங்கிலியைக் களவாடப் போகிறவனிடம்கூட குழந்தை தாவும். சுடுகின்ற நெருப்பில் கையை நீட்டும். அதுபோல் இறைவன் நம்மை என்ன செய்யப் போகிறான் என்பதே தெரியாமல் அவனை நோக்கித் தாவ வேண்டும். எது வேண்டுமானாலும் செய்து கொள் அப்பா என்று விட்டுவிட வேண்டும். அவனிடம் நல்ல எண்ணம், நல்ல செய்கை, நல்ல பேச்சு என நல்லதையே கொடு எனக் கை நீட்ட வேண்டும். அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் இவற்றை என்னிடமிருந்து நீக்கு என்று இறைஞ்ச வேண்டும். தன்னலமற்ற எதிர்பார்ப்புகள் அற்ற பக்திக்கு இறைவன் மனமிரங்கி ஓடோடி வருவான். கேட்டது, கேட்காதது, அனைத்தையும் தருவான். சித்திகள் உட்பட! உங்களால் அதுபோல பக்தி செலுத்த முடியுமா என்று மட்டும் பாருங்கள்.



Comments