கால் மாற்றி ஆடும் வெள்ளி அம்பலத்தான்!

நடராஜ பெருமானின் ஐந்து சபைகளில் ரஜத சபையாக... அதாவது, வெள்ளி அம்பலமாகத் திகழ்வது மதுரை- ஸ்ரீமீனாட்சியம்மன் திருக்கோயில். இங்கே அருள்புரியும் அம்பலவாணன் கால் மாற்றி ஆடுவது, இந்தத் தலத்துக்கே உரிய சிறப்பம்சம். கால் மாற்றி ஆடுகிறாரா... ஏன்?

பாண்டிய மன்னன் ராஜசேகரன் பராக்கிரமசாலி; போர்க் கலைகளில் வல்லவன். ஆனால், பரதம் குறித்து அரிச்சுவடியும் அறியாதவன். நாடாளும் மன்னன், தேசத்தின் கலாசார சின்னமான நாட்டியத்தின் அருமை தெரியாமல் இருக்கிறானே... என்று பக்கத்து நாட்டவர் கேலி பேசினர். இதைப் பொறுக்காத மன்னன், பரதம் கற்க முடிவு செய்தான்.



நாட்டியப் பயிற்சியைத் துவங்கினான். வெறித்தனமாக பரதம் கற்றவன், சுழன்று சுழன்று ஆடியதில் களைத்து ஓய்ந்தான். அப்போதுதான் அவனுக்கு ஒரு விஷயம் புலப்பட்டது. 'நடனம் என்பது எவ்வளவு கடினமான விஷயம்? ஒருநாள் ஆடியதற்கே என்னால் வலி பொறுக்க முடியவில்லையே... எனில், ஒற்றைக் காலை ஊன்றி நிற்கும் சபாபதிக்கு எப்படியிருக்கும்?' என்று சிந்தித்தவன், கோயிலுக்கு ஓடோடி வந்தான்.

நேராக வெள்ளியம்பலத்துக்குள் நுழைந்தவன் ஸ்ரீநடராஜரை வணங்கி, ''அண்ணலே... ஒரு நாள் ஆடியதற்கே என்னால் வலி பொறுக்க முடியவில்லை, தாங்கள் எப்படி சதாசர்வ காலமும் ஒற்றைக் காலை ஊன்றியபடி ஒரே நிலையில் இருக்கிறீர்கள்? எனக்காக, கால் மாற்றி ஆடுங்கள்!'' என்று கண்ணீர் மல்க வேண்டினான். மறு கணம்... இடக் காலை ஊன்றி; வலக்காலை உயர்த்தி, கால் மாற்றி நடனக்கோலம் காட்டினார் நடராஜர்!



இந்தப் பெருமானுக்கு உரிய திருவாதிரை தினத்தன்று, அதிகாலை 330 முதல் 530 மணி வரை பதினாறு அபிஷேகங்களும் நடை பெறுகின்றன. இந்த அபிஷேகத்தைக் காண்பது விசேஷம் என்பதால், எண்ணற்ற பக்தர்கள் ஆலயத்தில் குவிகின்றனர்! நடராஜருக்குத் தைலக்காப்பும் நடைபெறும். பிறகு வெள்ளிக் கவசத்தை சுத்தம் செய்து அணிவிக்கிறார்கள். இந்த தினத்தில் மூலவர் சிவபெருமானுக்கு (மதுரை சொக்கருக்கு) அபிஷேகம் கிடையாது என்பது குறிப்பிடத் தக்கது!

இந்த வைபவத்தில் கலந்து கொண்டு, திருவெம்பாவை பாடி வெள்ளி அம்பலத்தானை தரிசிப்பதுடன், அவர் சந்நிதியில் தரப்படும் 'களி'யமுதை வாங்கி உண்டால், சகல துன்பங்களும் தீருமாம். என்ன... மதுரைக்குப் போவோமா!

கோயில் தொடர்புக்கு போன் 0452- 2344360 / 2349868

நற்கதி அருளும் ஆனந்த தாண்டவர்!


பொதுவாக எல்லாத் தலங்களிலும் நடராஜருக்கு வருடத்தில் ஆறு அபிஷேகம் என்றால், பேரூர்- ஸ்ரீபட்டீஸ்வரர் ஆலயத்தில் மட்டும், வருடத்துக்கு 10 அபிஷேகங்கள்! பங்குனி உத்திரத்தில் நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும் ஒரே தலமும் இதுதான்!



கோயம்புத்தூரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் (சிறுவாணி பிரதான சாலையில்) உள்ளது பேரூர். இங்குள்ள ஸ்ரீபட்டீஸ்வரர் ஆலயம், கரிகாலச் சோழனால் கட்டப்பட்டதாம். ஹோய்சாளர்கள், விஜயநகர மன்னர்கள் மற்றும் திருமலை நாயக்க மன்னர்களால் திருப்பணிகள் கண்ட இந்த பிரமாண்ட ஆலயத்தின் விசேஷ அம்சம், அதன் கோஷ்டம்தான். இங்கே ஸ்ரீநடராஜர் எழுந்தருளி உள்ள கனகசபை மண்டபத்தைக் கட்டி முடிக்க சுமார் 36 வருடங்கள் ஆனதாம். ஸ்தூல சரீரத்தில் (உடம்பில்) அடங்கியுள்ள 36 தத்துவங்களைக் குறிக்கும் வகையில் 36 தூண்களுடனும், உடம்பின் நவ துவாரங்களைக் குறிக்கும் 9 ஜன்னல்களுடனும் அமைந்திருக்கிறது மண்டபம்.

ஸ்தூல பஞ்சாட்சரம், சூட்சும பஞ்சாட்சரம், காரண பஞ்சாட்சரம் ஆகியவற்றைத் தாண்டியே ஒருவர் முக்தி அடைய முடியும். இதை உணர்த்தும் விதமாக, மண்டபத் தின் முகப்பிலும், உள் பிராகாரத்திலும், கருவறைக்குமாக முறையே ஐந்து படிக்கட்டுகளை அமைத்துள்ளனர். கருவறையின் (ஒரே கல்லிலான) நான்கு தூண்கள்- நான்கு வேதங்களை உணர்த்துகின்றனவாம்.

கருவறையில் ஸ்ரீநடராஜர் தரிசனம். ஆனந்த தாண்டவம் ஆடியவர் ஆதலால், விரிசடையுடன் இல்லாமல் பனித்த சடையுடன் இவர் காட்சி தருவது விசேஷம்! இத்தகு அமைப்புடன் திகழும் நடராஜரை தரிசிப்பதால் நற்கதி கிடைக்கும்.

ஸ்வாமியின் விக்கிரகம் பஞ்சலோகத்தால் ஆனது. வெள்ளி பிரபை, சிற்பத்துடன் சேர்ந்து அமைந்துள்ளது. இதில்... வடமொழியின் 51 அட்சரங்களைக் குறிக்கும் தீப்பொறிகள். ஸ்ரீநடராஜருக்கு அருகில் (காரைக்கால் அம்மை மற்றும் மாணிக்கவாசகருக்கு பதிலாக) வலப்புறம் மகாவிஷ்ணு- கோமுனியாகவும், இடப்புறம் பிரம்மன்- பட்டிமுனியாகவும் வீற்றிருக்கின்றனர்.



இறைவனின் ஆனந்த தாண்டவத்தைக் காண விரும்பிய மகாவிஷ்ணுவும் பிரம்மனும் தங்களது விருப்பத்தை சிவனாரிடம் தெரிவித்தனர். 'இந்தத் தலத்தில் அவர்களின் விருப்பம் நிறைவேறும்' என்று அருளினார் சிவனார். அதன்படி, கோயிலுக்கு தெற்குப் பகுதியில் (தென் கயிலாயம்) மகாவிஷ்ணுவும், வடக்குப் பகுதியில் (வட கயிலாயம்) பிரம்மனும் நடராஜரின் ஆனந்த தாண்டவத்தைக் காணும் பேறு பெற்றனராம். இருவரும் தவமிருந்த இடங்களில் தோன்றிய (தென்பகுதி- சக்ர தீர்த்தம்; வடபகுதி- பிரம்ம தீர்த்தம்) தீர்த்தங்களை இன்றும் காணலாம். பெரும்பாலும் நடராஜர் நடனமிடுவது ஆல மரத்தின் கீழ்தானாம்! ஆனால், இந்தத் தலத்தில் மட்டும் அரச மரத்தின் கீழ் நடனக் காட்சி கொடுத்தார் என்பது சிறப்பு. வரும் மார்கழி- திருவாதிரை நாளில்(ஜனவரி-1), அன்று பேரூர் ஆனந்த நடராஜரை தரிசித்து, வாழ்வில் பேரானந்தம் பெறுவோம்!

கோயில் தொடர்புக்கு 0422-2607991 / 2606849

Comments