சந்தோஷம் தரும் சர்ப்பங்கள்!

செல்வச் சிறப்புடன் வாழும் ஆசை எல்லோருக்கும் உண்டுதானே? இந்த பிராப்தம் கைகூட, ராகுபகவானை கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும். இவர்தான் யோககாரகன்! கூடவே, ஞானத்தை அருளும் கேதுவின் துணையும் இருந்துவிட்டால் பூரண சந்தோஷம்தான்!

தேவ-அசுரர்கள் இணைந்து, பாற்கடல் கடைந்த கதை தெரியும்தானே? பாற்கடலில் அமுதம் கிடைத்ததும், சங்கிரமர் குலத்தில் பிறந்த ராகு- கேது இருவரும் தேவர்களாக வடிவெடுத்து வந்து, மகாவிஷ்ணுவிடம் அமுதம் பெற்றனர். ஆனால் சூரிய- சந்திரர் மூலம் இவர்களை அடையாளம் கண்டுகொண்ட விஷ்ணு கோபம் கொண்டார். சக்ராயுதத்தால், இவர்களின் தலையைக் கொய்தார். எனினும், அமுதம் பருகியிருந்ததால் இருவரும் சாகவில்லை. ராகு- மனித முகமும் பாம்பின் உடலுடனும்; கேது- பாம்பின் தலையும் மனித உடலுடனும் உருப்பெற்றனர். தொடர்ந்து இவர்கள், கடும் தவம் புரிந்து மகாவிஷ்ணுவின் அருளால், நவக்கிரக பதவியை அடைந்தனர். இதனால், ஆண்டியை அரசனாக்கும் வல்லமை ராகுவுக்கும்; அரசனை ஞானியாக்கும் ஆற்றல் கேதுவுக்கும் கிடைத்ததாகச் சொல்வர்.

இந்த கிரகங்கள், ஒன்றரை ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியடைவர்.இவர்களுக்கு சொந்த வீடு கிடையாது. எந்த ராசியில் அமர்ந்துள்ளனரோ, அந்த ராசிக்கு உரிய கிரகத்துடன் இணைந்தே பலன் தருவார்கள்.

ராஷயோகம் அருளும் ராகு!

ராகு பகவான் - கருமையானவர்; தென்மேற்கு திசைக்கு அதிபதி; கிரகங்களில் பெண் கிரகம்; இனத்தில் சங்கிரமன்; வடிவில் உயரம்; தொடை, பாதம் மற்றும் கணுக்காலுக்கு உரியவர். பஞ்ச பூதத்தில் ஆகாயமான இவர்... சரக்கிரகமும்கூட (மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவை சரராசிகள் என்பர்). இவரின் அதிதேவதைகள்- ஸ்ரீகாளி, ஸ்ரீதுர்கை மற்றும் ஸ்ரீகருமாரி! இவரது நட்சத்திரங்கள் திருவாதிரை, சுவாதி மற்றும் சதயம். இவரது திசை, 18 வருடங்கள்.

'ராகுவைப் போல் கொடுப்பார் இல்லை' என்பர். சாயாகிரகமான ராகு லக்னத்தில் இருக்க... அந்த ஜாதகர் பலவானாகவும் பிடிவாத குணம் கொண்டவராகவும் இருப்பார். மர்மமான மனதுக்குச் சொந்தக்காரராக விளங்குவர். ராகு பகவான் 2-ஆம் இடத்தில் இருக்கும் ஜாதகர்கள், முன்கோபியாக, செலவாளிகளாக, மனம் போல் வாழ்பவராக இருப்பர். ராகு 3-ல் இருந்தால், அடிக்கடி பயணம் மற்றும் ஆபரணச் சேர்க்கைகள் உண்டு. 4-ல் இருந்தால் வேளை தவறிய உணவு, தாயாருக்கு உடல் நலக்குறைபாடு ஆகிய பலன்கள் கிடைக்கும். 5-ல் ராகு இருந்தால் திருமணம் மற்றும் புத்திரத் தடைகள் உண்டாகும். பூர்வ ஜன்ம புண்ணியம் பாதிக்கும்; கடும் நாக தோஷம் விளையும்!

6-ல் இருந்தால் திருமண பாக்கியம், நீண்ட ஆயுள், திடீர் பணவரவு மற்றும் சொத்து சேர்க்கை உண்டு. ஸ்ரீஅஷ்டலட்சுமியின் அருள் கிட்டும். 7-ல் இருக்க திருமணம் தடைபடும். அல்லது கலப்பு மணம் புரிவர். 8-ல் இருந்தால் இரக்கம் அற்றவராகவும், பாலாரிஷ்ட தோஷம் உள்ளவராகவும் திகழ்வர். 9-ஆம் இடத்தில் ராகு இருந்தால் தந்தைக்கு நஷ்டம்; மூதாதையரது சொத்துகளில் வில்லங்கம் ஏற்படும். பூமியும் பொருளும் சேரும்.

10-ஆம் இடத்தில் இருந்தால், விதவையால் ஆதாயம் கிடைக்கும்; நவரத்தினங்கள் சேரும்; யோக வாழ்வு வாழ்வர். ராகு 12- இல் இருந்தால் பிதுர் அரிஷ்டமும் திடீர் யோகமும் உண்டு. 12-ல் இருந்தால், சிந்தனாவாதி; சயன சுகமற்றவர்; சர்ப்ப தோஷம் இருக்கும். கன்னியில் ஆட்சியும் விருச்சிகத்தில் உச்சமும் பெறும் ராகு பகவான் எப்போதுமே சந்தோஷங்களைத் தருவார்!

ஞானயோகம் தரும் கேது!

கேது பகவான்- செந்நிறம் கொண்டவர். வடமேற்கு திசைக்கு அதிபதி; அலி கிரகம்; இனத்தில் சங்கிரமன்; மர்ம உறுப்புக்கு அதிபதி. பல வண்ணங்கள் கொண்ட வஸ்திரம் இவருக்குப் பிடிக்கும். பஞ்சபூதங்களில் ஆகாயம் இவர்; நாடியில் பித்தநாடி. ஸ்ரீவிநாயகரும் ஸ்ரீசண்டிகேஸ்வரரும் கேதுவின் அதிதேவதைகள்.

வாழ்வின் பிற்பகுதியில் பலன் தரும் கிரகம் இவர். வேத- வேதாந்த அறிவு; மோட்சம், விஞ்ஞான- மெய் ஞானத் தேடல் ஆகியவற்றின் காரகனும் இவர்தான்! சிவப் பிரியரான இவர், தவம் செய்யும் வலிமையையும் தருவார். எளிமைக்கும் கடுமைக்கும் நடுவே இருக்கும் கேது, சகல சௌபாக்கியங்களை அருள்வதுடன், வியாதிகளில் இருந்து நிவாரணமும் தர வல்லவர். அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களின் அதிபதியான கேதுவின் திசை- 7 வருடங்கள்!

சாயா கிரகமான கேது, அவரவர் லக்னப்படி... சில இடங்களில் அதிகமாகவும் சில இடங்களில் சாதாரணமா கவும் பலன் தருவார். ஜாதகத்தில் கேது லக்னத்தில் இருந்தால், குணவானாகவும் பலசாலியாகவும் திகழலாம். 2-ல் இருந்தால் வாக்கு, ஸித்தி, யோகம், சத்ரு ஜெயம், தான-தர்மம், சாஸ்திர ஞானம் மற்றும் புண்ணிய பலன்கள் கிடைக்கும். 3-ல் இருந்தால் சத்ருக்கள் அழிவர்.

4-ல் இருந்தால் கலைஞானம் தருவார். 5-ல் இருந்தால் புண்ணிய பலன்கள் கிடைக்கும். 6-ல் இருந்தால் யோகம் கிடைக்கும்; பகை ஒழியும். 7-ல் இருந்தால் களத்திர அரிஷ்டம்; பெண்பித்தராக இருப்பர். 8-ல் இருந்தால் மனைவிக்கு தோஷம். 9-ல் இருந்தால், தந்தை பாக்கியக் குறைவு; தரித்திரம், புண்ணியத்தில் தடை உண்டு. 10-ல் இருந்தால் விவேகி; ராஜாங்க சேவை; தான-தர்மத்தில் ஈடுபாடு உண்டாகும். 11-ல் இருந்தால் புண்ணியவானாக திகழலாம். 12-ல் இருந்தால் செல்வ போகமும் மோட்சமும் கிடைக்கும். அந்தஸ்து- அதிகாரத்துடன் வாழ்வர்!

ராகு-கேதுவின் அருள் பெற விரும்புவோர், திருநாகேஸ் வரம், கீழப்பெரும்பள்ளம் போன்ற தலங்களுக்குச் சென்று முறையே ராகு- கேதுவை வழிபட்டு வரலாம்.

இயலாதவர்கள் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக் கிழமை களில்- ராகு காலத்தில், துர்கை அம்மன் கோயிலுக்குச் சென்று மனமுருகி அம்பாளை வழிபடுவதால் ராகுவின் அனுக்கிரகத்தைப் பெறலாம். கேதுவின் அருள்பெற வேண்டுமெனில், எமகண்ட வேளையில் சித்ரகுப்தரை தியானிப்பது நல்லது. தவிர, அருகில் இருக்கும் ஆலயங்களில் அருளும் நவக்கிரகங்களை வலம் வந்து வழிபட்டும் பலன் பெறலாம்.

Comments