ஆதிஅரங்கத்தில் பாற்கடல் தரிசனம்!

திருவரங்கம் என்றதும்... காவிரியின் நடுவில், பெருமாள் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீரங்கம்தானே நம்மில் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், தென்பெண்ணை ஆற்றின் கரையிலும் ஒரு திரவரங்கம் இருக்கிறது.

விழுப்புரத்தில் இருந்து தெற்கே சுமார் 42 கி.மீ தொலைவில் உள்ளது திருக்கோவிலூர். இங்கிருந்து சுமார் 16 கி.மீ. தூரத்தில் இருக்கிறது திருவரங்கம். மிகப் பழைமையான இந்தத் தலத்தை, 'ஆதிஅரங்கம்' என்று போற்றுகிறார்கள். ஆமாம்... இது கிருத யுகத்துக்கும் முந்தைய தலமாம்! இந்த ஆதிஅரங்கத்துக்கு இன்னுமொரு சிறப்பும் உண்டு... என்ன தெரியுமா?

இங்கே உள்ள மூலவர் விக்கிரகம், ஸ்ரீமந் நாராயணரே தனது விக்கிரகத்தை உருவாக்குமாறு கூற... அவரது வாக்கின்படி வடிவமைக்கப்பட்டதாம்!



சோமுகாசுரன் வேதங்களை அபகரித்துச் சென்றான். பிரம்மன் மற்றும் தேவர்கள் மகாவிஷ்ணுவைச் சரணடைந்து, வேதங்களை மீட்டுத் தர வேண்டினர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று, மச்சாவதாரம் எடுத்த பெருமாள், அசுரனிடம் இருந்து வேதங்களை மீட்டு வந்தார். அதன் பிறகு தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, விஸ்வகர்மா எனும் சிற்பியின் மூலம்... பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் தனது திருக்கோலத்தை சிலையாக உருவாக்க அருள் புரிந்தாராம் ஸ்ரீமந் நாராயணன். ஆதி அரங்கத்தில், இன்று நாம் தரிசிப்பது இந்த விக்கிரகத்தைத்தான் என்கிறார்கள்!

தமது வேத உபதேசங்களை பெருமாள் துவங்கியது இந்தத் தலத்தில்தானாம்! எனவே, ஆதி அரங்கம் வந்து ஆண்டவனை தரிசிக்க, பாற்கடலுக்கே சென்று பரந்தாமனை தரிசித்த புண்ணியம் வந்து சேரும் என்பது ஐதீகம்!



இந்த ஆதிஅரங்கம் திருக்கோயில், கிழக்கு நோக்கி காட்சி தருகிறது. ராஜ கோபுரம் மற்றும் கருங்கல் மதிலுடன் கம்பீரமாகக் காட்சி தரும் இந்த ஆலயத்தின் மண்டபங்களும் அழகு வாய்ந்தவை. கோயில் நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருக்கும் பெரிய மணி, காண்போரை வியக்க வைக்கிறது!

மூலவர் சந்நிதிக்கு வலப்புறம், மேல் தளத்துக்குச் செல்வதற்கான படிகள் உள்ளன. மேல் தளத்தை அடைந்தால்... அப்படியே கோபுரத் தளத்துக்கு வந்து விடலாம். கோயிலின் மேல் தளம், செங்கல் மற்றும் சுண்ணாம்பு காரைச் சாந்து கலந்த கட்டுமானமாகத் திகழ்கிறது. கோயிலில் இருக்கும் மிகப் பெரிய தானியக் களஞ்சியமும் நம்மைக் கவர்கிறது. முற்காலத்தில்... போக்குவரத்து வசதிகள் குறைந்த இந்தப் பகுதியில் படைவீரர்களை நிரந்தரமாகத் தங்க வைத்திருக்கக் கூடும். அவர்களது உணவுத் தேவையை பூர்த்தி செய்யவே, இவ்வளவு பெரிய தானியக் களஞ்சியத்தை நிர்மாணித்திருக்கிறார்கள் போலும்!

கோயில் சந்நிதிகளும் அழகுற அமைந்திருக்கின்றன. ஸ்ரீரங்க நாயகி தாயார், ஸ்ரீவரதராஜர், ஸ்ரீராமர், வேதாந்த தேசிகர், விஷ்வக்சேனர், ஆண்டாள் ஆகியோரும் தனிச் சந்நிதிகளில் அருள்பாலிக்கிறார்கள். கோயிலுக்கு நேர் கிழக்கில் ஆஞ்சநேயர் சந்நிதியும் உள்ளது.



சந்தோமய விமானத்தின் கீழ் பள்ளிகொண்டிருக்கிறார் ஸ்ரீஅரங்கநாத பெருமாள். 'நெடியோன்' எனும் பெயருக்கு ஏற்ப, நெடுமாலாக (சுமார் 15 அடி நீளத்தில்)- வட திசை பாதம் நீட்டி, தென்திசையில் திருமுடி வைத்து, கிழக்கு நோக்கியவாறு அனந்தனின் மீது பள்ளி கொண்டிருக்கும் ஸ்வாமியை தரிசிக்க கண்கோடி வேண்டும்!

ஸ்வாமியின் இடப் பக்கம்- திருமகளும் பூமகளும்! கருடன் பணிவாக ஏவல் கேட்கிறார். வலது கையால் அபயம் அருளும் பெருமாள், இடது கரத்தால் ஞானமுத்திரை காட்டி நாபிக்கமலத்தில் இருக்கும் நான்முகனுக்கு வேதங்களை உபதேசிக்கிறார்.

முதலில் தொண்டை நாட்டு மன்னர்களது பராமரிப்பில் இருந்த ஆலயம், பிறகு வேட்டவலம் ஜமீன் அனந்தகிருஷ்ண வாணாதிராஜா மேற்பார்வையில் இருந்துள்ளது. சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பிருந்து கோடி கன்னிகாதானம் தாத்தாச்சார்யர் மரபைச் சார்ந்தவர்களிடம் இந்தக் கோயில் நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டதாம்.

தற்போது, 'திருவண்ணாமலை ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள் அறக்கட்டளை' மூலம் ராஜகோபுரம் உட்பட, கோயிலின் வெளிப்புறப் பகுதிகள் சீரமைக்கப்பட உள்ளன.

ஆதிஅரங்கமாம் இந்த அரங்கத்தின் தீர்த்தம் சந்திர புஷ்கரணி. புன்னை மரம் தல விருட்சமாகத் திகழ்கிறது.

சந்திர புஷ்கரணி மகிமை வாய்ந்தது. தன் மனைவியரில் ரோகிணியைத் தவிர மற்றவர்களைப் புறக்கணித்ததால் சாபம் பெற்றான் சந்திரன். இதனால் கலங்கியவன், உத்தர ரங்கம் என்று போற்றப்படும் இந்தத் தலத்தில் தவம் இருந்து சந்திர புஷ்கரணியில் நீராடி இறைவனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றான்; அவனது அழகும் திரும்பக் கிடைத்தது என்கின்றன புராணங்கள்.

தவிர, பிரம்மனே வேத உபதேசம் பெற்ற தலம் ஆதலால், இங்கே வந்து ஸ்ரீஅரங்கநாத பெருமாளை வழிபட கல்விச் செல்வம் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள். அனுதினமும் ஆதிஅரங்கத்தில் கூடும் பக்தர் கூட்டமே இதற்கு சாட்சி!

மழலை வரம் தரும் மாதவன்!

ஆதிஅரங்கம் குழந்தை வரமும் அருளும் அற்புதத் தலம்.

கிருத யுகத்தில் வாழ்ந்த ச்ருதகீர்த்தி என்ற அரசன், குழந்தைப் பேறு இல்லாமல் வருந்தினான். பிறகு, நாரத முனிவரின் அறிவுரைப்படி, இந்தத் தலத்துக்கு வந்து நோன்பு நோற்று வழிபட்டானாம். இதன் பலனாக அந்த மன்னனுக்கு நான்கு குழந்தைகள் பிறந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்தக் கலியுகத்திலும் குழந்தை இல்லாமல் வருந்தும் பக்தர்களுக்கு மழலை வரம் வழங்கக் காத்திருக்கிறார் ஸ்ரீஅரங்கநாத பெருமாள்.

Comments