சந்தனப் பூச்சு!

கேரளாவில் ‘முட்டம்’(Muttom) என்ற இடத்தில் ஸ்ரீமனக்காட்டு தேவி, லட்சுமியாக கொலுவிருக்கிறாள். சுமார் பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமைவாய்ந்த ஆலயம் இது என்கிறது கல்வெட்டு.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு காட்டுத் தீயினால் ஒரு நகரமே அம்மன் உட்பட, மண்ணில் புதைந்துபோனது. சிலகாலம் கழிந்தது. ஒரு மூதாட்டி வயலில் அறுவடை செய்யப் பயன்படுத்தும் அரிவாளை வயலில் இருந்த கருப்பான ஒரு கல்மீது தேய்த்தாள். சற்று நேரத்தில் அந்தக் கல்லிலிருந்து ரத்தம் வழிந்தது. அதைக்கண்டு திகைத்தாள். அதற்குள் இச்செய்தி ஊர்முழுவதும் பரவியது. அப்போது வயதான ஒரு பிராமணர் அங்கு வந்து, இந்த கோயிலில் உள்ள தற்போதைய சிலையை கண்டு எடுத்தாராம். அந்த சிலையே இங்கு பூஜிக்கப்பட்டு வந்ததாம். பிறகு படிப்படியாக இக்கோயில் தோன்றியதாக ஸ்தல வரலாறு.

தொடர்ந்து ஏழு வாரங்கள் இந்த தேவிக்கு மாங்கல்ய பூஜை செய்து வழிபட்டால், திருமணமாகாத பெண்களுக்கு தடையின்றி நல்ல இடத்தில் வரன் அமைந்து எளிதில் திருமணம் நடக்கும்.

இக்கோயிலில் தேவி மட்டுமின்றி ஸ்ரீதர்மசாஸ்தா, சிவமூர்த்தி, காளி (யக்‌ஷி), குஞ்சிகுட்டி பிள்ளை வளியச்சன் போன்றவர்களும் சன்னிதி கொண்டு, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

இந்த அம்பிகைக்கு பூசப்படும் சந்தனம் விசேஷ மருத்துவ குணம் உடையது. அம்மனுக்கு இரவு சந்தனக்காப்பு நடைபெற்ற அடுத்த நாள், பக்தர்களுக்கு தரப்படும் சந்தனத்தை உடலில் பூசிக் கொண்டால் எல்லாப் பிணியும் நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள். இங்கு பல வழிபாடுகள் உள்ளன. அவற்றில், ரக்த புஷ்பாஞ்சலி (சிகப்பு பூ மற்றும் குங்கும அர்ச்சனை), புஷ்பாஞ்சலி, ஆரவனா, சாஸ்தாவுக்கு நீராஜ்ஜனம் மற்றும் சந்தனம் சார்த்து (சந்தனக்காப்பு) போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இத்தேவியை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அங்கப்பிரதட் சனம் செய்தால், தீராத பணப்பிரச்னைகள் நீங்கும். ஆண்டுதோறும் பிப்ரவரி/மார்ச் மாதத்தில் வரும் மகரபரணி நாள் அன்று, லட்சுமி தேவி ‘ஜீவதா’ எனப்படும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பக்தர்களின் இல்லம் தேடி வருவாள்.

பன்னிரண்டு நாட்கள் நடைபெறும் இந்த வைபவத்தில், பக்தர்கள் அன்பொளி மற்றும் தாலப்பொளி (பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தாம்பாளத்தின் நடுவே தீபம்) ஏந்தி, பஞ்சவாத்தியம் முழங்க வரவேற்று வழிபடுவார்கள். இதைத்தவிர பிரதிஷ்டா உற்சவமும் நடைபெறுகிறது. இது போன்ற உற்சவ நாட்களில் பல ஊர்களிலிருந்து மக்கள் திரளாக வந்திருந்து தேவியை தரிசிக்கிறார்கள்.

இருப்பிடம்:

ஆலப்புழையில் இருந்து கொல்லம் செல்லும் வழியில் இருப்பது ‘ஹரிப்பாடு.’ இதனருகே தான் ‘முட்டம்’ உள்ளது. பேருந்து வசதி உண்டு.

Comments