காலத் தத்துவம்!

சென்னை பாரதிய வித்யாபவனில், ‘ஸ்ரீ தேவி மகாத்மியம்’ என்ற தலைப்பில் கோட்டா வெங்கடேஸ்வர சாஸ்திரி சொற்பொழிவு நிகழ்த்தினார். அதிலிருந்து...

‘காளி’ - இது காலத்தை குறிப்பது. காலம் என்ற சொல் மருவி காளி என வழங்கப்படுகிறது. காலத்தை நம்மால் பார்க்க முடியாது. ஆனால், உணர முடியும். அதாவது, ‘காலம்’ ஆகிய காளி தேவியை காண முடியவில்லை என்றாலும், அவளை நன்கு உணரமுடியும்.

அவளது அருளால்தான் சூரியன், சந்திரன், மற்ற பிற நட்சத்திரங்கள் படைக்கப்பட்டன. நம்முடைய செயல், காலத்தின் கட்டாயத்துக்குள் அடங்கிவிடுகிறது. மனிதனாக, மற்றும் பிற ஜீவன்களாக இருக்கும் உயிர்களும் காலத்தால்தான் ஆட்டி வைக்கப்படுகின்றன. நமது செயலின் நன்மையும், தீமையும் காலத்தின் கணக்குதான் என்பது, அனைத்து சாஸ்திரங்களும் சொல்லும் உண்மை.

தத்துவமாகச் சொன்னால், நமக்கு சட்டென்று புரிந்துகொள்ள முடியாது என்பதால்தான், தர்ம சாஸ்திரங்கள், புராணங்கள் எல்லாமுமே கதை வழியாக வந்து, பெரியோர்கள் வழியாக இன்றும் கூறப்பட்டு வருகிறது.

‘கடவுளிடம் சரணாகதி அடைந்துவிடு’ என்று ஒரே வரியில் சொல்லிவிடலாம். எல்லாப் புராணங்களும் அதைத்தானே சொல்கின்றன என்று தோன்றலாம். என்றாலும், சரணாகதி என்ற நிலையை அடைய, மனிதன் காலத்தோடு போராட வேண்டி இருக்கிறது.

சுரதன் மிகப்பெரிய நாட்டுக்கு ராஜா. அவனது ராஜாங்கம் கொஞ்சம் கொஞ்சமாக இழப்புகளை சந்திக்கிறது. எதிரிகளுடைய பலத்தால், அவன் சொத்துக்கள் ஒவ்வொன்றாக இழக்கிறான்.

ஒருநிலையில் நாட்டைவிட்டு வெளியேறுகிறான். என்னதான் நாட்டை விட்டு வெளியேறினாலும், சுரதனுக்கு நாட்டின் மீது இருக்கும் அபிமானம், பற்று குறையவில்லை.

வழியில் ஒரு ஆசிரமத்தில் இருந்த முனிவரை சந்திக்கிறான். முனிவர், அவனுக்கு ஆறுதல் கூறி, ‘துன்பம் வருகிறபோது அழக்கூடாது; கடவுளை நினைத்து, அவரிடம் சராணாகதி அடைய முயற்சி செய்’ என்று கூறினார். தவம் செய்யும்படி அனுப்பிவைத்தார்.

சுரதனும் காட்டுக்கு சென்று, தவத்தை மேற்கொள்ள முயற்சித்தான். ஆனால் அவனுக்கு அவனது பிரஜைகளும், மனைவி, குழந்தைகள், ராஜ்யம் என கடவுள் சிந்தனைத் தவிர, அனைத்தும் வந்தன. கடவுளை நினைத்து தவம் செய்தல் என்பது சாதாரண விஷயம் இல்லை. ஆசைப்பட்டு வாழ்ந்த வாழ்க்கையை விட்டு, கடவுளை மட்டும் நினைத்து தவம் செய்தல், சீக்கிரம் வந்துவிடாது. நாட்கள் செல்லசெல்ல, நமது ஆசை தேய்ந்து, ஞானம் குடிகொள்ளும்.

நமது முற்காலவினை, நன்மையாக இருக்குமாயின், அதன் பலனாக ஸத் மனிதர்கள் நமது அருகில் இருப்பார்கள். சற்று தீமையாகவோ, பாவமாகவோ இருக்குமென்றால், அஸத் மனிதர்கள்தான் நம்முடன் சேர்வார்கள்.

இங்கு இந்த ராஜாவின் இலையுதிர் காலத்தில், சமாதி என்ற திறமையான ஒரு மனிதர் நண்பராக, வழியில் தென்படுகிறார். அவரிடம், ராஜா தன் நிலைமையை எடுத்துரைத்தான்.

அவரும் அவனுக்கு ஆறுதல் கூறினார். இருவரும் சேர்ந்து சுமேதஸ் என்ற முனிவரின் ஆசிரமத்தை அடைந்தனர். சுமேதஸ் என்கிற இந்த முனிவர்தான் பின்னாளில் வஸிஷ்டர் ஆகிறார்.

முனிவர் அவர்களுடைய கதைகள் எல்லாம் கேட்டார். அவர்களிடம், ‘மம’ என்கிற எண்ணத்தை விட்டுவிட சொன்னார். மனிதர்கள் எல்லார்க்கும் எல்லா விஷயங்களிலும் ஆசை இருக்கிறது, அந்த ஆசை கூர்மையாகி, ஞானத்தை வெளிவரவிடாமல் தடுக்கிறது. ஆகவே, வேண்டும் என்ற சிந்தனையிலிருந்து முதலில் வெளி வர வேண்டும், பிறருக்கு எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்ய வேண்டும் என்றார் முனிவர். பிறகு ராஜாவும் அப்படியானான் என்று போகிறது கதை.


சரி, எதிர்பார்ப்பை எளிதில் உதற முடியுமா? எதிர்ப்பார்ப்பினை உதற, நாம் குருவியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். தாய்க்குருவி நெல்லை அலகால் குத்தி, சிறுசிறு அரிசி மணிக்களாக்கி தன் குட்டிக்கு ஊட்டிவிடும். இறக்கை முளைத்ததும் குட்டி, சிறகடித்துப் பறந்து விடும். தாய்க்குருவி அதனிடம் எந்தப் பலனையும் எதிர்பார்க்காது.

இப்படித்தான் நாமும் இருக்க பழகிக்கொள்ள வேண்டும். இதுதான் காலத் தத்துவம்.”



Comments