பிள்ளையார் நோன்பு!

சோழ மன்னன் அரண்மனை வாயிலில் பொதுமக்கள் கூட்டம். மன்னர் சொன்னார்:

“ அவர்களில், பெரியோர்கள் சிலரை அழைத்து வாருங்கள்.”

பத்துப் பெரியோர்கள் வந்தனர்.

“பேரரசரை வணங்குகிறோம்.”

“சொல்லுங்கள் உங்களுக்கு என்ன குறை?”

“மன்னா, ஆவணியில் சுக்லபட்ச சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி விழா. எல்லாவிதமான பொருள்களும் விற்பனை செய்பவர்கள் நகரத்து (நாட்டுக் கோட்டை) செட்டிமார்கள்தான். இந்த நாளில் அவர்கள் கடைகளைத் திறப்பதில்லை. நாங்கள் தேவையான பொருட்களை வாங்கி, சதுர்த்தி விழாவை கொண்டாட முடிவதில்லை. அவர்களைக் கேட்டால், ‘நாங்கள் மட்டும் விநாயகரை வணங்க வேண்டாமா?’ என்று கேட்கிறார்கள். மன்னா, தயவு செய்து நீங்கள் தான் இதற்கு ஒரு நல்ல முடிவு சொல்ல வேண்டும்.”

அரசன், நகரத்து செட்டிமார்களை கலந்து பேசினான். அவர்கள், “அரசே, மன்னிக்க வேண்டும். வரிசையாய் வரும் விழாக்களில் ஆவணியில் முதலில் வருவது விநாயகர்சதுர்த்திதானே? அன்றும் நாங்கள் கடை திறந்து வைத்திருந்தால், எப்படி விரதம் இருப்பது? எப்படி இறையருள் பெறுவது?”

“நீங்கள் ஏன் இந்த விரதத்தை வேறு ஒரு நாளில் மாற்றி வைத்துக்கொள்ளக் கூடாது?”

“ஐய்யயோ, மன்னா, அது தெய்வ குற்றமாகிவிடுமே!”

“சீட்டுக் குலுக்கிக் போட்டு, அந்த விநாயகர் பெருமானிடமே உத்தரவு கேட்டுவிடுவோம்.”

மூன்று திருவுளச்சீட்டுகள் எழுதினர். ஒன்றில் ‘கடைகளைத் திறப்பது’ என்றும், மற்றொன்றில் கடைகளைத் திறப்பதில்லை’ என்றும்; மற்றொன்றில், ‘நாட்டைவிட்டுப் போய்விடுவது’ என்று எழுதிப்போட்டனர். குலுக்கி, விநாயகர் முன் போட்டனர். கண்களை மூடித் தியானித்தனர். கண் திறந்து பார்த்தபோது மூன்று சீட்டுகளுமே காணாமல் போயிருந்தன!

அடுத்து இருமுறை அதேபோல் செய்தனர். மூன்று முறையும் சீட்டுகள் மாயமாயின. நான்காவது முறையாகவும் மூன்று சீட்டுகள் எழுதி விநாயகர் பீடத்தில் வைத்தனர். எல்லோரும் ஒரே குரலில் ‘விநாயகரே! நீ காட்டும் வழியில் நடப்போம்’ என்று உறுதி கூறி விழுந்து வணங்கினர். எழுந்து பார்த்தபோது, பீடத்தினருகில் நான்கு சீட்டுகள் இருந்தன! அதில் ஒரு சீட்டு மேலெழும்பி அவர்கள் முன் வந்தது!

அந்தச் சீட்டில், ‘மார்கழி மாதம்,சஷ்டி திதியும் சதய நட்சத்திரமும் கூடுகிற நாளில் உங்களுக்கு அருள்வேன். கார்த்திகை மாதம் பெரிய கார்த்திகை (கிருத்திகை) அன்று, 21 நாட்கள் விரதம் இருந்து 22வது நாளில் நோன்பு முடித்து பூஜை செய்க’ என்று எழுதியிருந்தது. அவர்கள் வியந்து போனார்கள். அது, விநாயகரே அளித்த உத்தரவு!

விநாயகர் கஜமுகாசுரனை வதம் செய்து அடியார்களைக் காத்தது மார்கழி மாதம் சஷ்டியும், சதயமும் கூடிய நாளில் தான்! சஷ்டி திதியும், சதய நட்சத்திரமும் வேறு மாதத்தில் கூடுவதில்லை!

இப்படி மார்கழியில் சஷ்டியில் விநாயகர் விரதம் பூஜை செய்வது விநோதமானது. அது மட்டுமல்ல; இந்த நோன்பே வித்தியாசமானதுதான்.

திருக்கார்த்திகையன்று விளக்கேற்றி பூஜை செய்து, நோன்பு தொடங்க வேண்டும். அன்றுமுதல், தினந்தோறும் புதுத் துணி ஒன்றிலிருந்து நூல் ஒன்று எடுத்து விநாயகர் படத்தில் கட்ட வேண்டும். நாள் ஒன்றுக்கு ஒரு நைவேத்தியம் வீதம், விதவிதமாய் 21 நாளும் படைத்துவர வேண்டும். 22ம் நாளில் எல்லா நைவேத்யங்களையும் மறுமுறை படையலிட வேண்டும்.


திரட்டுப்பால் செய்து, அதில் விநாயகர் பிடித்து வைக்கவேண்டும். 21 நாளும் படத்தில் போட்ட 21 நூல்களையும் திரட்டுப்பாலில் பிடித்த விநாயகருக்கு நெய்த் திரியாக ஏற்றி, பிறகு ஒவ்வொருவரும் அந்த திரட்டுப்பாலை எடுத்து உண்ண வேண்டும்! படைக்கப்பட்ட நைவேத்யங்களை எல்லாருக்கும் வழங்க வேண்டும்.

“நோன்பு ஒன்று நோற்றேன்

நூல் ஒன்று நூற்றேன்”

என்று நோன்புக்காக பாட்டு பாடுவர். ‘பிள்ளையார் நோன்பு’ என்ற பெயரில், பலராலும் இன்றும் இந்த வழிபாடு பின்பற்றப்பட்டு வருகிறது.

Comments