ஆன்மீக கேள்வி பதில்கள்

குலதெய்வம் தெரியாதபோது அதை எப்படி நிர்ணயிக்க வேண்டும்? இஷ்ட தெய்வத்தை குலதெய்வமாக பூஜிக்கலாமா?


குலதெய்வத்தை ஒருவர் மறந்து போய்விட்டால் தொடர்ந்து நடத்த வேண்டிய குலதெய்வ வழிபாட்டை முறையாக நடத்தவில்லை என்றால், குடும்பத்தில் வம்ச விருத்தி இன்மை, வீண் குழப்பங்கள் மற்றும் பிரச்னைகள் ஏற்படலாம். எனவே குலதெய்வ வழிபாட்டை தவறாது நடத்த வேண்டும். ஆனால் இஷ்ட தெய்வத்தை குல தெய்வமாக பூஜை செய்வது சரியல்ல.

ஏதோ சில காரணங்களால் குல தெய்வம் எது? என்றே தெரியவில்லை. மனித முயற்சியால் குல தெய்வத்தை தெரிந்துகொள்ள முடியவில்லை என்றால், குடும்பத்திலுள்ள பெரியவர், குழந்தைகள் போன்ற அனைவரின் ஜாதகங்களையும் நன்கு பரிசீலனை செய்யலாம் (ஒருவரின் ஜாதகத்தை மட்டும் பரிசீலித்தால் போதாது). ஜாதகத்தில் பிறந்த (ஜன்ம) லக்னத்துக்கு ஐந்தாமிடம் பூர்வ புண்ய ஸ்தானம் எனப்படும். அந்த ஐந்தாமிடத்தையும், அதன் அதிபதியையும், அந்த இடத்துக்கு தொடர்புடைய கிரகங்களையும் ஆராய்ந்தால், எந்த தெய்வம் ஜாதகரின் குல தெய்வம் என்றும், அத்தெய்வம் எந்தத் திசையில், எந்தச் சூழ்நிலையில் அமைந்திருக்கிறது என்பதையும், எந்த தெய்வத்தின் அருளால் இந்த ஜாதகனின் பிறப்பு ஏற்பட்டது என்பதையும் ஓரளவு கண்டுபிடித்துவிட முடியும். அத்துடன் மந்திர ஸ்தானம் எனப்படும் ஜன்ம லக்னத்துக்கு நான்காமிடத்தையும் ஆராய்ந்து, எந்த தெய்வத்தின் (மந்திர) பலம் இவனுக்கு அதிகம் என்பதையும் ஆராய வேண்டும்.

ஜாதகம் இல்லாதவர்கள் அல்லது ஜாதகம் சரியானதுதானா என சந்தேகிப்பவர்கள், ஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகத்துக்கு அடுத்த (மேல்) நிலையிலுள்ள பிரச்னமார்கம், (சோழி போட்டு குறி பார்த்தல்) மூலம், குலதெய்வத்தை அறிந்துகொள்ள முயற்சிக்கலாம். குல தெய்வத்தை அறிந்துகொள்ள வேண்டுமானால் மனித முயற்சியும் பொறுமையும் அதிகம் தேவை. அதைவிட குலதெய்வத்தின் அருள் அதிகமாகத் தேவை.


ஏற்கனவே ஒருமுறை காசி, கயைக்குச் சென்று பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமைகளை செய்து விட்டேன். தற்போது இரண்டாவது முறையாகச் செல்கிறேன். அப்போது நான் செய்ய வேண்டிய கடமைகள் ஏதாவது உண்டா?


ஸ்ம்வத்ஸரே த்விமாஸோநே புநஸ் தீர்த்தம் வ்ரஜேத் யதி

முண்டனம் சோபவாஸ்ஸ்ச ததோ யத்நேந காரயேத்

(த்ரிஸ்தலீ ஸேது - பக் 9)

என்னும் ‘த்ரிஸ்தலீ ஸேது’ புஸ்தகத்தின் வசனப்படி, புண்ய க்ஷேத்ரங்களில் ஒருமுறை யாத்திரையை (அந்த க்ஷேத்ரத்தில் செய்ய வேண்டிய கிரியைகளை) முடித்துவிட்டு வந்த பிறகு, மறுபடியும் சுமார் பத்து மாதங்களுக்குப் பிறகு அங்கு செல்ல நேர்ந்தால், மறுபடியும் வபனம் (ஷேவ் செய்து கொள்ளுதல்), சாப்பிடாமல் உபவாஸம் இருத்தல், பிண்ட தானம், தர்ப்பணம் செய்தல் போன்ற தீர்த்தத்தில் (க்ஷேத்ரத்தில்) செய்ய வேண்டிய காரியங்களை மறுபடியும் செய்யத்தான் வேண்டும். ஆனால் ஒருவர் ஒரு முறை யாத்திரைக்குச் சென்று வந்தபிறகு, பத்து மாதங்களுக்குள்ளாக அவர் அதே ஊருக்கு செல்லும்படி நேர்ந்தால் மறுபடியும் அவற்றைச் செய்ய வேண்டியதில்லை.


துளசிச் செடிக்கு நீர் ஊற்றுவது, விளக்கு ஏற்றுவது போன்றவற்றை ஆண்கள் செய்வது தவறு என்கிறார்களே?

செடிகொடிகளுக்கு தினசரி ஜலம் விடுவது என்பது அவைகளுக்கு உயிரை அளிப்பது போன்றது. அதிலும் தெய்விகச் செடியான துளசியை ஜலம் விட்டு வளர்த்தல் என்பது செய்த பாவத்தை அகற்றும். இதை ஆண்-பெண் என அனைவரும் செய்யலாம். ஆனால் வீட்டில் சூரியன் உதிக்கும் காலை மற்றும் சூரியன் மறையும் மாலை நேரத்தில், வீட்டு வாசலிலும் தெய்வ சன்னிதியிலும் தீபத்தை ஏற்றுதல் என்னும் செயலை மட்டும், குடும்பத்திலுள்ள சுமங்கலிப் பெண்கள் செய்வதே சிறந்தது. வீட்டில் பெண்கள் (பெண் குழந்தைகள்) யாருமே இல்லாத சமயத்தில்தான் ஆண்கள் தீபத்தை ஏற்றலாம். மற்ற நேரங்களில் பெண்கள்தான் இந்தச் செயலைச் செய்ய வேண்டும். பெண்களுக்கு சாஸ்திரத்தால் வழங்கப்பட்ட தனிப்பட்ட உரிமை இது.


மகான்களின் அவதார நோக்கம் என்ன? அவர்கள் எப்படி அடையாளம் காணப்படுகிறார்கள்?

மகான்கள் என்பவர்கள், தமது முன் ஜன்ம வினையைத் தீர்ப்பதற்காக இந்த பூவுலகில் பிறக்கிறார்கள். அப்படி பிறக்கும் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் பற்றில்லாமல் மற்றவரின் மேன்மைக் கருதியே வாழ்வார்கள். மகான்கள் என்பவர்கள் யார்? அவரது அடையாளம் என்ன? என்று தாயான தேவ ஹூதி தனது மகனான கபில வாசுதேவரிடம் கேட்க, கபிலராகப் பிறந்த பகவான் தனது வாயால் மகான்களின் அடையாளத்தை ஸ்ரீபாகவத்தில் இவ்வாறு கூறுகிறார்.

திதிக்ஷவ: காருணிகா: ஸுஹ்ருத: ஸர்வ தேஹினாம்

அஜாத ஸத்ரவ: ஸாந்தா: ஸாதவ: ஸாது பூஷணா:

மய்யநந்யெந பாவேத பக்திம் குர்வந்தி யே த்ருடாம்

மத்க்ருதே த்யக்த கர்மாணஸ் த்யக்த ஸ்வஜன பாந்தவா:


பொறுமையுடனும் கருணையுடனும் கூடியவர்களாகவும் உலகில் வாழும் அனைவருக்கும் நண்பர்களாகவும் அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துபவராகவும் அமைதியுடன் இருப்பவராகவும் கடவுளிடம் பலனை எதிர்பாராமல் பக்தி செலுத்துபவராகவும் கடவுளுக்காக மக்களுக்காக தன்னுடைய அனைத்து செயல்களையும் துறந்தவராகவும் தனது உற்றார் உறவினர்களைக் கூட துறந்தவர்களாகவும் கடவுளைப் பற்றிய சிந்தனையோடும் இருப்பவர்களே சாதுக்கள், மகான்கள் எனப்படுகிறார்கள். மேற்கூறியவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தாலே அவர் மகான் ஆவதற்கு தகுதியானவர் என அறியலாம்.



Comments